அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தொழுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  தொழுதல்

பொருள்

  • வணங்குதல் (மார்பிற்கும், முகத்திற்கும் நேராகக் கைகுவித்துக் கும்பிடுதல்)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை ஆக்கிக் கொண்டு இன்அருளைச் செய்கின்ற எம் தலைவனே!  இனிய ஓசைகளை எழுப்பும் வீணையை உடையவர்களும் யாழினை உடையவர்களும் ஒரு பக்கத்திலும், வேதங்களோடு தோத்திரம் கொண்டு துதிப்பவர்கள் ஒரு பக்கத்திலும், நெருக்கி தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்திலும், வணங்குதலை உடையவர்களும், அழுகை உடையவர்களும், துவளுதலை உடையவர்களும் சூழ்ந்து ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் வணங்குபவர்கள் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக்கு எல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கொளுவுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொளுவுதல்

பொருள்

  • கொள்ளச்செய்தல்
  • தீமூட்டுதல்
  • பூட்டுதல்
  • தூண்டிலிடுதல்
  • அகப்படுதல்
  • மிதியடிமுதலியனஅணிதல்
  • வேலையில்அமர்தல்
  • சிக்குதல்
  • தந்திரஞ்செய்தல்
  • குடல்தூக்கிகொள்ளதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
   யுளமகிழ ஆசு …… கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
   தெனவுரமு மான …… மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
   நடவுமென வாடி …… முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
   நளினஇரு பாத …… மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
   விகிர் தர்பர யோகர் …… நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
  விடவரவு சூடு …… மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
  தளர் நடையி டாமுன் …… வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
  தணிமலையு லாவு …… பெருமாளே.

திருப்புகழ் (திருத்தணிகை) – அருணகிரிநாதர்

 

கருத்து உரை

ரிஷபத்தை வாகனமாகப் பூட்டிச்  செல்பவரும், குற்றமற்றவரும், தூயவரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக உயர்ந்தவரும், மேலான யோகம் படைத்தவரும், பிறைச்சந்திரன், வில்வத் தளிர், சிறிய பூளை / தேங்காய்ப்பூக் கீரை / சிறுபீளை என்று அழைக்கப் பெறும் பூளாப்பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே,  செல்வம் படைத்தவர்கள் எவர் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழுமாறு அவர்கள் மீது எதுகை மோனையுடன் கூடிய ஆசுகவிகளைப் பாடி, ‘உன்னுடைய புகழ் மேருமலை அளவு உயர்ந்தது’ எனக் கூறியும், அவர்களை வலிமையான புகழ்ச்சி மொழிகளைப் பேசியும், பல முறை நடந்து பலநாள் போய்ப் பழகியும், அவர்கள் தனம் ஈயாததால் தரித்திரர்களாகவே மீண்டு, ‘நாளைக்கு வா’ என்றே கூற, அதனால் அகம் வாடி,முகம் தனது களை இழந்து, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல் என்ன இயல்பு?
சிறப்பு இயல்பு(சொரூப இலக்கணம்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – காசம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  காசம்

பொருள்

  • ஆகாயம்
  • மயிர்ச்சாந்து (தைலம்)
  • பிரகாசம்` என்னும் வடசொல் மருவி , காசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யோகி ஆனவன்,  பூசுத்தக்கவற்றைப் பூசி, நல்ல வாசனை மலர்களை சூடி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடுவான் ஆயினும், அவனது மனம் ஊசித் துளை அளவுடைய  பிரமந்திரத்திலே நிற்கும் ஆயின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும் எனும் பொருள் பற்றி)

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு ஒன்றாகவும்,  வேறாகவும் மற்றும் உடனாகவும் கலந்திருத்தல் என்ன இயல்பு?
பொது இயப்பு (தடத்த இலக்கணம்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலவரை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குலவரை

பொருள்

  • எண்குலமலை
  • சிறந்தமலை
  • நாகம்
  • மந்தாரச்சிலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
   அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
   மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
   திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
   பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பெரும் தவமுடையவர்கள் தொழுது போற்றும் தந்தையானவன், தேவர்களின் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமல் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு வழங்கி உதவிய வலிமையுடையவன், எப்போதும் அலைமடியப் பெற்ற கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற சூரியன், சந்திரன், அக்னி மற்றும் இன்ன பிறவும் ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவனாகவும், புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்த தில்லையில் உறைபவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

