அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – இருந்தவம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இருந்தவம்

பொருள்

  • பெரியதவம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

என்றும் எப்பொழுதும்  ஈசன் என்பவர்களாக இல்லாமல், நன்கு பொறுமை உடையவர்களாக இருப்பினும், உண்ணாவிரதம் இருப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், விரும்பிச் சென்று நீரில் நீராடித் திரிந்தாலும் ஈசனை விலக்கிய மற்றவர்களுக்கு இவற்றால் பயன் இல்லை.

விளக்க உரை

  • அகவழிபாடு சிறப்பினை விளக்கும் மற்றொரு பாடல்.
  • நோற்றல் – பொறுத்தல், தவம் செய்தல் எனும் பொருள் விளக்கம் இருப்பினும் இரண்டாவது வரியில் ‘குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்’ எனும் வரிகளால் பொறுமை உடையவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தில் செய்யப்படுகின்றன.
மாயை ஆகிய சடப்பொருளிடத்தில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நவை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நவை

பொருள்

  • குற்றம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

சீர் பிரிப்புடன்

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.

பதினெண் கீழ்க்கணக்கு – இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

கட்டளை இட்டு சொன்ன வேலைகளை அதில் மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். எல்லா காலங்களிலும் குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினை சொந்தமாக வைத்து விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் அனைத்து திசையிலும் நட்புக்கொள்ளுதல் இனிது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உயிர்களிடத்து செய்யப்படும் தொழில்கள் எவை?
மறைத்தல், அருளல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – போந்த

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  போந்த

பொருள்

  • தகுந்த
  • பழகின
  • தீர்மானமான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

வேதங்களைப் பின்பற்றி நடப்பவராகிய அந்தணரும், விண்ணில் வாழும் தேவரும், மனிதர்களும் வணங்கி தொழுது நிற்க, நல்ல ஒளி உருவமாய், சுருண்ட கூந்தலையுடைய உமாதேவியோடும், பூக்களில் உறையும் வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இந்த வழியே  என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன்; இஃதே என்னே ஏழ்மை!

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தே செய்யப்படுகின்றன?
மாயை ஆகிய சடப் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அளவை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அளவை

பொருள்

  • அளவு
  • தத்துவம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்
அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு)
அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்
அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே

திருநெறி 2 – சிவஞான சித்தியார்  – சுபக்கம் – பாயிரம்

கருத்து உரை

பிரமாணமாவது காட்சிமுதல் அறுவகைப்படும் என்பாரும் , அவ்வாறான அறுவகைப் பிரமாணங்கட்கு மேலும் எஞ்சுவதைக் கொள்ளுதல் ஆகிய பிரமாணமாகிய பாரிசேடப்பிரமாணம் நான்கு என்பாரும், ஆக மொத்தம் பத்துக்கு எனவும் அதற்கு மேலும் பிரமாணங்கள்  உள்ளன என்பாரும் உளர். அவையெல்லாம் பிரத்தியட்சம்,அநுமானம், உரைச்சான்று என  மூன்றினுள் அடங்குவனவன்றி வேறானது அல்ல.

விளக்க உரை

  • சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்
  • பிரமாணம் – அறுவகை – 1.புலனுணர்வு – (பிரத்தியட்சம்), 2. உய்த்துணர்வு – (அநுமானம்), 3.உரைச்சான்று – (சப்தம் அல்லது ஆப்தவாக்கியம்), 4.ஒப்புநோக்கு – (உபமானம்),  5. சூழ்நிலைசார் உய்த்துணர்வு – (அர்த்தாபத்தி), 6.எதிர்மறைச் சான்று – (அனுபலப்தி)
  • பாரிசேடப் பிரமாணம்- ஒழிபளவை, உ.ம் மூவரில் இருவர் திருடவில்லை எனும் பொழுது மற்றொருவன் திருடினான் என்பது பொருள். அவ்வண்ணமே பதி பசு பாசம் என்னும் மூன்றில் பசுவிற்கும் பாசத்திற்கும் வினைப் பயனைக் கூட்ட முடியாது என்று விலக்கவே, பதிக்குக் கூட்ட முடியும் என்பதால் பாரிசேடமாயிற்று

