அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 12 (2018)

பாடல்

 

மெய்யிற் படர்ந்த அருட்கடலே
        விளையும் ஞான முளரியினில்
     விரிவாய்ப் பொருந்தும் பரநிதியே
        வினைகளை அகற்றும் பதம்உடையாய்

உய்யுந் தவத்தோர் மேலோர்கள்
        உறுதி யுடனே மகிழ்பதியே
     ஒன்றாம் யோக முடிவதனில்
        ஒளியாய் வெளியாய் உதித்தவளே

செய்ய கமலத் தயன்மனைவி
        தினமும் பணியுந் திருவருளே
     தேகா தேகக் கோடியெலாஞ்
        சிறந்து நிறைந்த சின்மயமே

வையத் தடங்கா அருள்மலையே
        வருண அருண ஒளிமணியே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ உண்மையாக விளங்கும் மெய் அன்பர்களிடத்தில் பரந்து இருக்கும் அருட்கடலாகவும், ஞானத்தின் வடிவாக தோன்றும் ஞானத்தாமரையில் விரிவாய்ப் பொருந்தும் பரநிதியாகவும், தன்னை வழிபடுவர்களின் அடியார்களின் வினைகளை அகற்றும் திருவடிகளை உடையவளாகவும், பிறவிப் பிணி நீக்கம் கைவரப் பெற்ற தவத்தோர்களும், உயர்ந்தவர்களான வானோர்களும் உறுதியுடன் மகிழ்கின்ற பதிப்பொருளாகவும், யோக நிலையில், இறைவனோடு ஒன்றிய சிவசக்தி ரூபமான வடிவத்தில் ஒளி வடிவமாகவும், துவாத சாந்த பெருவெளியாகவும் தோன்றி காணப்படுபவளாகவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சக்தியாகிய சரஸ்வதியால் தினமும் வழிபாடு செய்யப்படுபவளாகவும், உடலோடு கூடியனவாகவும், கூடாதனவாகவும் ஆகிய உயிர் வர்க்கங்களின் வகைகளாகிய முட்டையில் தோன்றுவன ஆகிய அண்டசம், வியர்வையில் தோன்றுவன ஆகிய சுவேதசம், வித்து வேர் முதலியவைகளில் தோன்றுவன ஆகிய உற்பிசம், கருப்பையில் தோன்றுவன ஆகிய சராயுசம் ஆகியவற்றின் * அறிவுக்கு அறிவாய் விளங்கும் ஞான சொரூபமாக விளங்குபவளாகவும், வையகத்தில் இருப்பவர்களால் அளவிட முடியா அருள் மலையாகவும் (வையகத்தினை விட பெரிய அளவிலான அருள் மலையாக எனவும் கொள்ளலாம்) துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், சூரியனின் ஒளி வடிவமாகவும் செந்திறம் கொண்ட துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், பல நிறம் கொண்ட சூரியனின் ஒளி வடிவமாகவும் விளங்குகிறாய்.

விளக்க உரை

  • அடுத்து வரிகளில் வரும் ‘விளையும் ஞான முளரியினில்’ என்பதனை முன்வைத்து உடலில் தோன்றிய அருட்கடலே என்னும் கருத்து விலக்கப்பட்டுள்ளது.
  • மேலோர் – மேலிடத்தோர், உயர்ந்தோர், முன்னோர், வானோர்
  • *84 லட்சம் யோனிபேதம்(வடிவ வேறுபாடு)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 11 (2018)

பாடல்

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

நல்வழி – ஔவையார்

பதவுரை

செய்துமுடிக்கும் செயலெல்லாம் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது என்பது அன்றி எவ்வொருவராலும் செயல் பற்றி எண்ணி அந்த செயலை தான் முடித்துவிடோம் என எண்ண இயலாது. காலம் சரியானதாக இருந்து நேரம் கூடிவரும் போது,  கண் தெரியாத ஒருவன் தன் கையிலிக்கும்  கோலை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 10 (2018)

 

பாடல்

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்

பதவுரை

குற்றமற்ற செல்வம், செய்த, செய்யப்படுகின்ற இனி செய்ய இருக்கும் அனைத்து கர்மங்கள் ஆகியவற்றை எவ்விதமான இடையூறும் இல்லாமல் முடியச் செய்தல், பெருமையின் ஆக்கம், குற்றமற்ற சொற்களை தரும் உயர்ந்த சொற்கள் ஆகியவற்றை மூத்த பிள்ளையார் ஆன ஆனை முகத்தான் தருவான்.  ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம்முடைய கை கூப்பி தொழுவார்.