  • பிறவா நாளே  – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி;  அறம், பொருள், இன்பங்களாகிய உலகியல் பயனுள்ளவை என்னும் ஐயத்தினை அறுத்து  அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமை உடையவை, இறையின்பமாகிய பெரும்பயனொடு ஒப்பு நோக்கப் பயன் எட்டாது  எனத் தெளிவித்தலின் பொருட்டு இப்பாடல்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

பதியின் வடிவ நிலைகள் யாவை?
அருவம், உருவம், அரு உருவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அநந்தம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அநந்தம்

பொருள்

  • முதலில்லாது
  • அளவில்லாதது
  • முடிவிலி
  • அளவற்றது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
மூலம் – காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றியது

கருத்து உரை

எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், முதலில்லாததாகவும், அளவில்லாததாகவும், முடிவில்லாததாகவும், அளவற்றதாகவும் கொண்ட அநந்தக் குணங்கள் எவன் இடத்தில் இருந்து தோன்றுமோ, அவ்வாறான நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இருந்து இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும் லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.

விளக்க உரை

  • சிவனின் எண்குணங்களில் ஒன்று

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

பதி எனும் சொல்லுக்கான பொருள் என்ன?
பசுவுக்கும், பாசத்துக்கும் தலைவன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அந்தித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அந்தித்தல்

பொருள்

  • சந்தித்தல்
  • நெருங்குதல்
  • முடித்து வைத்தல்
  • முடிவு செய்தல்
  • இறத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

முதலில் சந்திர கலை ஆகிய இடநாடியின் வழியும், பின்பு சூரிய கலை  நாடி ஆகிய வல நாடியின் வழியும், பிராண வாயுவை அடக்கியும், வெளி விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டன.

விளக்க உரை

  • தாச மார்க்கம் வழி சிறப்பு நிலை எய்துதல் குறித்து கூறப் பட்டப்பாடல்.
  • சரியை ஆகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவரது சரியைத் தொண்டு சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் மூன்று வகைகள் யாவை?
தந்திரச் சொல், மந்திரச் சொல், உபதேசச் சொல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மெய்ஞ்ஞானம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மெய்ஞ்ஞானம்

பொருள்

  • உண்மை அறிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மேவியே எங்குமாய் நிறைந்தோம் என்றீர்
   மெய்ஞ்ஞான முழுவதையும் பெற்றோ மென்றீர்
ஆவியே மும்மூலம் கொள்ளா மற்றான்
   அதிசயமாய் சிரஞ்சீவி யருளு முண்டேன்
தாவியே வாசியதைப் பாரா மற்றான்
   தனவானே யவனாகும் தகைமை செய்வீர்
ஆவியே அறுமுகமே குருவே சுவாமி
   ஐயனே யிந்தவகை யருளு வீரே

