அமுதமொழி – விளம்பி – ஆடி 2 (2018)

 

பாடல்

மூலம்

தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே

சொல் பிரிவு

தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்
(செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண
(தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர்
(நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

பதவுரை

பன்னிரு மாதமும், சைவர்களால் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படும்  பன்னிரு கதிர்களின் பெயர்களுடன் விளங்கும் வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகிய சூரியனின் நேத்திரத்தையும், பல்லையும் அழித்த ஈசனுக்கு உபதேசம் செய்த ஞான ஆச்சாரியனும், செந்தூர் பதியில் இருப்பவரும், ஆறு அக்ஷரங்கள் கொண்டு அதன் ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமானதும், வேதங்கள் பூஜித்ததும், சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான வேலாயுதம் இல்லை என்றால் தேவர்களின் சிறந்ததான அமராவதி நகரம் இல்லாமல் போயிருக்கும்;வஞ்சனையை உடைய அசுரர்கள் இறப்பைத் தவிர்த்திருந்து உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.

விளக்க உரை

  • வேலாயுதத்தின் பெருமை கூறும் பாடல்
  • வெவ்வேறு இடங்களில் குறிக்கப்படும் சூரியர்கள்
  1. தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரணியன், பகவான், விவச்சுவான், பூஷன், கவித்துரு, துவஷ்டன்.
  2. அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், தோஷா, விஷ்ணு, பூஷா.
  3. விசுவான், அரியமா, பூஷா, துவஷா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 1 (2018)

பாடல்

இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால்
இலயித்தவாறு உளதாக வேண்டும் — இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் அங்கு

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

பதவுரை

ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி,  குருடாக்கி, சஞ்சீதம், பிராரப்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவினைகளுக்கும், ஆணவம், மாயை மற்றும் கண்மங்களுக்கு உட்பட்டு உலகம் தோன்றி மறைவதாக தோன்றும். நிமித்த காரணமாக நின்று வினைகளைப் பற்றி, மாயா மலங்களை அனுபவித்து வினைகளையும் மலங்களையும் முற்றிலும் இறை அருளால் நசித்து தன்னில் உலகம் இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, மூவினைகளுக்கு உட்பட்டு, உலகமே ஒடுங்கி அணுவாகி நின்றுஅதன் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில் கால உணர்வின்றி உலகம் எப்பொழுதும் அழியாது பார்வையில் பட்டு நிற்கும்.

விளக்க உரை

  • உலகம் மற்றும் ஆன்மாக்கள் தோன்றி மறையும் இயல்புடையது என்றும் அது சிவனின் அருளினால் அவ்வாறான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும், அவனே அனைத்துக்கும் கர்த்தா என்னும் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்.
  • உலகம் மட்டுமே நிலை பொருள் எனும் நாத்திகவாதிகளின் கருத்தும், இருப்பது, இல்லாது எனும் நிலைகளைத் தாண்டி, இல்லாமலும் இருக்கலாம் என்றும்,  இல்லாத பொருள் தோன்றாது எனும் அநேகாந்தவாதத்தின் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன.
  • தன் அறிவு, அறியாமை, ஒளி, ஒருள் ஆகியவற்றை  தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, மாயை பற்றி ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். இந்த நிலையில் அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்றும் இத்தன்மையோன் உணர்வான். ஆகவே சங்கார காரணாகிய ஒருவனே, உலகம் தோன்றி மறையும் இயல்பானது எனும் ஆணவமலம் நீக்கி இவ்வுலகம் தோன்றுவதற்கும், மீளாவகை சென்று அடைவதற்கும் காரணமாக தனி முதல்வனாகவும், தற்பரனாகவும் இருப்பான் என்பதை விளக்கும்.