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருளல் தொழில் என்பது என்ன?
உயிர்களிடத்தில் அவற்றின் மலப்பற்றை போக்கி தனது பேரின்பத்தை நுகரச் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பேதித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பேதித்தல்

பொருள்

  • மாறுபடுதல்
  • பேதியாதல்
  • கெடுதல்
  • குழம்புதல்
  • மனம் மாறுபடுதல்
  • பகையாதல்
  • பிரித்தல்
  • வேற்றுமைப்படுத்தல்
  • மாற்றுதல்
  • வெட்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற மூடர்களோடு ஒன்றாக பொருந்தி  இருந்தேன். அவரை அடைந்த பின், என்னைக் அந்தக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அறியாமையை நீக்கிச் சிவத்தை உணருமாறு ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீண்டும் அந்தக் கூட்டத்திற்கு செல்லாதவாறு இருக்கும் உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

விளக்க உரை

  • குருவருளில் உறைத்து நிற்பதாலே கருணை உண்டாகும் என்பது பற்றிய பாடல்
  • அறிவித்தல் – அறியாமை புகாதவாறு காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவன் ஆயினேன்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மறைத்தல் தொழில் என்பது என்ன?
உலகத்தை உயிர்கள் நோக்கி இருக்க செய்து தன்னை வெளிப்படுத்தாது தன்னை மறைத்து நிற்கும் தொழில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலாமர்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  குலாமர்

பொருள்

  • பணத்திற்கு அடிமையானவர்கள் – உலோபிகள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

பட்டினத்தார்

கருத்து உரை

கச்சி ஏகப்பனே!  செல்வமானது, பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இந்தப் பூவுலகில் பிறந்து மண்ணில் இறக்கும் போது கொண்டு போவதில்லைலை. மனித வாழ்வில் இடையில் செல்வம் எனக் குறிக்கப்படும் இது சிவன் தந்தது என பிறருக்கு கொடுக்க அறியாது இறக்கும் உலோபிகளுக்கு என்ன சொல்வேன்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அழித்தல் தொழில் என்பது என்ன?
தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சழக்கு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சழக்கு

பொருள்

  • குற்றம்
  • தீமை
  • பயனின்மை
  • தளர்ச்சி
  • பொய்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்து மிகப் பெரிய குற்றம் இழைத்தான். அவனின் இந்த செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நல்ல மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்ட.  ` நம்மிடத்தில் நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்` என்றும், இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மை செய்யவேண்டும் என்றும்  அந்த நல்ல மனம் கொண்ட அரக்கர்களை விருப்பத்துடன்  நோக்கி, இராமபிரான் தனது அம்புகளால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • இந்த தலத்துப் பதிகங்கள் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுவதால் இதிலும் அவ்வாறே கொள்ளப்பட்டது .
  • இராமன் வாயிலாக அவனுக்கு உயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்து அருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு இது சான்று.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காத்தல் என்பது என்ன?
தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறச் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேணி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேணி

பொருள்

  • ஏணி
  • விஞ்சயர் உலகம்
  • வித்தியாதரர் உலகு
  • குழு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னங் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

தெய்வீகமாகிய யானை முகம் கொண்டவ வினாயகர் புகழ்ந்து பேசிய தம்பியே, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில் வெள்ளி செம்பு தங்கமான  மதிலை உடைய திரிபுரத்தை ஜெயித்த ஈசனின் மைந்தனே, தில்லை நடேசனராகிய சிவனின் குமாரனே, தெய்வயானை மணாளனே, செல்வமுடையார் அது நிலையாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு தானதர்மங்களைச் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல் என்பது என்ன?
உயிருக்கு தனு, புவன, போகங்களை உண்டாக்கும் தொழில்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அடல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அடல்

பொருள்

  • ஒளிவு
  • மறைவு
  • களவு
  • கபடம்
  • தீய எண்ணம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

