எல்லா நிலைகளிலும் வெளிப்படுகின்றன கவிதைகள். எண்ண ஓட்டத்திலும் எதிர் கொள்ளும் வெற்றியிலும் கவிதைக்கான கருப்பொருள்கள். வெற்றியிலும் பாராட்டிலும் வெறுமைக்கான நிமிடங்களிலும் சந்தோஷத்தின் சாயல் காட்டும் சக தர்மினியிடமும் உணர்வுகளை உள்வாங்க துவங்கிய வேலைகளில் உள்ளிருந்து ஒலிக்கிறது குரல் நாலு காசு சம்பாதிக்க வக்கிலைனாலும் நாற்பது பக்கம் எழுதுவாரு உங்கப்பாரு.
உற்ற பொருள் தேடி உரெல்லாம் பயணம் விதை துளிர்க்க துவங்குகையில் உறுமாறும் வெறுமை துளிர்தல் தாண்டி துளைத்தல் நிகழும் ம்ண்ணின் கீழ் வேர்களாய் துளிர்தவை பரவுதலில் பரவசம் ஏற்படுத்தும் அதையும் தாண்டி அனைத்தும் மாறும் பூக்களாய் கனிகளாய் காலத்தின் மாற்றத்தால் நிலைப்புகள் நீக்கம் கொள்ளும் விழ்ந்து கிடக்கும் பொருள் தேடி விரையும் காகங்கள் கவிதையும் கவிதை சார்ந்த இடமும் பசியோடு ஆயினும் கவிஞன் என்னும் கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்கும் மிருகங்கள்
எப்போதாவது பூக்கின்றன குறிஞ்சிப் பூக்கள். தாயின் மடியினில் இருந்து தலையசைக்கின்றன சில பூக்கள். கைகளை அகல விரித்து கண்களைக் காட்டி பயமுறுத்துகின்றன சில பூக்கள். முடிவில்லா பயணத்தில் முழுநீள புன்னகையோடு சில பூக்கள். பூக்களின் சிந்தனையில் பூரணமான வலி வயிற்றினில் கருமை நிறைந்த இரவுப் பொழுதினில் எங்கு சென்று தேடுவது மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும் எப்பொதும் பூக்கின்றன காட்டுச் சாமந்திகள்
சூழ்ந்து செல்லும் ஆறு, சுழன்று வீசும் காற்று, கண்களுக்கு இனிய பசுமை, காதுகளுக்கு இனிய ஒலிகள், மனதுக்கு இனிய வாசம் சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது ஒரு மாதிரி என்றார்கள். கால சுழற்சியில் மாறின காட்சிகள் மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள் சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு எவருமே விடையளிக்கவில்லை.
ஏதோ ஒரு கணத்தில் நிகழ்த்து விடுகிறது கவிதைக்கான நிகழ்வு கவிஞனுக்கான் முகவரியில் காணக் கிடைக்கின்றன நீண்ட தாடியும், நீளமான முடியும் உலர்ந்த தேகமும், உறுதியான மனமும் மானம் மிகுந்த கவிஞன் விளிக்கிறது வெளி உலகம் மானம் கெட்ட உனக்கு என்ன வாழ்வு விளிக்கிறது உள் உலகம் வலிகளற்ற கவிஞன் யார்?
ஏதோ ஒரு கணத்தில் வந்து விடுகிறது வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான் மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன வயிற்றுக்கான வலிகளில் கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில் எதிர்படுகின்றன வார்த்தைகள் அவன் பிறவிக் கலைஞன் பிழைப்புக்காக கை ஏந்துவானா? அடை மழை வந்து நனைக்கிறது வயிற்று நெருப்பின் வலிகளை.