(சைவ சித்தாந்தம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், வினைபற்றியவன் உரைப்பதாலும் பொருள் குற்றம் ஏற்பட்டிருக்கலாம். குற்றம் பொருத்தருள வேண்டுகிறேன்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 32 (2018)

 

பாடல்

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

பாசம் என்பதாகி உயிர்களை அடிமை செய்யும் பொருள்களானதும் போகப் பொருள்கள் என்பதுமான தளை ஆகிய பாசமாகவும், உயிரானது, உறைவதற்கு உண்டான உடலினைப் பெறும் முன்பு அறிவு, இச்சை, செயல் என்பது எதுவும் இன்றி அறியாமையில் மூழ்கி, பதி போன்ற தோற்றமும் அழிவுமில்லாதது ஆகி பசு போன்றும் தோற்றம் கொண்டு உயர்ந்தவனாகவும், கடவுள் ஆகவும், அன்னியப் பொருளாகவும் ஆகி இருப்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் கூட்டுவித்து அதை பொருந்துமாறு செய்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் பற்றி அவற்றுக்கு எல்லாம் மேலானவனாக இருக்கும் பெரியோனும், ஒளிமயமாய் ஆனவனும் ஆகி சிறப்புகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவனாக இருக்கும் கணபதியின் பாதங்களை அடைக்கலம் அடைகின்றோம்.

விளக்க உரை

  • பதி, பசு மற்றும் பாசம் கொண்டு சைவ சித்தாந்தக் கொள்கைகள் விளக்கப்பெறுகின்றன. எனவே ஈசனும்,  கணபதியும் வேறு வேறு அல்ல என்பது விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 30 (2018)

பாடல்

மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
     வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
     சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
     உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
     கண்டாய் அம்மானே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

போற்றுதலுக்கு உரிய தலைவனே! எலும்புகளால் நெருக்கமாகவும், புலால் மிகுந்து அழுக்கும் ஊறி நிற்பதாயுள்ள சிறப்பில்லாத நடை வீடாகிய இந்த உடம்பு என்னை விடாது பற்றி வருதலால் வருந்தி எனை நலியத் துன்பமடைகின்றேன்; மனம் உடைந்து, நெகிழ்ந்து உருகி, உன்னருள் ஒளியைக் கண்டு நோக்கி, உனது அழகிய மலர் போன்ற திருவடியை  பேரின்பம் பெறுவதன் பொருட்டு அடைந்து நிற்க விரும்பினேன்.

விளக்க உரை

  • மனம் இளகி உருகுதலே இறைவன் திருவடியை அடைதற்கு உரிய வழி என்பது பற்றிய பாடல்
  • வீறு இலி – பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்).
  • நடைக் கூடம் – இயங்குதலை உடைய மாளிகை;  வீடு, பெயர்ந்து செல்லாது; ஆனால் இவ்வுடம்பாகிய வீடு, செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து வருவதாதல் இப் பெயர்
  • சோத்தம் – வணக்கம்.
  • உள்ளம் உருகுதல், ஒளி நோக்குதல், – அருளைப் பெறுதற்கு உரிய வழி,
  • பாதம் அடைதல் – சாதனம்
  • பேரின்பம் பெறுதல் – பயன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 28 (2018)

 

பாடல்

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே

 

சிவவாக்கியர்

 

 

 

பதவுரை

நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய  சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும்,  ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக  இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

விளக்க உரை

  • ‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய  சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 27 (2018)

பாடல்

அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட
     மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு
     வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத்
     தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக்
     குறிக்கொண்மினே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய  அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 26 (2018)

பாடல்

மூலம்

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே

பதப் பிரிப்புடன்

உருவமும் உயிரும் ஆகி,
     ஓதிய உலகுக்கு எல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
     நின்றஎம் பெருமான், மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
     மலைஉளாய், அண்டர் கோவே,
மருவிநின் பாதம் அல்லால்
     மற்றொரு மாடு இலேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை  என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.