மயிலாப்பூரில்,  மாசிமகநாளில், கடலாடுதலைக்  கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருப்பவனும், வலிமை பொருந்திய விடையின் மேல் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்வு குறித்தப் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கரவு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கரவு

பொருள்

  • ஒளிவு
  • மறைவு
  • களவு
  • கபடம்
  • தீய எண்ணம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

நெஞ்சில் கபடம், தீய எண்ணம் ஆகியவை இல்லாமல், மணம் மிக்கதும், சிறந்த மலர்கள் உடையதுமான பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலையில் மாலை பொருந்திய செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். இது  வள்ளல் தன்மை உடையவனாகிய அவன் உகந்தருளும் திருத்தலமும் ஆகும்.

விளக்க உரை

  • மயிலாடுதுறைப் பெருமான் அடியார்களுக்கு வள்ளலாக அருள் வழங்குகிறான் என்பது குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நுந்துதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நுந்துதல்

பொருள்

  • தள்ளுதல்
  • தூண்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமை பொருந்தியதும், இறைவன் சடையில் தங்குதலால், ‘சிறைநீர்’ எனப்படும் தேவ கங்கை எனும்  அந்நீரில், பிறையாகிய தோணி சேர்வதற்கு இடமாகிய கொன்றை மாலையை உடையவனே! (உன்னோடு) தொடர்புற்று வாழும் பெருமை அடைந்து, பழிப்பற்ற உன் திருவடியின் பழமையான தொண்டினை அடைந்து, அஃது என்னிடத்தினின்றும் தவறிவிட, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத்து  இருந்த என்னை விட்டுவிடுவாயோ?

விளக்க உரை

  • இறைவன் வைதாரையும் வாழ வைப்பான் என்பது கூறுவதற்காக இயற்றப்பட்ட பாடல்
  • பழந்தொழும்பெய்தி விழ –  பழமையான தொண்டினை அடைந்தும் வினையின் காரணமாக  இழந்தேன்;
  • ‘பழித்து விழித்திருந்தேனை – அதனை இழந்த துன்பத்தால் வருந்தி வைதேன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சென்னி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சென்னி

பொருள்

  • தலை
  • உச்சி
  • சிறப்பு
  • சோழ மன்னனின் பெயர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

வாழ்த்தி பாக்களாகப்  பாட வாயும், பெருமைகளை நினைக்க ஒட்டாமல் செய்யும் அறிவற்ற நெஞ்சமும், வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை, வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித் துதிக்காமல், வினை உடையவனாகிய யான் நெடுங்காலம் வீழ்ந்து இருந்தது  என்னே?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஏற்றினை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  ஏற்றினை

பொருள்

  • இடப வாகனத்தை உடையன்
  • ஏறச் செய்தாய்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

இடப வாகனத்தை உடையனாகிய நீ, எண் மூர்த்திகளின் தத்துவங்களாகிய எட்டு தத்துவத்தையும் அர்த்த நாரீசுவரராகிய இரண்டு தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத என்னை, பாச கட்டுக்களைக்  களைந்து, என்னை அடிமையாக ஆட்கொண்டாய். அது மட்டுமல்லாமல் காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீறு பூசிய உன் மெய் அடியார்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.

விளக்க உரை

  • இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், சிறுமையுடைதாக இருந்தாலும் யிருந்தும் பெருமை பெறும் என்பதற்கான பாடல்
  • எட்டினோடிரண்டும் அறியேனையே –  எட்டும் இரண்டும்  – எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும்  விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும்  –  பத்து –  அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )
  • பட்டி மன்றம் –  வாதசபை  –  அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்’ என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொழிதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொழிதல்

பொருள்

  • சொரிதல்
  • ஈதல்
  • மிகச் செலுத்துதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்அடைக்கலமே.