முருகன் அகத்தியருக்கு உபதேசித்து அருளிய யோகஞானம் 500

கருத்து உரை

தானே அணுவாகவும், அதன் பொருட்டான அசைவாகவும் ஆகி அண்டம் முதல்  பிண்டம் வரை அனைத்திலும் நிறைந்த வஸ்துவானது,  அணு இல்லா இடம் ஏதும் இல்லாமையால் பிரபஞ்சம் எங்கிலும் நிறைந்தது.  வினைகளின் வழியே வரும் அஞ்ஞானம் விலகும் பொழுது மெய்ஞானம் என்று ஒன்றுள்ளது என்பது புலனாகும். மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்தவர் கந்தக் கடவுள்.  மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கும என்பது நடைமுறை. ஆனால் கந்தனே  மும்மூல வடிவாக ஆனதனால் அவ்வாறான மும்மூல வடிவம் கொண்டப்பின் கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை.  சிரத்தில் இருக்கும் பூரணமான  மெய்ப்பொருள் மலங்களை களையறுத்த பின்  கிட்டும் உன்னத நிலையே சிரஞ்சிவி தன்மையாகும். தான் யார், தன் தன்மை என்ன என்ற உண்மை அறியாது தேகம் விடுதலையே இறப்பு என்பர்.  மாறாகத் தான் யார் எனும் தன்மையினை அறிந்து கொண்டோர் இவ்வுடலை விலக்கும் காலம் ‘இது ஆடை மாறுதல் போல்’  என்று அறிவர்.  இவ்வாறு காயம் நீக்குதலை தாமற்ற மாற்றொன்று என அறிந்தவரே  சிரஞ்சிவி ஆவார்.  உண்மையின் வடிவமாக கந்தன் உருக் கொண்டு நின்றதால் மும்மூலம் கொள்ளாது  சிரஞ்சிவி ஆனான்.  மும்மூலம் கொள்ளுவதன் காரணமாக வாசி கூடி நிலை மாறி வாசியானது சிவா என்று மாறும். இவ்வாறான சிவமே கந்தனானதால் மாறுதலுக்கு உட்படவும் கொள்ளவும் எதுவுமில்லை.  நிதியிலோ நிலையிலோ இல்லை என்ற நிலையில்லாதவரை உலகம் தனவானென்று கூறும். ஆனால் ‘தான் இல்லை’ என்ற உண்மையை அறிந்தவரே உண்மையில் தனவான் ஆவார்கள். ‘தளர்ச்சி இல்லா தேகம்’, ‘நரை முடி இல்லாமை’ ஆகியவை கொண்டிருப்பதுவே அறிவீலிகளால் இளமை என்று குறிக்கப்பெறும். உண்மையில்  ‘தளர்ச்சி இல்லா செயல் ஆக்கம்’, ‘மருட்சி அற்று தீர்மான முடிவு எடுக்கும் நிலை’ ஆகியவையே இளமை ஆகும்.  இவர்களை குமரன் என்றும் கூறுவார்கள். வயதில் முதியவர்கள் செயலில் வேகம் காணும் போது அவரை குமரன் என்று கூறுவார்கள். அந்த நிலையை யாம் வேண்டி நின்றோம். இந்த நிலையை அருளக் கடவீர் என அகத்தியெம்பெருமான் தனது குருவாகிய கந்தக் கடவுளிடம் வேண்டுகிறார்.

விளக்க உரை

  • அகத்தியர் முருகனிடத்தில் ‘அருள்வீர்’ என வேண்டும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் இரண்டு வகைகள் யாவை?
தன்பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்

(இப் பாடலுக்கான விளக்கம் முழுவதும் சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அயில்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அயில்

பொருள்

  • இரும்பு
  • சத்திரம் வைக்கும் கத்தி.
  • அழகு
  • கூர்மை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

கூரிய அம்பு எய்து முப்புரங்களையும் அழித்து, குயில் போன்ற இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனாகி, மயில்கள் நிறைந்து வாழும்  சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றவர்களுக்குப் பாவம் எதுவும் இல்லை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் நான்கு வகைகள் யாவை?
வாயில் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அணங்கு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அணங்கு

பொருள்

  • அழகு; வடிவு
  • தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்
  • வருத்தம்; நோய்; மையல்நோய்
  • அச்சம்
  • வெறியாட்டு
  • பத்திரகாளி
  • தேவர்க்காடும் கூத்து
  • விருப்பம்
  • மயக்க நோய்
  • கொலை
  • கொல்லிப்பாவை
  • பெண்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சிலே ஒன்று பெற்றான்
   அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
   ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
   அவன் எம்மை அளித்துக் காப்பான்

கம்பராமாயணம் – பால காண்டம்

கருத்து உரை

ஐந்து பூதங்களில் ஒன்றான வாயுவினை குல தெய்வமாக கொண்ட கேசரீ எனும் வானரத் தலைவரின் மைந்தனானவர் அனுமன்; ஐந்து பூதங்களில் ஒன்றான (கடல்) நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக, ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு, ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான இலங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்.

விளக்க உரை

  • அனுமனின் சேவை சிறப்பாக  காட்ட கம்பனால் எழுதப்பட்டப் பாடல்
  • ஐந்து பூதங்களையும் அஞ்சிலே என்ற சொல் வைத்து சிறப்பாக பாடல் அமைத்தது போற்றுதலுக்கு உரியது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஒரு பொருளை மற்றொரு பொருளாக மயக்கி அறியும் அறிவு எது?
திரிபு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – எத்தால்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  எத்தால்

பொருள்

  • எக்காரணம்பற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

கணவனுக்கு ஏற்ற மனைவி அமையப்பெற்றால் எக்காரணம் பற்றியும்  அவளுடன்  கூடி வாழலாம். சற்றே மாறுபாடு கொண்டு குழப்பம் தரும் எதிர்மறையான மனைவி அமையப்பெற்றால் அவன் எவரிடமும் எதுவும் விளக்காமல் சந்நியாசம் கொள்ளலாம்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஆப்த வாக்கியம் என்பது என்ன?
சான்றோர் செய்த நூல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேமம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சேமம்