விளக்க உரை

  • ‘மலையுளாய்’  என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
  • ‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள்  பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 25 (2018)

பாடல்

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

அனாதி காலம் தொட்டு கர்த்தாவுக்கு ஆளாகி  திருவருளுடனே கூடிப் பின்பு அன்பு வழியுடன் பக்தி கொண்டு சென்றவர்களில் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்லக்கூடிய  உவமை  இதுவரையும் பொருந்தினதில்லை; ஆகையால் இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன் எனில் அந்தச் சிவானுபவம் போலவே இருந்தது.

விளக்க உரை

  • சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாது
  • சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும்.  அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 24 (2018)

பாடல்

வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இமயமலையில் அவதரித்த மலையரசனின் மகளான உமாதேவிக்கு கயிலைமலையைப் பெயர்த்து  எடுத்து ஓர் அச்சத்தை உண்டாக்கிய, புத்தி இல்லாத, வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை இமய மலையின்கீழ் நொறுங்கும்படி தன் கால் பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறு உண்ர்ந்து இறைஞ்ச, ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமாவதும்சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்கதும் ஆனது திருச்சண்பைநகர் ஆகும்.

விளக்க உரை

  • அக்காலத்துத் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று வந்ததை இப்பதிகத்தால் அறியலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 23 (2018)

பாடல்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்  – திருமூலர்

பதவுரை

புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும்  அதை அறியாமல் இருப்பதோடு  விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.

விளக்க உரை

  • இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
  • ‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 20 (2018)

பாடல்

அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

குடவாயிலில் எனும் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவனானவன், அலைகள் ஏற்படுத்தும் கங்கையை அணிந்தவன்; அனலை ஏந்தியவன்; எண்குணத்துள் ஒன்றான மும்மலமில்லாதவன்; கபாலம் எனும் பிரமகபாலத்தில் யாசகம் பெறுபவன்; யகங்கள் கடந்தவன்; நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய திரிசூலத்தையும்,  மழுவாயுதம் முதலியவற்றையும் ஏந்தியவன்.

விளக்க உரை

  • சதுரன் – ‘மூவர்க்கும் முதல்வன்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன.  திறமையுடையவன்; நகரவாசி; பேராசைக்காரன் போன்ற பொருள்களும் இருக்கின்றன. பொருத்தமின்மை காரணமாக இவைகள் விலக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 19 (2018)

பாடல்

நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இந்த உலகில் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ்ந்து வாழும் காலத்தில் சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொல்லப்பட்டு அழிவதன் முன்னமே, குளிர்ந்த நீர் நிலைகளையும், தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளையும் உடையதான  அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி  வலிமை உடையவர்களாகி  யம பயத்திலிருந்து விடுபட்டோம்.

விளக்க உரை

  • வன்மை – நமன் தமரால் கொல்லப்பட்டு ஒழிவதன் முந்திச் சிவனடிமையாகி நின்ற திறம் குறித்தது
  • நாள் பட்டிருத்தல் – நெடுங்காலம் வாழ்தல். இன்பம் எய்தல்
  • உறுதல் – சிற்றின்பம் அடைய விரும்புதல்
  • தமர் – எமதூதர்
  • கோட்படுதல் – கொள்ளப்படுதல்
  • முந்துறல் – முந்திக் கொள்ளல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 18 (2018)

பாடல்

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் சக்திகளை இறைவன், தன் ஆற்றலைக் கொண்டு தூண்டி அவை செயல்படுமாறு செய்து உயிர்களின் பந்தம் மெலிவடையச் செய்யும் மறைத்தல் தொழிலாகிய திரோதான சக்தி கொண்டு ஆன்மாவில் பதியும் படி செய்யும் திருப்பெருந்துறை இறைவன், வையத்து இருந்து தன் வேலை மடுத்து என் மனதில் நுழைந்து ஊடுறுவச் செய்தான். இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைத்தொழுது உய்யும் வகையின் உயிர்ப்பு நிலையையும் அறிந்திலேன்.