சொல் பிரிவு

பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

திருமுறை 8 – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

இறைவனே! (வினை பற்றி) பெரும் துன்பமாகிய வெள்ளத்தில் இழிவான அன்பர்கள்  உன் திருவடி துணையைப் பற்றிக் கொண்டு வானில் வாழும் பெரும் பதவி அடைந்தார்கள்; அடியேன்  துன்பமாகிய கடலில் சுழியில் அகப்பட்டு, மாதராகிய அலை மோத, காமமாகிய சுறாமீன் கவரும்படி அழிய நின்றேன். அடியேன் உன் அடைக்கலமே!

விளக்க உரை

  • இறைவன் வினைபற்றி நின்ற பிறவிக் கடலுக்குத் தோணியாய் இருக்கிறான் என்பது விளக்கும் பாடல்
  • துன்ப வெள்ளம்,  பிறவிப் பெருங்கடல் – பிறவி; புயல் –  வினை; மேகம் பற்றி மழை வருதல் போல் வினைபற்றி தொடரும் பிறவிகள்; துன்பத்தைச் சொரிகின்ற மேகத்தின் மூலம் உண்டாகும் வெள்ளம் என்றும் துன்ப வெள்ளமே` என்பது மறைபொருள்
  • இழிகின்ற அன்பர்கள் – என்னோடு ஒன்றாக இருந்த அடியார்கள் கரை ஏறிவிட்டார்கள்; நான் இன்னும் கரை ஏறவில்லை எனும் பொருள் பற்றியது.
  • உடல் தோலின் சுருக்கம் கொண்டது பற்றி மாதரும், அலையும். (சில இடங்களில் அலைதலை உடைதல் பற்றி மாதரும், அலையும் என்று விளக்கப்பட்டிருக்கிறது)
  • சுறாவின் வாய்ப்பட்டோர் திரும்ப முடியாதது போல, காமத்தின் வசப்பட்டோரும் திரும்ப முடியாது

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொருப்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொருப்பு

பொருள்

  • மலை
  • பக்கமலை
  • கொல்லி மலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இமயப் பொருப்பில் விளையாடும்
   இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
   ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
   உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற் காடேந்தும்இள
   வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெரு
   வாழ்வே வருக வருகவே

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கருத்து உரை

இமய மலையில் விளையாடும் பெண் யானையைப் போன்றவளும், உலகத்தைக் கடந்த ஒப்பற்றவனாகிய இறைவனின் திரு உள்ளத்தில் எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம் போன்றவளும்,  மதுவை வாயாகிய கரத்தால் உண்பவை ஆகிய வண்டுகள் தேனைக் குடித்துக் கூந்தலில் துயில்  கொள்ளுவதைப் போன்றதுமான கூந்தலாகிய காட்டைத் தாங்கி நிற்கும் வஞ்சிக் கொடி போன்றவளும், மலயத்துவசன் பெற்றெடுத்த பெருவாழ்வுக்கு நிகரானவளும் ஆன மீனாட்சியே வருக வருக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சூகரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சூகரம்

பொருள்

  • பன்றியினம்
  • மான்வகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.

சொல் பிரிவு

யான், தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அல்லது யாவருக்கும்
தோன்றாது சத்தியம் தொல்லைப்பெருநிலம் சூகரம் ஆய்
கீன்றான் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால்
சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே.

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து உரை

கேள்விகளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இறை அனுபவம் வராது. சொல் எனும் சுட்டு என்ற ஒன்று இருக்கும் வரை இன்ப அநுபூதி இல்லை. சுட்டிக்காட்ட பயன்பாடு உரிய சொற்களில் ‘யான்’ எனும் தன்னிலை சொல்லும், ‘தான்’ என்னும் படர்க்கை சொல்லும் அடங்கிய பிறகே சத்தியமாகிய அனுபவம் தலைப்படும். அப்பொழுது பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகனும் முருகனின் கருணைக்கு உறைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞான வெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் சொல் இறந்த அனுபவமாகிய முருகன் தனி வெளியே வந்து சந்திப்பது எனும் அனுபவம் கிட்டும்.

