யானை காடு திரும்பிய கதை

அடர்ந்த பெருங்காட்டிலிந்து
கனத்த சரீரத்துடன்
பெரும் யானை ஒன்று
பிளிரி ஓடிவந்தது.
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.
‘காட்டில் உணவு இல்லை’ என்றும்
‘வற்றிய நீர் நிலைகளும்
தனக்கானவை அல்ல’ என்றும் கூறியது.
பெரு நிலத்தில்
வேளா வேளைக்கு உணவு என்றும்,
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,
வாழ்க்கை வசீகரமானது எனவும்
பகன்றது.
காலத்தின் சுழற்சிதனில்
அதன் கடைநாளில்
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மனிதத் தேவையில்
விலங்குகளின் தேவைகள்
வெகுதூரம் என்று கூறி
காட்டை நோக்கிப் புறப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் ரசவாதம்

நீண்ட நாட்களுக்கான பிறகான
உரையாடலில் சந்தோஷம் பிறந்தது.
‘சாமி கொடுத்த வரம்’ நீ என்கிறேன்.
‘சாமி கண்ணத்தான் குத்தும்-
ன்னு அம்மா சொன்னாள்’ என்கிறாய்.
வரம் கொடுத்த தெய்வம்
வார்த்தைகளை இரைத்தலில்
வசமாகிப் போனது இதயம்.













Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

தாடகை

‘எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன

அங்கம் ஹரே:புனகபூஷன
      மாச்ரயந்தீ *

எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
‘செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.

*ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Loading

சமூக ஊடகங்கள்

திருமணத்தின் விலை

திருமண வீட்டில்
ஆடுகள் அலறின.
உங்களுக்கு கல்யாணம்
எங்களுக்கு கருமாதி.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் தொடர்கதைகள்

வீட்டினை சுத்தம் செய்வதாக செயல்கள்,
என்றைக்கோ மறந்து போன பேனா,
இது அவனிடம் இருந்து பெறப்பட்டது
கூடவே நினைவுத் தொடர்கள்;
இந்த பேப்பரை தான் இத்தனை நாள் தேடினேன்,
கூடவே நினைவுத் தொடர்கள்;
நீண்ட நாட்களாக படிக்க இருந்த புத்தகம்
இன்று கிடைத்திருக்கிறது
கூடவே நினைவுத் தொடர்கள்;
என்றைக்கோ எடுத்த போட்டோ
இப்பொழுது இங்கு இருக்கிறது
கூடவே நினைவுத் தொடர்கள்;
பல நாட்களுக்கு முன் பார்த்த
சினிமா டிக்கட்
கூடவே நினைவுத் தொடர்கள்
சுத்ததின் முடிவில் எல்லா பொருள்களும்
அதனதன் இடத்தில் அப்படியே
சில நினைவுக் குறிப்புகளுடன்.

Loading

சமூக ஊடகங்கள்

தகப்பனின் சூல்

இரவினை இனிமையாக்க
ஒரு கதை சொல்வதாக ஆரம்பிக்கிறாய்.
‘ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்,
அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணாம்,
அது ரொம்ப சமத்தாம்’
என்று கூறிப் புன்னைக்கிறாய்.
சூல் கொள்கிறது என் நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

லீலாவினோதினி

உணவுப் பரிமாற்றத்தில்
நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம்.
‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு
திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’
என்கிறாள் உன் அன்னை.
‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’
என்கிறாய்.
தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.

Loading

சமூக ஊடகங்கள்

ஞானம் பிறந்த கதை

முழு நிலவில் குளுமையின்
அருகருகினில் நீயும் நானும்.
பேச்சுகள் திசைமாறி
கனவுகள் பற்றிச் செல்கிறது.
என் கனவு முழுவதும்
நாய்கள் என்று உரைக்கிறேன்.
விதவிதமான நாய்களும்
தோற்றங்களும் என்கிறேன்.
முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய்.
சில நாட்களில்
அவைகள் என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
பற்கள் விரிய கோபம் கொள்கின்றன.
சில நாட்களில்
காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன.
சில நாட்களில்
இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து.
இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன்.
‘விழித்திரு’ என்கிறாய்.
ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

சாயை

வாழ்வு,
விடை தேடும் வினாக்களோடு
விடிகிறது.
விடையளிக்கப் பட்ட கவிதைகளோடு
முடிகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

தபஸ்

வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய்.
‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன்.
‘எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய்.
‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன்.
‘நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே’ என்கிறாய்.
‘உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.