விளக்க உரை

  • ஞானத்தை அருளியதை பழிப்பது போலப் புகழ்ந்தது.
  • உறை – தற்போதம் எழுதல்.
  • வேல் –  திரோ தான சத்தி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)

பாடல்

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய  பார்வதி  நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து  அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.

விளக்க உரை

 

  • தென்னவன் –  இராவணன்
  • சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
  • மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
  • நெரிய – நொறுங்க
  • கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை தரும்
  • கீதம் – சாமகானம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)

பாடல்

 

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்

ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்

நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்

பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 30 (2018)

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு  சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

விளக்க உரை

  • எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
  • மட்டு – தேன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 29 (2018)

பாடல்

மூலம்

திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

பதப்பிரிப்பு

திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி
(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து
(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து
(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.

அருணகிரிநாதர்

பதவுரை

‘திதத்த ததித்த’  என்னும் தாள  வாத்திய இசைகளை தன்னுடைய திரு நடனத்தின் மூலம் நிலைபடுத்துமாறு  செய்கின்ற  உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறைகளை முழுவதும் முதலில் அறிந்ததால் கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் கொண்ட படம் விளங்குமாறு இருக்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகில் இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டும், தயிர், மிகவும் இனிப்பாக இருப்பதாக  சொல்லி அதை மிகவும் வாங்கி  உண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும்   போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப்பொருளே, பெரும் தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானையின் தாசனே, பல தீமைகள் நிறைந்ததும் தோல், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் ஆன எலும்பை மூடி இருக்கும் தோல் பை ஆகிய  இந்த உடம்பு, நெருப்பினால் தகிக்கப்படுவதாகிய எரியுட்டப்படும் அந்த அந்திம நாளில், உன்னை இத்தனை நாட்களாக துதித்து வந்த என்னுடைய சித்தத்தை உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

விளக்க உரை

  • புலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
  • இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்ற போது  இனி போட்டி வைத்து எவர் காதையும் அறுக்கலாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்ததால் அதன் பின் மகாபாரதத்தைத் தமிழில் வில்லிபாரதமாக எழுதினார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 28 (2018)

பாடல்

ஆக்கி ஒருபொருளா ஆதாரத் தப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் – பார்க்கில்
இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத்(து)
அவனாகை ஆதார மாம்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

பதவுரை

தன்னிலே தன்னை விளங்குமாறு செய்து விசாரித்தினால், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும் பிரபஞ்சத்திலே உண்டான விஷயங்களை விசாரித்து அறிந்து இவையெல்லாம் பலப்பல மாயைகள் தான் என அறிந்து அவைகளை அன்னியமாக்கி அணுவிலும் அணுவானவற்றைக் காணும் போது, நம்முடைய ஞானத்தினாலே உயிர்வாழ்கிறோம் எனும் தன்மை கெட திருவருளோடு ஒன்றாவன் எனும் தன்மை இதற்கு ஆதாரமாக விளங்கும்.

விளக்க உரை

  • ஆதார யோகத்துக்கு உபாயம் சொன்னது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 26 (2018)

பாடல்

பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்

பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது

தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்

மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை

 

பெரியபுராணம் – சேக்கிழார்

 

பதவுரை

பொன்னின் மேல் வெண்மையான திருநீற்றை அணிந்து போல் என்று அருளாளர்களால் போற்றிக் கூறப்படுவதும், வெகு நீண்ட தொலைவிற்கு பனி சூழ்ந்து இமய மலையின் பகுதியில் உள்ளதும், அன்பர்கள் விடுத்து பிறர் எவராலும் அறிவதற்கு அரிய சிவபெருமான் எந்நாளும் நிலைபெற்று வீற்றிருந்து அருளும் பெருமை பொருந்தியதுமானது திருக்கயிலாய மாமலையாகும்.

Loading

சமூக ஊடகங்கள்