பொருள்

  • நல்வாழ்வு
  • இன்பம்
  • காவல்
  • அரணானவிடம்
  • சிறைச்சாலை
  • புதைபொருள்
  • ஓலைச்சுவடியின்கட்டு
  • பகைவரது அம்பு தன் மேற்படாமல் காக்கும் செயல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

அபிராமி அந்தாதி

கருத்து உரை

அபிராமி அன்னையே! நீ அணிந்து இருப்பது கடம்ப மாலை, உன்னுடைய படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); உன்னிடத்தில் இருப்பதோ கரும்பு வில்; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உனக்கு உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

விளக்க உரை

  • படை பஞ்சபாணம் தனுக் கரும்பு – உலக உயிர்களை படைப்பவள் எனும் பொருள் பற்றியது இவ்வரிகள். இவ்வாறான அருள் பெற்றே மன்மதன் தன் தொழில் செய்கிறான். மோக வடிவமாகவும், அதை நீக்கும் வலிமை பெற்றவள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கனை அழிக்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தோன்றி காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி அவனைக் கொன்று அழித்தாள்.)
  • யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – ‘உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. அஃதாவதான இரவுப் பொழுதில் (மாயைக்கு உட்பட்டு இருக்கும் காலங்களில் எனும் பொருள் பொருத்தமாக தோன்றுகிறது) அதை விலக்கி நல்வாழ்வு தருபவள்.
  • ஒன்றோடு இரண்டு நயனங்களே – நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள் – அம்மை அப்பர் திருக்கோலம் (சிவசக்தி சொருபம்).
  • திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
    பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
    இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
    வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.

எனும் திருமந்திரப் பாடலும்,

சிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம் என்று தொடங்கும்  லலிதா சஹஸ்ரநாமமும் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

விட்டு விலகாமல் உடன் நிகழும் இயல்புக்கு பெயர் என்ன?
அவிநா பாவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிராதாரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  நிராதாரம்

பொருள்

  • ஆதாரமின்மை
  • சார்புவேண்டாமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல வுந்தீபற
விமலற் கிடமதென் றுந்தீபற.

திருநெறி 5 – திருவுந்தியார்

கருத்து உரை

மனம் பலவழிகளிலும் புறத்தில் வியாபிக்காமல் ஆறு ஆறாதாரங்களிலும் அதற்கான உபாசனைத் தேவதைகளைத் தியானித்து நிராதாரமாகிய மனசலனமற்ற இடத்தே சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; அப்படிப்பட்ட அந்த கர்த்தாக்களுக்கு இருப்பிடம் அந்தத் திருவருளே.

விளக்க உரை

  • நிராதாரத யோகம் – ஆன்மா தன்னறிவு இழந்து அறிவே வடிவமான சிவனை அடைந்து பற்றற்று நிற்கும் நிலை

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொறையார்தரு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொறையார்தரு

பொருள்

  • சுமையாகப் பொருந்திய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

ஆலகால விடத்தை உண்டு அதனால் உண்டான கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது கங்கையாற்றையும் அணிந்தவனுமாய சிவ பெருமானுக்கு உரித்தான தலம் சிறகுகளுடன் கூடிய மது உண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காட்சியாலும், அனுமானத்தாலும் அறிய முடியாததை ஆப்த வாக்கியத்தால் அறிவது என்ன அளவை?
உரை அளவை (நூல் அளவை)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரம்

பொருள்

  • மேலானது
  • திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று –முதல் நிலை
  • கடவுள்
  • மேலுலகம்
  • திவ்வியம்
  • மோட்சம்
  • பிறவி நீக்கம்
  • முன்
  • மேலிடம்
  • அன்னியம்
  • சார்பு
  • தகுதி
  • நிறைவு
  • நரகம்
  • பாரம்
  • உடல்
  • கவசம்
  • கேடகவகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து,  தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.

விளக்க உரை

  • உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
  • ‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பாசம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பாசம்

பொருள்

  • வஞ்சம்
  • அழகு
  • அன்பு
  • இருள்
  • கண்ணி
  • கயிறு
  • கவசம்
  • மாயை
  • காலபாசம் – பாசக்கயிறு – (பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு. இரண்டு / மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கைகளை  உடைய நம் தூதுவர்களே! நம்முடைய ஈசன் அடியரை சென்று அடையாதீர்கள்; நீங்கள், இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழுமத்தின் பக்காமல் போகாமல் அவர்களை வழிபட்டு செல்வீராக!