விளக்க உரை

  • ‘செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்பது புலனாகும். `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பும் புலப்படும்.
  • செய்கருமம் – வினைத் தொகை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 9 (2018)

பாடல்

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மெய் தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தலை உடைய மெய் உணர்ந்த மேலோர் அருளால் அறிவது நீர் என்றும் திருவருள் என்றும் குறிக்கப்பெறும் அப்புவும், தீ எனவும்  சிவபெருமான் எனவும் குறிக்கப் பெறும் அனலும்; அவ்வாறு அதன் பொருள் நுட்பம் உணர்பவர்கள் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்து உணர்வார்கள்; இவ்வாறு அறிவது எல்லாம் ஒருங்கே உணரும் தன்மையும், எண் குணமும், முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானாலே வாய்க்கப் பெறுகிறது. அஃதாவது அவன் உடனிருந்து இயங்கி  அவன் இடம் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியாது; அவனையின்றி அறிவு வசப்பட்ட  ஆருயிர் அறிந்ததென்பதை எவரும் அறியார்.

விளக்க உரை

  • மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனை இல்லாமல் உண்டாகாது எனும் பொருள் உடைக்கும் பாடல்
  • அருள் ஆகிய சக்தியும் சிவமும் கலந்து அருளுபவன் எனும் நிலையில் நின்று,  அனைத்து உலகினையும் மற்றும் அவற்றின் தொழில் செய்வதைக்  குறிக்கும் குறிப்பாகும்.
  • தாமாக அறியும் பொருள் அனைத்தும் காட்சிப் பொருள்களே. அவை மட்டும் அல்லாமல்  கருத்துப் பொருள்களும் உள்ளன.  அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிய இயலாது.
  • ‘உலகாயதர்’ என்றும், ‘சாருவாகர்’ என்றும் ‘பூத வாதிகள்’ என்றும் கூறுபவர்களின் கருத்தாகிய ‘காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` எனும் விளக்கம் சைவ சித்தாந்த கருத்துப்படி மறுக்கப்பட்டுள்ளது
  • முதலில் வரும் ‘அறிவான்’ என்பது `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் தரும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 8 (2018)

பாடல்

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அருளுதலைத்  தருகின்ற திரிபுரையானவள்,  சத்த பிராமானமாகவும்  சிவனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றானதும் ஆன நாதமாகவும், அவ்வாறான நாதத்தின் முடிவாகவும், பலவாய் விரிவதான சிவத்தோடு ஒன்றிய சக்தி ஆகிய பரவிந்து ஆகி பெரிய அண்டம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள்; ஆக்கல் தொழிலோடு அருளுதலையும் செய்வதால் அவள் அனைவர்க்கும் மேலானவள்; அவளே சிவசத்தி வடிவமான பரை, அவளே அபிராமி, அவளே வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட, புறக்கண்களுக்கு புலப்படாதவளும் அறியப்படாதவளும் ஆன அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குபவள் ஆவாள்.

விளக்க உரை

  • சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டப் பாடல்
  • புல்குதல் – பதிதல்
  • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள்ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை
  • அகோசரம் – அறியப்படாமை, புலன்களுக்குப்புலப்படாமை, புலப்படாதது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 7 (2018)

பாடல்

அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.

விளக்க உரை

  • அடும்பு-அடப்பமலர்
  • வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
  • கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)

 

பாடல்

தீரா மயக்கப் பிணிநோயைத்
        தீர்க்கும் மருந்தே அருமருந்தே
     தேவா திகளும் அறியாத
        கிருஷ்ணன் ஆதி சகோதரியே

ஆரா திப்பார் பூசிபார்
        அமைதுன் நாம மதைநினைப்பார்
     அடுத்தோர் இன்ப சுகமனைத்தும்
        அடையும் எனவே மறைவிளம்ப

நேரா யிருந்து களிப்பவளே
        நித்யா னந்த சுகப்பொருளே
     நெறியே குறியே எனைஆளும்
        நிமலி அமலை சுகத்தாளே

வாரா கினியே துட்டர்டர்
        மனத்தை அழிக்குஞ் சினத்தாளே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.

