அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 30 (2018)

பாடல்

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், எங்கும் வியாபித்து, மாபெரும் சக்தி ஆனவள்; எல்லா வகையிலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள்; அதோடுமட்டுமல்லாமல் அதில் எல்லாவற்றிலும் பொருந்தி அதன் மெய் உணர்வு வடிவகமாக இருப்பவள்; திரிவுபடும் ஊழி எனப்படும் மிக நீண்ட காலத்தில் உயிர்களிடத்தில் உடனிருந்து நின்று அதன் புண்ணியப் பலன்களை அருள்பவள்.

விளக்க உரை

  • பராசத்தி – எங்கும் வியாபித்துள்ள சத்தி.
  • தராசத்தி – ஆதாரசத்தி, தாங்கும் ஆற்றல்
  • உராசத்தி – பொருந்தும் சத்தி.
  • புராசத்தி – திரிபுரை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018)

பாடல்

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன்  உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக!

விளக்க உரை

  • குறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.
  • உயிர்களுக்கு உடல்  ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 28 (2018)

பாடல்

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அக அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை ஆனந்த வடிவமாக இருப்பவள் என்றும், (அருவமும், உருவமும் ஆகி) அருவுருவம் கொண்ட வடிவினள் என்றும், உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் அனைத்தும் அவள் விருப்பத்தின் படி நிகழ்கிறது என்றும், அறிவு உருவாகிய பரமனாகிய சிவபெருமானும் அன்னையிடம் எழுந்தருளி இருப்பவர் என்றும் கூறப்பெறும்.

விளக்க உரை

  • அன்னையின் மேலும் சில பெருமைகளைக் கூறும் பாடல்
  • *நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையில் நிற்பவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாமடி மற்றும் நான்காமடிகளில் வரும் ‘அறிவார்’ என்பதை, ‘அறிவு ஆர்’ எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` எனக்கொண்டு, `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் சில இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன் வழி பற்றி  ‘ஆர்ந்த அறிவு கொண்டவனும் அவள் வழி தொழில் நடத்துகிறான் எனவும் விளக்கம் பெறும். ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 27 (2018)

பாடல்

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அறியாதவர்கள் தேவர்கள் ஆகமாட்டார்கள்; அவள் இன்றி செய்யும் மிகப் பெரியதும் சிறப்புடையதுமான தவம் என்பது எதுவும் இல்லை; அவள் இல்லாமல் (சைவத்தினை முன்வைத்து) ஐந்தொழில்களையும் சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்கள் எதுவும் இல்லை. அவள் அருள் இல்லாமல் கைகூடும்  திருவடிப் பேறு என்பதும் இல்லை.

விளக்க உரை

  • திரிபுரையின்  பெருமையை கூறும் பாடல்.
  • ஐவர் – பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும்,உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் ஆற்றுவதாகக் கூறப்படும் கருத்துக்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 26 (2018)

பாடல்

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை தூயதும், அழகியதும், திண்ணியதும் ஆன கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றமாகவே விளங்குபவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள்; எல்லாச் சத்திகளினும் பெரியதான மேலான சத்தியாக விளங்குபவள்; அவ்வாறு இருப்பினும் அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்மை உடையவள்; அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளும் ஆவாள்.

விளக்க உரை

  • சுத்த, அம், பாரத்தனம் – ஞானம் நிறைந்து நிற்றலைக் குறித்தது
  • வத்து – பொருள்; மெய்ப்பொருள். (வத்துவம்,  வாஸ்துவம்)
  • திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியக்கூடிய  பெருமைகள் குறித்து கூறப்பட்டப் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 25 (2018)

பாடல்

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எப்பொழுதும் அழியாதவளாகிய திரிபுரை, கால எல்லையைக் கடந்த பழமை உடையவள்; மாயை வடிவம் கொண்டு உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற உருத்திராட்ச மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.

விளக்க உரை

  • திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 24 (2018)

பாடல்

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

குண்டலம் அணிந்த காதுகளை உடையவள்; கொலை செய்கின்ற வில் போன்ற புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறையை மாலையாக அணிந்து ‘சண்டிகை’ என்னும் பெயர் உடையவள்; இவள் நான்கு திசை கொண்ட உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருளுதல் பொருட்டு தாங்கி நின்றாள்.

விளக்க உரை

  • தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்றுகிறாள் எனும் பாடல்
  • திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 23 (2018)

பாடல்

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திருவடிகளில் பாதகிண்கிணி ஆகிய சிலம்பும், இடையில் சிவந்த பட்டுடையும், மார்பில் கச்சையும், நான்கு கரங்களிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம் ஆகியவைகளும், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடியும், காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் கொண்ட அடையாளங்களுடன் திரிபுரை இருப்பாள்.

