ஓவியனின் கனவுகள்

வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த  மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

பழைய வாசனைகள்

மகள் மறைத்து
வைத்து விளையாடும்
புத்தக மயிலிறகின் விளையாட்டில்
தோன்றி மறைகின்றன
நான் தொலைத்து விட்ட
குழந்தைப்பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்விற்குப் பிறகுமான வலிகள்

காலனே,
கொஞ்சம் காலம் கடந்து வா.
புதைப்பதற்கு இடமும் அற்று
எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற
தேசத்தில் வாழ்கிறோம்.
மானம் கெட்ட தேசத்தில்
வாழ்வு மட்டும் அல்ல
மரணத்திற்கும் பின்னும் வலிதான்.

Loading

சமூக ஊடகங்கள்

தகிக்கும் தனிமைகள்

எவர் அறியக்கூடும்
மற்றவர்களை தன்னிடம்
அணுகவிடாமல்
தடுத்த வீடுகள்
கால மாற்றத்தால்
தனித்திருப்பதையும்
தவித்திருப்பதையும்.

Loading

சமூக ஊடகங்கள்

சாசுவதம்

புகைப்படத்தின் மீது நாட்டம்
கொண்டவனாக இருந்த பொழுதுகளில்
உன்னைப் படம் எடுக்க விரும்பினேன்.
நிச்சயமற்ற ஒன்றை
நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய்.
அன்று முதல்
பிடித்துப் போனது உன்னையும்
பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.

Loading

சமூக ஊடகங்கள்

மானச தவம்

ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

திருமஞ்சனம்

சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?

Loading

சமூக ஊடகங்கள்

முமுஷு

காரணங்களின்றி காத்திருப்பு
வரும் புகைவண்டிக்காக.
நடை மேடையின் கடைவரை
ஒடிச் சென்று திரும்பும்
குழந்தைகள் கூட்டம்.
வருபவரை வரவேற்கவும்
வந்தவரை அனுப்பவும்
கண்ணிருடன் காத்திருக்கவும் கூட்டம்.
பெருத்த ஒலியுடன் வண்டியின் வருகையும்
பின்னொரு வியாபாரமும் தானாக நிகழும்.
விருப்பமுடன் உணவு உண்ணுதலும்
நீர் பிடித்து உண்ணுதலும் நிகழும்.
காலத்தின் கணக்கதனில்
வண்ணம் மாறும்.
வந்த தடம் அற்று வண்டி புகைவண்டி
புறப்பட்டுச் செல்லும்.
காலத்தின் சாட்சியாக
ஆல இலைகள் காற்றில் ஆடும்.

Loading

சமூக ஊடகங்கள்

2052

அருங்காட்சியகத்தில்
எழுதப்பட்டிருந்தது.
நீரில் நிலா கலைத்து விடாதீர்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்க வாசல்

மிகுந்த பசியோடு அறைக்குள் நான்.
பசிக்கிறதா என்கிறாய்.
ஆம் என தலை அசைக்கிறேன்.
கைகளில் இருக்கும் உணவினை
கிள்ளித் தந்துப் புன்னைக்கிறாய்.
உலகத்தில் உள்ள
உணவை எல்லாம் உண்டு
அறியப்படாத சொர்க்கத்தின் அருகினில் நான்.

Loading

சமூக ஊடகங்கள்

வல்லமை தாராயோ

நீண்ட நெடும் தூக்கதிற்கு
தயாரய் மனமும் உடலும்.
எதிர்படும் தலைவலிகள்
என்றைக்குமான தொடர்ச்சியாய்.
வலி பெரியதா, மருந்திடவா
என்கிறாய்.
வலியினை நீக்கும் மருந்தாய்
விரல்களும் உன் வார்தைகளும்.
இன்னும் இருக்கும் வலியை
உரைக்கிறேன் உன்னிடத்தில்.
அடுத்தவங்கள பாடா படுத்தினா
வலி எப்படி போவும்.
வார்தைகளின் முடிவில்
முடிவில்லா பயணம்.

Loading

சமூக ஊடகங்கள்

விதிகளை மதித்தல்

மோதிய வாகனத்தில்
எழுதப் பட்டிருந்தது
சாலை விதிகளை மதிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

பின் நோக்கிய நினைவுகள்

வீடு மாற்றத்தின் பொருட்டு
எல்லா பொருள்களையும்
வாகனத்தில் ஏற்றிய பின்னும்
ஏற்ற முடியாமல் திணறுகின்றன
அந்த வீட்டின் நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மவுனம் அறிதல்

பேச்சுகள் பெருகிய பொழுதுகளில்
பெரும் துக்கத்தில்
மவுனம் வேண்டி மனம்.
குருவினிடத்தில் கோரிக்கைகள்.
மவுனம்  அறியவும்  அடையவும்
மணம் புரிதலே சிறந்தவழி
என்று கூறிப் புன்னைகைத்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

நாத்திக நம்பிக்கை

நாத்திகத்தில் நம்பிக்கை இருப்பினும்
கிளி ஜோதிடம் பாருங்கள்.
எவர் அறியக்கூடும்
வீசி விடும் நெல் மணிகள்
ஒர் உயிரின், பசியின் ஒர் துளி
ஆற்றுவதை.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஊற்றுக்கண்

எங்கேனும் உற்று கவனித்திருக்கிறீர்களா
திருமணத்தில் சந்தோஷ ஒலிகளைத் தாண்டி
மனதிற்குள் அழுகைகளை
அடக்கி வைத்திருக்கும்
மணப்பெண்ணின் தந்தையின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

வீச்சங்கள்

மழை ஒய்விற்கான பின் ஒரு பொழுதுகளில்
நீண்ட தெருக்களில் நெடும் பயணம் உன்னோடு.
இலைகளின் எச்சில்களாய்
எச்சங்களாய் மழைத்துளிகள்.
தரையினில் இருந்து
மேலே எழும்பி
இலைகளின் ஈரத்தை
உதிர்த்து விட்டு
காதலை சொல்லத் துணிகிறேன்.
மாறுதல் கொள்ளும் உடல் மீது
ஏன் இந்த மயக்கம் என்கிறாய்.
உதிர்ந்து விட்ட உயிர்ச் சொல்லின்
முடிவில் துவங்கிய வீச்சங்கள்
வேரிலிருந்து விழுதுகள் வரை.

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் முறைகள்

கணப் பொழுதினில்
கண்ட கடவுளிடம்
ஒற்றை வார்த்தைகளில்
வாழ்வினை விவரிக்க சொன்னேன்.
சபலம்
சந்தோஷம்
சடலம்
சீவன்
சிவன்
என்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

மிருக பலி

மிருக பலித் தடை குறித்த
அறிவிப்புகள்
எல்லா இடங்களிலும்.
அறிவிப்புகள் அற்று
உயிர் பலிகள்.
வெறுப்பினை உமிழும்
வெட்கம் கெட்ட தேசத்தில்
வாழ்வதைவிட
வேறு என்ன செய்ய முடியும்.

Loading

சமூக ஊடகங்கள்