இருளினில் சொர்க்கம்

மின்சாரம் தொலைந்து
விளக்குகள் அற்ற பொழுதுகளில்
விட்டத்தில் ஒட்டி இருக்கும்
நட்சத்திர குவியல் கண்டு
சொர்க்கம்  எனில் என்னவென்றாள்
என் மகள்.
பதிலுக்கான புன்னகையில்
எதிர்ப்பட்டது எப்பொழுதுமான குரல்
போங்கப்பா நீங்க எப்பவுமே இப்படித்தான்.

Loading

சமூக ஊடகங்கள்

பயணத்தின் முடிவில்

ஊற்றிச் சென்ற
அமில வார்த்தைகள்
உலராமல்.
உணவிற்கான வசைவில்
உறைந்து கிடக்கிறது
உள் நெஞ்சில்
நெருப்பின் கங்குகள்.
காலத்தினால் மருந்திடப்படா
காயங்கள் எங்கினும் உண்டா?
தேகங்கள் தேயும் பொழுதுகளில்
தேவதைகளின் தோற்றம் கூடலாம்.
அக்கணத்திலாவது
உன் மெளனத்தைப் பரிசாக அளி.

Loading

சமூக ஊடகங்கள்

ஈந்து அளித்தல்

எதிர்படும் எல்லோருக்கும்
ஈந்து அளியுங்கள்
ஏனெனில் அவர்களில்
ஒருவன்
யாசகம் விரும்பா
கால மாற்றத்தால்
கைவிடப்பட்ட கலைஞனாக
இருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

பயணம்

குல தெய்வக் கோவிலில்
குதிரைப் பயணம்
தொடங்கச் சொன்னது குழந்தை.
மறுதலித்த மக்களால்
நீண்ட நெடும் பயணத்தில்
குலச் சாமிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறை கூவல்கள்

வாழ்வின் முக்கியங்கள்
மறைக்கப் பட்டு
ஒத்திகை அறையில்
கூத்து கலைஞர்களின் குரல்கள்
ம் ஆடுங்க
ஏற்பது இகழ்ச்சி

Loading

சமூக ஊடகங்கள்

கால மாற்றம்

எவர் அறியக் கூடும்
தான் கதா நாயகனாகவும்
கால மாற்றத்தில்
தானே தந்தையாகவும்
நடித்த படங்களை
மற்றொருவரின் வரவேற்பறையில்
காண நேர்கையில் ஏற்படுத்தும்
மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

வேர்கள் அறியா வலிகள்

ஊழிப் பெருங்காற்றில்
அலைந்து, அலைத்து செல்லும்
காய்ந்த இலையின்
வலிகளை அறிந்திருக்குமா
அதனை நீத்த
அப்பெருமரத்தின் வேர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

விஞ்ஞான சுரம்போக்கு

தேசங்கள் எங்கும்
ஒரு குடையின் கீழ்.
தேகங்கள் மட்டும் தனித்தனியே.

Loading

சமூக ஊடகங்கள்

மௌனத்தின் பேரொலி

காட்சி பிழையான தருணத்தில்
கவிதை ஒன்று சொல்லச் சொன்னேன்.
இன்னும் ஒலிக்கிறது
நீ விட்டுச் சென்ற
மௌனத்தின் பேரொலி.

Loading

சமூக ஊடகங்கள்

தேவைகள்

தலை சிறந்த பத்திரிக்கையின்
முதல் பக்கங்களில்
பணக்காரர்களின் வரிசைப் பட்டியல்.
கடைசிப் பக்கங்களில்
கண்டு உணர முடியா
எழுத்துகளில்
பட்டினியின் சாவு குறித்த விபரங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

தேவதைகளின் அழுகை ஒலி

எவருக்கேனும் கேட்டிருக்குமா
ஒவ்வொரு கலையின்
கடைசி மனிதனின்
மரணத்தின் போதும்
எழும் தேவதைகளின்
அழுகை ஒலியும்
அதன் அடிநாத வலிகளும்

Loading

சமூக ஊடகங்கள்

தீர்ப்பு

ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
போட்டி சந்தோஷங்களை
பட்டியலிடுவதில் நிகழ்ந்தது.
தீர்ப்பு வழங்க சரசவாணி.
முதியவர்கள் உணவகங்களில்
ரசித்து உண்ணும் உணவானது,
தனது மகளின் முதல்
மூக்குத்தி அனுபவத்தை
அனுபவிக்கும் தாய்.
இசையை அனுபவிக்கும்
வாலிபனின் மனம்.
பட்டியல் தொடரவா என்று கூறி
வாய்பினை எனக்கு தந்தார்.
இரவின் கடைப் பொழுதுகளில்
வீடு திரும்புகையில்
விழித்திருந்து கன்னத்தில் கொடுக்கப்படும்
கடையவளின் முத்தமும்
காயத நினைவுகளும் என்றேன்.
சரசவாணியின் சிரிப்பு யாரை நோக்கி?