விளக்க உரை

  • நூபுரம் – சிலம்பு, பாதகிண்கிணி
  • ‘இராஜேஸ்வரி கோலம்’ வர்ணிக்கும் பாடல். திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்டப் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 20 (2018)

 

பாடல்

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்-  திருமூலர்

பதவுரை

தோன்றுவதும் பின் அழிகின்றதுமான வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல் உலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும், அந்த உலகங்களைப் பற்றி  நின்று ‘புருடன், உருத்திரன், சிவன்’ என உயிர்கள் அடையும் வேறுபாடுகளையும், தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான அமைப்பு அனாதியே அமைந்த முதல்வன் சிவபெருமானே செய்வதே ஆகும்.

விளக்க உரை

  • ‘தான் புருடனாய் நிற்றல்’ முதலிய நிலைமைகளும் சிவனால் ஆவன்` என்பதை கூறும் பாடல்
  • ‘புருடன்` – உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும் தருணத்தில் (புருடலோகம்)
  • `உருத்திரன்’ – ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்கும் தருணத்தில் (உருத்திர லோகம்)
  • ‘சிவன்’ –  வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் தருணத்தில்(சிவலோகம்) [( வகைகள் –  அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர்)
  • கரி – சான்று
  • பொய் கரி – பொய்க்கும் கரி, மெய்கரி – மெய்க்கும் கரி, `பொய், மெய்` என்பன நிலையாமை, நிலைத்தல் இவற்றைக் குறித்தன.
  • விசேடம் – சிறப்பியல்பு. சிவனது சிறப்பியல்பு அவனது சத்தி. இங்கு அமைப்பாவது செய்வோனும், செய்யப்படுவனவுமாய் நின்ற இயல்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 14 (2018)

பாடல்

நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி
என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று
பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமான் இயல்பாகவே மலங்கள் அற்றவனாகிய தூயமேனியன்; இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆனதால் அழுக்கு இல்லாதவன்; என்றும் பிறப்பு இல்லாதவன்; திருவருளால் என் உள்ளத்தே வந்து வெளிப்பட்டு  ‘இவன் என் அடியான்’ என்று அறிவித்து அருளினன்; .அனைவராலும் புகழத்தக்க பொன்போன்ற திருமேனியையுடைய உயர்ந்தவனாகவும் வானவனாகவும் ஆன அவன் அடியானென்று என்று கொண்டது மட்டுமல்லாமல் ‘என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக’ என்று மல பாகம் நீக்கியும் அருளினன்.

விளக்க உரை

  • நீக்கவல்லான் – ஆணவத்தை ஒழிக்கவல்லான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 9 (2018)

பாடல்

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மெய் தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தலை உடைய மெய் உணர்ந்த மேலோர் அருளால் அறிவது நீர் என்றும் திருவருள் என்றும் குறிக்கப்பெறும் அப்புவும், தீ எனவும்  சிவபெருமான் எனவும் குறிக்கப் பெறும் அனலும்; அவ்வாறு அதன் பொருள் நுட்பம் உணர்பவர்கள் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்து உணர்வார்கள்; இவ்வாறு அறிவது எல்லாம் ஒருங்கே உணரும் தன்மையும், எண் குணமும், முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானாலே வாய்க்கப் பெறுகிறது. அஃதாவது அவன் உடனிருந்து இயங்கி  அவன் இடம் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியாது; அவனையின்றி அறிவு வசப்பட்ட  ஆருயிர் அறிந்ததென்பதை எவரும் அறியார்.

விளக்க உரை

  • மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனை இல்லாமல் உண்டாகாது எனும் பொருள் உடைக்கும் பாடல்
  • அருள் ஆகிய சக்தியும் சிவமும் கலந்து அருளுபவன் எனும் நிலையில் நின்று,  அனைத்து உலகினையும் மற்றும் அவற்றின் தொழில் செய்வதைக்  குறிக்கும் குறிப்பாகும்.
  • தாமாக அறியும் பொருள் அனைத்தும் காட்சிப் பொருள்களே. அவை மட்டும் அல்லாமல்  கருத்துப் பொருள்களும் உள்ளன.  அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிய இயலாது.
  • ‘உலகாயதர்’ என்றும், ‘சாருவாகர்’ என்றும் ‘பூத வாதிகள்’ என்றும் கூறுபவர்களின் கருத்தாகிய ‘காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` எனும் விளக்கம் சைவ சித்தாந்த கருத்துப்படி மறுக்கப்பட்டுள்ளது
  • முதலில் வரும் ‘அறிவான்’ என்பது `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் தரும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 8 (2018)

பாடல்

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அருளுதலைத்  தருகின்ற திரிபுரையானவள்,  சத்த பிராமானமாகவும்  சிவனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றானதும் ஆன நாதமாகவும், அவ்வாறான நாதத்தின் முடிவாகவும், பலவாய் விரிவதான சிவத்தோடு ஒன்றிய சக்தி ஆகிய பரவிந்து ஆகி பெரிய அண்டம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள்; ஆக்கல் தொழிலோடு அருளுதலையும் செய்வதால் அவள் அனைவர்க்கும் மேலானவள்; அவளே சிவசத்தி வடிவமான பரை, அவளே அபிராமி, அவளே வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட, புறக்கண்களுக்கு புலப்படாதவளும் அறியப்படாதவளும் ஆன அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குபவள் ஆவாள்.

