அருளுதலைத் தருகின்ற திரிபுரையானவள், சத்த பிராமானமாகவும் சிவனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றானதும் ஆன நாதமாகவும், அவ்வாறான நாதத்தின் முடிவாகவும், பலவாய் விரிவதான சிவத்தோடு ஒன்றிய சக்தி ஆகிய பரவிந்து ஆகி பெரிய அண்டம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள்; ஆக்கல் தொழிலோடு அருளுதலையும் செய்வதால் அவள் அனைவர்க்கும் மேலானவள்; அவளே சிவசத்தி வடிவமான பரை, அவளே அபிராமி, அவளே வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட, புறக்கண்களுக்கு புலப்படாதவளும் அறியப்படாதவளும் ஆன அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குபவள் ஆவாள்.
விளக்கஉரை
சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டப் பாடல்
அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.
விளக்கஉரை
அடும்பு-அடப்பமலர்
வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள்பாடி யென்ப தடைவோமே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும் அவர்களுடன் யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’ எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.
விளக்கஉரை
முன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
தேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?
விளக்கஉரை
கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.
எங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின் தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும் பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும் இங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்? இயம்பல் வேண்டும்
சிவஞானசித்தியார் – சுபக்கம்
பதவுரை
ஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல
‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.
திருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே! இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?
விளக்கஉரை
விலங்கல் – மேருமலை
அரக்கர் – திரிபுராதிகள்
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்
மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச் சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும் தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.
விளக்க உரை
ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.
உந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன் இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி, பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.
தோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.
( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)
மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண், சிவத்தினை உணரத் துணை செய்யும் போது திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.
மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
எறிபத்த நாயனார் பிறந்த தலம்
சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
கருங்கல்லால் ஆன கொடிமரம்
திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
வில்வமரம் , சீந்தில் கொடி, ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம்
பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள்
பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள்
வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.
கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே
பொருள்
கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன், பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.
விளக்கஉரை
கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இது 1201 பதிவு. (பதிவு செய்யப்பட்டவை மட்டும்) மொத்த பார்வையாளர்கள் 2,06,000 த்திற்கும் மேல்.
வாசிப்பு மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடலைப் படித்து கருத்துக்களை உள்வாங்கி, அதை பதம் பிரித்து எழுதுவது என்பது பகிர முடியா அனுபவமாகவே இருக்கிறது.
ஒவ்வொரு தேடலும் மிகப் பெரிய அனுபங்களை வழங்கிச் செல்கிறது. ‘இப்படிக் கூட யோசிக்க முடியுமா’ என்றும், ‘இத்தனை அழகாக நமக்காக ஏற்கனவே எழுதி இருக்கிறார்களே’ என்றும் பல பிரமிப்புகளை வழங்கிச் செல்கிறது. சில நாட்களுக்கு 5 மணி நேரங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது.
உணரப்படவேண்டியவை என்பது எதிரே கடல் போலவும், நிஜத்திலே கடற்கரை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவனுமான அனுபவமாகவே இருக்கிறது.
‘என் செயல் யாதொன்றுமிலை எனப் பெற்றேன்’ என்பதே நிஜம். இத்தனையும் என் குரு நாதர் அருளினால் மட்டுமே நடக்கிறது என்பதும் நிஜம். அவர் இத் தேகத்தை கருவியாக ஆக்கவில்லை எனில் இந்த மொழி ஆக்கங்களும், வெளிப்பாடுகளும் நிகழ்ந்து இருக்கா.
வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள். குரு அருளும், திருஅருளும் நம்மைக் காக்கட்டும்.
பாடல்
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க! உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா! தின்றுகளைப் பாரேனோ!
அழுகணிச் சித்தர்
பதவுரை
அரிசி வகைகளில் மிக உயர்ந்த சம்பா அரிசியை நன்கு சமைத்து அதனுடன் நெய் சேர்த்து முத்து முத்தாக உண்ணுதற்கு வைப்பது போல் எண்பத்தி நான்காயிரம் யோனிப் பிறப்புகளில் உயர்ந்ததான மானுடப் பிறப்பை நல்ல சாதனைகள் சேர்த்து அர்ப்பணித்தலுக்கு தயாராக வைக்க அதை ஏற்று முப்பழத்துடன் சர்க்கரை சேர்த்துப் படைத்து மானிடர்களால் தேனமிர்தம் என்றறியப் படுவதை மிகுந்த சுவையுடைய சகஸ்ராரத்தினின்று வடிந்து அண்ணாக்கினால் சுவைக்கப் படும் அமிர்தத்தை சுவைத்து செயல்களொழித்து சும்மா இருக்கும் நிலை வேண்டுகிறார்.
விளக்கஉரை
ஊட்டி வளர்க்கும் இவ்வுடல் ஓர் மாயை என்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் இவ்வூணெடுத்த காரணம் இதை சகஸ்ராரத்தில் சுடராய் விளங்கும் வாலையன்னைக்கு அர்ப்பணித்தலே என்ற உண்மையை தெளிவாக அறிந்திருந்தனர். இதில் அர்ப்பணிப்பு என்பது உடல் தன்னது என்ற மாயை விலக்குதலே ஆகும். இந்தக் கருத்தை ஒற்றியே அழகணி சித்தர் இப்பாடலை இயற்றியிருக்க வேண்டும்.
இதையே ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களும் சாப்பாடுனையே சார்ந்துணவாவேன் சாந்தமாய் போவென் அருணாசலா என்று பாடியுள்ளார்.
பாடல் எளிதாக தோன்றினாலும் அதன் உட்பொருளை உரைத்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா! அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்; முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ! உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும் கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ‘ஒற்றியூர்‘ என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்‘ என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனி‘ என்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் ‘கண்ணிலியே நீ என்ன அறிவாய்; போ‘ என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? இது முறையோ!
விளக்கஉரை
சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும், உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு தலைமையாக இருக்கும் இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
விளக்கஉரை
மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.