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நிழல்கள்

எல்லா திருமணங்களிலும்
எங்கோ தெரிகிறார்கள்
மணமகளுடன் மனம் விட்டுபேசியும்
இதய ஈரங்களுடனும்
இமைப் புன்னகைகளுடன்
ராஜ குமாரனை எதிர்பார்த்து
காலத்தின் கட்டாயத்தினால் ஆன
முதிர் கன்னிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

விடை தேடுதல்

இளமையின் இறுமாப்பில்
இறைவனிடம் கேட்டேன்
திருமண வாழ்வு எதற்கு என்றேன்.
விடையை கற்றுக் கொடுத்தல்
தான் வாழ்வு
விடையை தேடுதல் அல்ல வாழ்வு
என்று கூறி இடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

கற்பனையின் ஊற்றுவாய்

ஏதோ ஒரு தருணத்தில்
ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வாழ்க்கை வசந்தமாய்.
உன் மடியினில் படுத்து உறங்கி
கதை பேசி கருத்து பரிமாறி
கன்னத்தில் முத்தமிட்டு
வாழ்க்கை வசந்தமாய்.
இரண்டாம் கட்டிலிருந்து
ஓங்கி ஒலித்தது ஒரு குரல்.
கண்ண மூடிகிட்டு
தாடிய தடவிகிட்டு
தூங்கிற நாய கண்டாலே
பத்திகிட்டு வருதுன்னு சொல்லுடா
உங்கப்பன்ட.

Loading

சமூக ஊடகங்கள்

துறவின் வகை

எனக்கான குருவினை மீண்டும்
சந்திக்கையில் எழுந்தது கேள்வி
எப்பொழுது துறவு வாய்க்கும்.
தன்னை இழத்தல் துறவு.
உற்று என் வார்த்தைகளை கவனி
தாரம் அமைத்துக் கொள்.
தானாய் வாய்க்கும் துறவு
என கூறி இடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

நிலம் படா சாயைகள்

படர்ந்து ஓடும் ஆறு,
மனதை வருடும் காற்று,
இரைச்சலைத் தாண்டி
குருவிகளின் ஒலிகள்,
உயரமான இடத்தில்
நட்சத்திர ஓட்டலில்
மனைவியான உன்னுடன் உணவு.
அனைத்தும் தாண்டி ஒர் குரல்.
நாடார் கடையில போய்
நாலு ரூவாயிக்கு கடன் சொல்லி
சக்கரை வாங்கி வாடா
உங்கப்பனுக்கு காப்பி தண்ணி
ஊத்தணும்.

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரம்மம்

கவிஞனான பொழுதுகளில்
தொடங்கியது தொடர் கேள்விகள்.
எல்லா பிம்பம்களும்
மற்றொரு பிம்பம் உண்டாக்கி.
நிழல் பதித்து செல்கின்றன
எல்லா பிம்பம்களும்
நிஜங்களின் தடையங்களை மூடி.
பிம்பம் மறையும் பொழுதுகளில் ப்ரம்மம்.

Loading

சமூக ஊடகங்கள்

அனுபவம்

பல தேசம் சென்றும்
பொருள் பெருக்கியும்
பல அனுபவம் பெற்றவன்
எனும் கர்வத்தோடு
கவிஞன் ஒருவனை
கர்வத்தோடு சந்தித்தேன்.
கவிஞனுக்கான வினாக்கள்
கொட்டும் அருவியாய்.
பொருளற்ற தருணங்களில்
நீரை உண்டு பசியாறி இருக்கிறாயா,
தவிக்கும் பொழுதுகளில்
தட்டுப்பட்ட ஒற்றை நாணயம் வைத்து
புகைத்திருக்கிறாயா,
கண்ணிரை கரைக்க
நீண்ட நேரம்
குளியலரையில் கழித்திருக்கிறாயா,
சந்தித்தலை மறுதலித்து
நெடு நேரம் கழித்து வீடு
திரும்பி இருக்கிறாயா,
அந்த தருணத்திலும் விழித்திருந்து
என்ன வாங்கி வந்திருக்கிறாய்
என்ற மகளின் கேள்விக்கு
இமை வழி கண்ணிரையும்
இதழ் வழி புன்னகையும்
இதய வலிகளுடன்
பரிசளித்திருக்கிறாயா
இன்னும் தொடரவா என்றான்.
விஷ்ணு முன்னான மகாபலி சக்ரவர்த்தியாய் நான்.

Loading

சமூக ஊடகங்கள்

ஒற்றுமையும் உவமையும்

ஒற்றுமையை உவமையினால்
விளக்க சொன்னான் நண்பன்.
காவலாய் இருப்பவற்றிற்கும்
பொருளற்று திரியும்
கவிஞனாகவும் கணவனாகவும்
இருப்பவற்றிற்கும் ஒற்றுமை என்றேன்.
தன்னிலை உணர்ந்து இதழ்வழி புன்னகை
நண்பனிடத்தில்.

Loading

சமூக ஊடகங்கள்