விளக்க உரை

  • சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டப் பாடல்
  • புல்குதல் – பதிதல்
  • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள்ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை
  • அகோசரம் – அறியப்படாமை, புலன்களுக்குப்புலப்படாமை, புலப்படாதது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 24 (2018)

பாடல்

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பஞ்சகவ்வியம் எனப்படும் பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானேஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலைப் பெற்று, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  ஆகிய வாக்குகளைக் கொண்டுஇவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.

விளக்க உரை

  • அஞ்சு – ஐம்பெரும் பூதம். ஸ்தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 19 (2018)

பாடல்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

பத்தாம் திருமுறை -திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

நல்ல அறிவும், சிறந்த இல்லற பண்பும், மக்கட்பேறும் உடைய ஒரு தாயானவள் தன் காதல் கணவனுடன் பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று  கேட்டால் அந்த தாயால் அதை எப்படி சொல்ல விளக்க முடியாதோ அது போல புறத்தில் பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும்; ஆனால் அறிவுக் கண்ணால் மெய் அறிவு கொண்டு காணப்படும் அம்மெய்ப்பொருளை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காண இயலும்.அத்தகைய பொய்யில்லாத  மெய்யான இன்பத்தினைத் தமக்குத் தாமே தம்மில் உணர்தல் அன்றி சொல்லி உணரச் செய்வது என்பது எவர்க்கும் ஒல்லாது.

விளக்க உரை

  • மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண்,  சிவத்தினை உணரத் துணை செய்யும் போது  திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருக்கருவூர்ஆனிலை

தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள்– திருக்கருவூர்ஆனிலை

  • மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
  • இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
  • காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
  • தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
  • எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
  • புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம்
  • சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
  • கருங்கல்லால் ஆன கொடிமரம்
  • திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
தலம் திருக்கருவூர்ஆனிலை
பிற பெயர்கள் கருவூர் , திருக்கருவூர், கற்பபுரி
இறைவன் கல்யாணபசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்,பசுபதி, ஆனிலையப்பர்
இறைவி அலங்காரவல்லி,கிருபாநாயகி , சௌந்தரநாயகி
தல விருட்சம் வில்வமரம் , சீந்தில் கொடி,  ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம் பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள் வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், கருவூர்த்தேவர் ( திருவிசைப்பா ), அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருச்சியில்இருந்துசுமார் 75 கிமீ தொலைவு; ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவு
இதரகுறிப்புகள் தேவாரத்தலங்களில் 211 வதுதலம்
கொங்குநாட்டுத்தலங்களில் 4 வதுதலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 3

பாடல்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே

பொருள்

ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.

விளக்க உரை

கண்ணு ளார் – கூத்து நிகழ்த்துபவர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 8

பாடல்

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே

பொருள்

கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன்,  பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.

விளக்க உரை

கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 11 (2018)

பாடல்

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும்  கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ஒற்றியூர்என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனிஎன்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல   அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் கண்ணிலியே நீ என்ன அறிவாய்போஎன்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்இது முறையோ!

விளக்க உரை

  • சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
  • சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
  • நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 10 (2018)

பாடல்

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும்உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு  தலைமையாக இருக்கும்  இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக  நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.

விளக்க உரை

  • மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
  • இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)

பாடல்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமை காக்கும் பிரான்

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

பதவுரை

ஐசுவரியம் உயைவன் எனவும் உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவனும், முழு முதல் தலைவனும் ஆன ஈசன் அல்லாது பிற தெய்வம் இல்லை எனத் துணிந்து, தம்மையும் தான் அல்லாத ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ணிக் கொள்வதற்கு வெட்கப்பட்டு, அவனையே மனத்தில் வைத்திருந்து, மறவாமல் அவன் புகழ் பேசுபவர்களை, ஒருபோதும் பிறவித் தளையில் சிக்கவிடாமல் காப்பவர் நம் இறைவன்.

விளக்க உரை

  • சிவனை நினைந்து, அவனை மறவாது நினைவாரை அவன் பிறவி வராமல் காப்பான்` என்பதை விளக்கும் பாடல்.
  • கூசுதல் – தம்மையும் ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ண நாணுதல்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்