விளக்க உரை

  • பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஒருவகை ஆயுதம்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மறைந்து நிற்கும் பொருளை அறிந்த ஒன்றின் மூலம் அறிவது என்ன அளவை?
கருதல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வயிரவன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வயிரவன்

பொருள்

  • பைரவரின்  பலவேறு பெயர்களில் ஒன்று
  • பிரம்ம சிரேச்சிதர்
  • உக்ர பைரவர்
  • க்ஷேத்ரபாலகர்
  • வடுகர்
  • ஆபத்துதாரனர்
  • சட்டைநாதர்
  • கஞ்சுகன்
  • கரிமுக்தன்
  • நிர்வாணி
  • சித்தன்
  • கபாலி
  • வாதுகன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை
காட்சி அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வார்சடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வார்சடை

பொருள்

  • நீண்டசடை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன்  தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும்  ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும்  உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில்  இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்;  ஓரு ஊருக்கு மட்டும்  உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன?
ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வாணன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வாணன்

பொருள்

  • வசிப்பவன்
  • ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன்.
  • பாவாணன்
  • மகாபலி வம்சத்தில் தோன்றிய அரசன்
  • நெல்வகை
  • ஒரு சிவகணத் தலைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

‘அரகர’ என்று சிவபெருமானைத் துதித்து எழுப்பும் ஒலியும், ஆகமங்களினின் பொருளை முழுமையாக உணர்ந்து ஓதும் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த  ‘வாணன்’ என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதான முதன்மை நிறைந்த யானையை  திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன் எனக்கு அளித்து அருளினான் என்னே அவனது திருவருள்!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் வேறு பெயர் என்ன?
அனுமானப் பிரமாணம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெஞ்சம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வெஞ்சம்

பொருள்

  • வஞ்சம்
  • பழி
  • சினம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சுமுகம் தோன்றில்
  ஆறு முகம்தோன்றும்;
வெஞ்சமரில் அஞ்சல்என
  வேல்தோன்றும் ;- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில்
  இருகாலும் தோன்றும்;
முருகா என்று ஒதுவார் முன்

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

கருத்து உரை

‘முருகா’ என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம்   தோன்றும்; கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’  என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத் தாள் தோன்றும்.

விளக்க உரை

  • எண்ணலங்காரம் சார்ந்தது இப்பாடல் – ஐந்து முகம், ஆறுமுகம், ஒருக்கால், இருக்கால்
  • அஞ்சு முகம் (ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) எனும் சிவ பெருமானின் ஐந்து முகம் தோன்றும் பொழுதினில் மேல் குறிப்பிட்ட ஐந்து முகங்குகளுடன் ஆறாவது முகமாகிய அதோமுகமும் உடைய முருகப் பெருமான் தோன்றுவான். (சடாட்சரம் என்று பொருள் கொள்வாரும் உண்டு). அஃதாவது சிவபெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் சிவ வடிவமாகத் தோன்றுவான்!
  • யோக மார்க்கம் முறைப்படி
  1. சிவ வடிவம் கண்ணுறும் போது ஆறு ஆதார நிலைகளும் காட்சி பெறும்.
  2. வாசியினை கால் என்று அழைப்பது சித்தர் மரபு. சுழுமுனை (ஒரு கால்) வழியாக வாசி செல்லும் போது திருத்தாள் (இரு கால்) காட்சி தோன்றும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காட்சி அளவையின் வேறு பெயர்கள் என்ன?
பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடைதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  இடைதல்

பொருள்

  • சோர்தல்
  • மனந்தளர்தல்
  • பின்வாங்குதல்
  • விலகுதல்
  • தாழ்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில்
எய்க்கும் கவலைக்(கு) இடைந்தடைந்தேன்,வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மதயானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கருத்து உரை

உடலால் ஏற்படும் பிணியொடு, மனதால் ஏற்படும் கவலையால் மனம் தளர்ந்து, சோர்ந்து யான் பாம்பினை இடையில் அணிந்தவனும், நெற்றிக்கண்களை உடையவனுமாகியவன் தந்த யானை முகம் கொண்ட திருவாளனது திருவடிகளையே புகலிடமாக அடைந்தேன்’. அதனால், யான் பிணியும் கவலையும் இல்லாதவன் ஆயினேன். (ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடையுங்கள்’ – என்பது குறிப்பு).

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை?
பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!