விளக்க உரை

  • முன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
  • தேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’  என்று  விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)

பாடல்

மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

சிவவாக்கியர்

பதவுரை

தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?

விளக்க உரை

  • கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)

பாடல்

எங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும்
இங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்? இயம்பல் வேண்டும்

சிவஞானசித்தியார் – சுபக்கம்

பதவுரை

ஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)

பாடல்

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை  மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.

விளக்க உரை

  • மணிமன்றம் * – குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 1 (2018)

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே! இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?

விளக்க உரை

  • விலங்கல் – மேருமலை
  • அரக்கர் – திரிபுராதிகள்
  • ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)

பாடல்

மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்
சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த
பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்
தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 25 (2018)

பாடல்

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற

திருநெறி 5 – திருவுந்தியார்

பதவுரை

தன்னில் தான் விலகி, கண்ணுக்கு புலப்படிவதாகிய ஸ்தூல உடலும், புலனாகாத சூட்சம உடலும் தனித் தனி என்று அறிந்து இது நாம் அல்ல எனும் அறிவு பெற்று, இது நாதன் செயல் தானே என்று உந்தி பற; இவ்வாறான அறிவு பெறுவதற்கு தன்னையே தந்தான் என்று உந்தி பற.

விளக்க உரை

  • உந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன்  இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி,  பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.
  • தோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 24 (2018)

பாடல்

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பஞ்சகவ்வியம் எனப்படும் பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானேஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலைப் பெற்று, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  ஆகிய வாக்குகளைக் கொண்டுஇவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.

விளக்க உரை

  • அஞ்சு – ஐம்பெரும் பூதம். ஸ்தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 23 (2018)

பாடல்

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
     பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
     நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
     தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

உன்னுடைய அன்பர்கள் உன்னிடத்தில் என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு கொண்டு அந்த அன்பிலே நித்தமும் நிலைபெற்று உன்னைப் போற்றி வணங்குவதைக் கண்டு, `யான் உன்னிடத்தில் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாததால், அப்பேற்றினைப் பெற்றோர் செய்யும்  எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்தநிலை நீங்குதற்கு நீதிருப்பெருந்துறையில் இருந்து, தில்லைக்கு வருகஎன்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, துன்பக் கடலில் அழுந்தி, மிக்க மதிக்கத்தக்கதும், போற்றத் தக்கதும் எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத திருப்பெருந்துறையில் கிடைத்த திருவருளாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தியும்திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, எவராலும் எளிதில் காணமுடியாத உன் திருக்கோலத்தை எனக்குக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?

விளக்க உரை

  • திருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் பொருள்.
  • உகைத்தல் – செலுத்துதல், எழுப்புதல், பதித்தல், எழுதல், உயரவெழும்புதல்,அம்பு முதலியவற்றை விடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018)

பாடல்

கண்ணா ரமுதே உனைஎனது
        கண்தான் களிக்க மொழிகுழறக்
     கதிக்க உயிரும் உடல்புளகங்
        காணும் பருவம் பெறுவேனோ

விண்ணா ரமுதே சிவபுரத்தில்
        விளைந்த கனியே தேன்கடலே
     வீசிப் படந்த கமலமதில்
        வீற்றே யிருக்கும் விழிச்சுடரே

பெண்ணா னதுவே ஆண்வடிவே
        பேணும் அலியே பிறங்கொலியே
     பேதை நாயேன் இதமதிற்
        பிரியா திருக்குந் தவக்கொழுந்தே

