வந்த நாளைக் கொண்டாடிய நினைவுகள். மனிதர்களை ஏற்றிச் சுமந்த நினைவுகள். உறுப்புகள் உடைந்த போதும் சரி செய்து சமன் செய்த மனிதர்களின் நினைவுகள்.. கதவுகளைத் தாண்டி காலத்தின் சாட்சியாக கனத்த வலியுடன் வீட்டின் கடைவழியினில் பழைய நினைவுகளைச் சுமந்தபடி சைக்கிள்.
காலத்தின் மாற்றத்தில் விக்ரமாதித்தியன் ஆகி கேள்வி கேட்கும் வாய்ப்பும் நிகழ்ந்தது. பிறர் அறியா கவிஞனின் மன வலியும், பசி இருந்தும் யாசகம் பெறா கர்வமும் என்று மாறும் என்றேன். வேதாளத்திடம் பதில் இல்லை. விடுதலை ஆனேன்.
பாதணிகளை உதறிவிட்டு ஓடி வந்து மடியினில் அமர்ந்து உங்களுக்கு பிடித்தது ரோஜா வாசமா மல்லி வாசமா என்ற எனது மகளின் கேள்விக்கு உன் வாசம் என்றேன். வியப்புடனான புன்னகையில் கடை நாள் வரையிலான வாசம்.
எதோ ஒரு கணத்தில் எனது குரல் கடவுளுக்கு கேட்டிருக்க கூடும். இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா இனிய எண்ணப் பரிமாற்றம். இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா வேதனையற்ற சந்தோஷ சிரிப்புகள். இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா புன்னகைப் பூக்கள். அனைத்தும் தாண்டி அடுத்த அறையினில் என் மகளின் படிப்புக் குரல் ‘கிட்டாதாயின் வெட்டன மற’
நாத்திகம் பேசி இருமையை மறுத்து வந்த காலங்களில் எங்கிருந்தோ ஓடி வந்து கழுத்தினைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு சொர்க்கம் என்றால் என்ன அப்பா என்ற எனது மகளின் கேள்விக்கு பதில் அறிந்து புன்னகைத்தேன்.
மீண்டும் ஒரு முறை எனக்கும் கடவுளுக்குமான எண்ண பரிமாற்றம் உன் வலியை உள் வலியை உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார். வலி உண்டாக்கி தருணத்தை விவரிக்க சொன்னார். தெருவில் நடந்து செல்பவனை அப்பா என்று எனது மகள் முதல் முறையாய் அழைத்ததை செவிலித் தாய் சொன்ன போது என்றேன். பதில் அளித்த தருணதில் உண்ர்ந்தேன் கடவுளை.
எனக்கும் கடவுளுக்குமான எண்ண பரிமாற்றத்தில் பதில் அளிக்க விரும்பா தருணங்களில் புன்னகைப்பேன் என்று உடன்பாடு உண்டானது. நெஞ்சினில் கை வைத்து வாலிபத்தின் சாயலில் வாழ்ந்து காட்டுவேன் என்று சபதமிட்ட மனிதர்கள் மண்ணில் மறைந்து போனது குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு பதில் கிடைத்தது மந்தஹாசப் புன்னகை.
கட்டப்பட்ட கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை குறித்தும் வர்த்தகம் குறித்தும் விரிவடைகின்றன முதன்மை செய்திகள் எவரும் அறியா இடத்தில் செய்திகள் தேய்ந்து வரும் தேனீக்களின் எண்ணிக்கை குறித்து
வழி தவறிய நாய் குட்டியாய் எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது கிழிந்த ரூபாய் நோட்டு உலகின் நடனம் கண்டு வியக்கும் பொழுதுகளில் செவிகளில் செய்தி ‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல இளித்த வாயன் என்று’
கோபம் கொண்ட தருணங்களில் கண்களை உருட்டி கைகளை காட்டி மிகப் பெரிய மிருகமொன்று உன்னைக் கவ்விச்செல்லும் எனும் தருணங்களில் உங்களை விடவா அப்பா எனும் மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது