பஞ்ச பூத கவிதை வரிசையில் – நெருப்பு
காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும் தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும் வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும் சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.
* மேலாம் எழுத்து – பரநாத ஒலி – திருமந்திரம் – 1212
புகைப்படம் : Virtualcitizen India