Loading

சமூக ஊடகங்கள்

இரவுகளின் நீட்சிமை

சுவற்றின் கூரையினில் ஒட்டியிருக்கும்
நட்சத்திரங்களைப் பார்த்தபடி
எனக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
வியப்பினால் விழிகள் விரிவடைகின்றன எனக்கு
‘ஒரு போர்வையினில் செல்ல அப்பாவைக்
கட்டிக் கொண்டு தூங்கலாம் அல்லவா’
என்கிறாய்.
அன்று நீட்சிமை கொண்டது எனக்கான இரவு.

Loading

சமூக ஊடகங்கள்

ஜனனி

பிறந்த குழந்தையை காண வருபவர்களால்
அறை நிரப்பப்பட்டிருந்தது.
எவர் அறியக்கூடும்
அதனையையும் தாண்டி
குழந்தையைக் காணவந்த
மலடி என்று அழைக்கப்பட்டவளின்
கண்ணீர் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

மகா மாயா

‘ஏன் இப்பொழுது மழை
அடிக்கடி பெய்வதில்லை’ என்கிறாய்.
வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன.
‘காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன்.
விடுவதற்கு நீர் வேண்டும்’ என்று
விழி நீரை இறைக்கிறாய்.
வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன
சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

குருஷேத்ரம்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் பட்டாலும்,
பிரிவுகள் மட்டும்
பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

படைப்பின் பயணம்

ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில்
நான் விழுந்த போது
எனக்கு சிறகுகள் இருந்தன.
அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன
பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன.
பல பறவைகள் சிறகுகள் அற்று.
ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம்.
மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்;
சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும்,
கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும்,
சிறகுகளில் முட்கள் இருக்கும்;
வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு
சிறகுகள் அற்று இருக்கும்
என்றும் பகர்ந்தன.
பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’
என்று வினா ஒன்று எழுப்பினேன்
‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி
அவ்விடம் விட்டு அகன்றன.
தொலை தூரத்தில்
மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில்.
அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

அணையா அடுப்பு

விடுதலையை விரும்பா இறக்கைகள்,
காற்று அடித்தால் தான் காசு சிலருக்கு,
எதிர் வழியில் தான் காசு பலருக்கு,
வீசும் காற்று எங்கும் வெம்மைகள்
வயிற்றின் வலி  நீக்கும் பொருட்டு.

Loading

சமூக ஊடகங்கள்

யாத்திரை

மகள்
பாதி உறக்கத்தில்
விட்டுச் சென்ற
இரவு நேர கதைகளுக்காக
‘ம்’ சொல்ல காத்திருக்கின்றன
பொம்மைகள்.

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

முள் இடரல்

பிரளயத்தின் முடிவினில்
தட்டப்பட்டன
தாசி வீட்டின் கதவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மறு உரு

ஆதியில் அன்றொரு நாள்.
எனக்கான குழந்தையாக நீ.
ஒரு பெயரிட்டு என்னை அழைக்கிறாயே,
வேறு பெயர்கள் இல்லையா என்கிறாய்.
ஸ்ரீ மாதா,
ஸ்ரீ மஹாராக்ஞீ
ஸ்ரீ மத்ஸிம்ஹாசனேச்வரீ

..
கோவிந்த ரூபினி.
..
..
மகா பைரவ பூஜிதாய
..
அம்மா,அப்பாவ பாரேன்,
பேசிகிட்டு இருந்தார்,
மயங்கி விழுந்துட்டாரு.

Loading

சமூக ஊடகங்கள்

காத்திருத்தலின் வலி

மகளின் எச்சிலால் ஆன
ஈர தலையனைகள்
நினைவூட்டுகின்றன,
நானும் ஓரு குழந்தையின்
சராசரி தந்தை என்று.

Loading

சமூக ஊடகங்கள்