விளக்க உரை

  • ‘யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே எனும் கந்தர் அநுபூதிப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • இரண்டற்ற அத்துவித நிலையில் யான் தான் என்னும் சொற்களுக்கு இடம் இல்லாமல் இரண்டும் ஒன்றாகி  சொல்ல அற்ற அனுபவ நிலை உண்டாகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நொதி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நொதி

பொருள்

  • அருவருக்கத்தக்கசேறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
   தழியுமுன் வீட்டுமு …… னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
   யழுகையை மாற்றுமி …… னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
   யிடைகொடு போய்த்தமர் …… சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
   தெனதுயிர் காத்திட …… வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
   மதகரி கூப்பிட …… வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
   மகிபதி போற்றிடு …… மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
   பரவையி லார்ப்பெழ …… விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
   பதிகுடி யேற்றிய …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டவுடன்  அங்கு நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்தவனும், சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இவ் உலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருமகனே! பரந்த சடையை உடையவனும், கடவுள் உண்டென்று நம்புவோர்க்கு அதன் பொருளாகவும் உள்ள சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி செய்வித்து, தன்னைப் பணிந்த பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே! ‘வீட்டில்  கிடக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள்; நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள்; அழுகையை நிறுத்துங்கள்; பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள்’  என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டு எரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – எய்ப்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  எய்ப்பு

பொருள்

  • இளைப்பு
  • தளர்ச்சி
  • ஒடுக்கநிலை
  • வறுமைக்காலம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகும் படியான இன்பம் அளித்து இவ்வுலகத்துள் இருக்கும்படி அருள்புரிபவன். என்னையும் ஆட்கொடு அருளும் உரிமையன். நிலங்கள் எங்கும் செல்வத்தை குறிக்கும் மாடி வீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். இவ்வாறான அவனை விரும்பி வழிபடுபவர்கள் வினைகள் நீங்கும்.

விளக்க உரை

  • மெய்ப்பான் – பொய்யாதல் இல்லாதவன்; உண்மைப்பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அஞ்சொல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அஞ்சொல்

பொருள்

  • இனிய சொற்கள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

எரியும் சுடரை ஒத்தவனே, சுடுகாட்டின் அரசனே,  தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே, அணுகுவதற்கு அரியவனே, எனது தனிமையை நீக்குகின்ற ஒப்பற்ற துணையே, ஐம்புல ஆசைகளின் ஈர்ப்பால் வருத்துகின்ற புலன்களால் உன்னைப் பிரிந்து, அஞ்சி, இன்சொற்களையுடைய மாதர்களது மயக்கத்தினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை விட்டுவிடுவாயோ!

விளக்க உரை

  • ‘தனித்துணை நீ நிற்க’ எனும் மற்றொரு பாடல் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நொடித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நொடித்தல்

பொருள்

  • சொல்லுதல்
  • கோள்சொல்லுதல்
  • பழித்தல்
  • அழித்தல்
  • கட்டுக்குலைதல்
  • நடக்கும்போது கால் சிறிது வளைதல்
  • ஒடித்தல்
  • உறுப்பாட்டுதல்
  • பால் முதலியன சுரத்தல்
  • இழப்படைதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தானெனை முன்படைத்தான் அத
  றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
  னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
  யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
  தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

வினைகளை அழிக்கும் கடவுளது மலை என்றும் திருக்கயிலை மலைக்குப் பெயரானதும் ஆன நொடித்தான் மலை எனும் தலத்தில்  வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை இவ்வுலகில் படைத்தான்; அக் குறிப்பினை உணர்ந்து அவனது பொன்போன்ற திருவடிகளுக்கு, என்னளவில் பாடல்கள் செய்தேன் ! நாய் போன்ற இழிவான என்னின் அத்தகைய குறையை எண்ணாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து எண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரிய யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; என்னே அவனது  திருவருள்!

விளக்க உரை

  • எண்ணில்லாத தேவர் யாவரையும் வந்து எதிர்கொள்ளுமாறு அருள் செய்தல் – கடைப்பட்ட எனக்கும் அருளினான்; அவ்வண்ணமே உங்களுக்கும் அருளுவான் எனும் பொருளில் இயற்றப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்