மண்ணா டியவன் இடப்பாகம்
        வளருங் கொடியே மடமயிலே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, மண்ணில் நடனம் இடும் கூத்தனின் வாம பாகமாகிய இடப்பக்கத்தில் வளரும் கொடியே, அழகிய மயில் போன்றவளே, விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு அமுதம் போன்றவளே, சிவ புரத்தில் விளைந்த கனியே, தேன் கடல் போன்று இனிமையானவளே, பரந்து விரிந்த தாமரை போன்ற முகத்தில் இருக்கும் கண்ணின் மணி போன்றவளே, பெண் வடிவம் கொண்டும், ஆண் வடிவம் கொண்டும், போற்றுதலுக்கும் அலங்கரிக்கப்பட்டதுமான அலி வடிவம் கொண்டும், அரகர  எனும் முழக்கத்திற்கு முழுமை சேர்ப்பவளே, அறிவற்றவனாகியும், இழிவான பிறவி எனும்படியான நாய் போன்றவனாகிய என் இதயத்தில் இருந்து பிரியாது இருக்கும் தவக் கொழுந்தே, கண்ணுக்கு விருந்தாகும் அமுதம் போன்றவளே, உனை எனது கண் கொண்டு இன்புற , மொழி தடுமாறி மகிழ்ச்சியில் உயிரிலும் உடலிலும் மயிர் சிலிப்பு உண்டாகுமாறு பரவசம் அடைவேனோ?

விளக்க உரை

  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018)

பாடல்

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

எனும் சக்தி எழுத்தினை முன்வைத்து வகாரமாகிய அருள் எனவும்வசியம் அருளுவதாகிய  ‘வயநமசி‘  என்று உச்சரிப்பினை முன் வைத்து உச்சரிப்பதையும் விடுத்து மற்றைய ஏனைய மந்திரங்களை கொண்டு உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறியாமல் உச்சரித்ததால்  மரணம் எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான அருளப்படாத மந்திர உச்சரிப்புகளை விட்டு சாகாமல் சாதல் ஆகிய சமாதி நிலையை அருளும் வகார எழுத்தினை கொண்டு விட்டால் வாழ்வு எனக்கு வரமால் இருக்குமா?

விளக்க உரை

  • வாழை – முக்கனி, அசோகம், அசோணம், அற்பருத்தம், அம்பணம், கவர், சேகிலி, அரம்பை, கதலி, பனசம், கோள், வீரை, வான்பயிர், ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பானுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம்

( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 19 (2018)

பாடல்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

பத்தாம் திருமுறை -திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

நல்ல அறிவும், சிறந்த இல்லற பண்பும், மக்கட்பேறும் உடைய ஒரு தாயானவள் தன் காதல் கணவனுடன் பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று  கேட்டால் அந்த தாயால் அதை எப்படி சொல்ல விளக்க முடியாதோ அது போல புறத்தில் பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும்; ஆனால் அறிவுக் கண்ணால் மெய் அறிவு கொண்டு காணப்படும் அம்மெய்ப்பொருளை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காண இயலும்.அத்தகைய பொய்யில்லாத  மெய்யான இன்பத்தினைத் தமக்குத் தாமே தம்மில் உணர்தல் அன்றி சொல்லி உணரச் செய்வது என்பது எவர்க்கும் ஒல்லாது.

விளக்க உரை

  • மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண்,  சிவத்தினை உணரத் துணை செய்யும் போது  திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருக்கருவூர்ஆனிலை

தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள்– திருக்கருவூர்ஆனிலை

  • மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
  • இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
  • காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
  • தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
  • எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
  • புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம்
  • சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
  • கருங்கல்லால் ஆன கொடிமரம்
  • திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
தலம் திருக்கருவூர்ஆனிலை
பிற பெயர்கள் கருவூர் , திருக்கருவூர், கற்பபுரி
இறைவன் கல்யாணபசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்,பசுபதி, ஆனிலையப்பர்
இறைவி அலங்காரவல்லி,கிருபாநாயகி , சௌந்தரநாயகி
தல விருட்சம் வில்வமரம் , சீந்தில் கொடி,  ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம் பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள் வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், கருவூர்த்தேவர் ( திருவிசைப்பா ), அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருச்சியில்இருந்துசுமார் 75 கிமீ தொலைவு; ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவு
இதரகுறிப்புகள் தேவாரத்தலங்களில் 211 வதுதலம்
கொங்குநாட்டுத்தலங்களில் 4 வதுதலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 3

பாடல்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே

பொருள்

ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.

விளக்க உரை

கண்ணு ளார் – கூத்து நிகழ்த்துபவர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 8

பாடல்

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே

பொருள்

கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன்,  பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.

விளக்க உரை

கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!