கணவனுக்கு ஏற்ற மனைவி அமையப்பெற்றால் எக்காரணம் பற்றியும் அவளுடன் கூடி வாழலாம். சற்றே மாறுபாடு கொண்டு குழப்பம் தரும் எதிர்மறையான மனைவி அமையப்பெற்றால் அவன் எவரிடமும் எதுவும் விளக்காமல் சந்நியாசம் கொள்ளலாம்.
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
அபிராமி அந்தாதி
கருத்துஉரை
அபிராமி அன்னையே! நீ அணிந்து இருப்பது கடம்ப மாலை, உன்னுடைய படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); உன்னிடத்தில் இருப்பதோ கரும்பு வில்; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உனக்கு உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
விளக்கஉரை
படை பஞ்சபாணம் தனுக் கரும்பு – உலக உயிர்களை படைப்பவள் எனும் பொருள் பற்றியது இவ்வரிகள். இவ்வாறான அருள் பெற்றே மன்மதன் தன் தொழில் செய்கிறான். மோக வடிவமாகவும், அதை நீக்கும் வலிமை பெற்றவள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கனை அழிக்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தோன்றி காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி அவனைக் கொன்று அழித்தாள்.)
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – ‘உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. அஃதாவதான இரவுப் பொழுதில் (மாயைக்கு உட்பட்டு இருக்கும் காலங்களில் எனும் பொருள் பொருத்தமாக தோன்றுகிறது) அதை விலக்கி நல்வாழ்வு தருபவள்.
ஒன்றோடு இரண்டு நயனங்களே – நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள் – அம்மை அப்பர் திருக்கோலம் (சிவசக்தி சொருபம்).
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.
எனும் திருமந்திரப் பாடலும்,
‘சிந்தூராருணவிக்ரஹாம்த்ரிநயனாம்‘ என்று தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமமும் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
விட்டு விலகாமல் உடன் நிகழும் இயல்புக்கு பெயர் என்ன? அவிநா பாவம்
மனம் பலவழிகளிலும் புறத்தில் வியாபிக்காமல் ஆறு ஆறாதாரங்களிலும் அதற்கான உபாசனைத் தேவதைகளைத் தியானித்து நிராதாரமாகிய மனசலனமற்ற இடத்தே சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; அப்படிப்பட்ட அந்த கர்த்தாக்களுக்கு இருப்பிடம் அந்தத் திருவருளே.
விளக்க உரை
நிராதாரத யோகம் – ஆன்மா தன்னறிவு இழந்து அறிவே வடிவமான சிவனை அடைந்து பற்றற்று நிற்கும் நிலை
ஆலகால விடத்தை உண்டு அதனால் உண்டான கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது கங்கையாற்றையும் அணிந்தவனுமாய சிவ பெருமானுக்கு உரித்தான தலம் சிறகுகளுடன் கூடிய மது உண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சியாலும், அனுமானத்தாலும் அறிய முடியாததை ஆப்த வாக்கியத்தால் அறிவது என்ன அளவை? உரை அளவை (நூல் அளவை)
சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து, தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.
விளக்க உரை
உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.
காலபாசம் – பாசக்கயிறு – (பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு. இரண்டு / மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்)
படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கைகளை உடைய நம் தூதுவர்களே! நம்முடைய ஈசன் அடியரை சென்று அடையாதீர்கள்; நீங்கள், இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழுமத்தின் பக்காமல் போகாமல் அவர்களை வழிபட்டு செல்வீராக!
விளக்கஉரை
பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஒருவகை ஆயுதம்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
மறைந்து நிற்கும் பொருளை அறிந்த ஒன்றின் மூலம் அறிவது என்ன அளவை? கருதல் அளவை
நடந்த வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை காட்சி அளவை
இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும் உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில் இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓரு ஊருக்கு மட்டும் உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன? ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்
‘அரகர’ என்று சிவபெருமானைத் துதித்து எழுப்பும் ஒலியும், ஆகமங்களினின் பொருளை முழுமையாக உணர்ந்து ஓதும் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த ‘வாணன்’ என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதான முதன்மை நிறைந்த யானையை திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன் எனக்கு அளித்து அருளினான் என்னே அவனது திருவருள்!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
கருதல் அளவையின் வேறு பெயர் என்ன? அனுமானப் பிரமாணம்
அஞ்சுமுகம் தோன்றில் ஆறு முகம்தோன்றும்; வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் ;- நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்; முருகா என்று ஒதுவார் முன்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்துஉரை
‘முருகா’ என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும்; கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’ என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத் தாள் தோன்றும்.
விளக்கஉரை
எண்ணலங்காரம் சார்ந்தது இப்பாடல் – ஐந்து முகம், ஆறுமுகம், ஒருக்கால், இருக்கால்
அஞ்சு முகம் (ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) எனும் சிவ பெருமானின் ஐந்து முகம் தோன்றும் பொழுதினில் மேல் குறிப்பிட்ட ஐந்து முகங்குகளுடன் ஆறாவது முகமாகிய அதோமுகமும் உடைய முருகப் பெருமான் தோன்றுவான். (சடாட்சரம் என்று பொருள் கொள்வாரும் உண்டு). அஃதாவது சிவபெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் சிவ வடிவமாகத் தோன்றுவான்!
யோக மார்க்கம் முறைப்படி
சிவ வடிவம் கண்ணுறும் போது ஆறு ஆதார நிலைகளும் காட்சி பெறும்.
வாசியினை கால் என்று அழைப்பது சித்தர் மரபு. சுழுமுனை (ஒரு கால்) வழியாக வாசி செல்லும் போது திருத்தாள் (இரு கால்) காட்சி தோன்றும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் என்ன? பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை
உடலால் ஏற்படும் பிணியொடு, மனதால் ஏற்படும் கவலையால் மனம் தளர்ந்து, சோர்ந்து யான் பாம்பினை இடையில் அணிந்தவனும், நெற்றிக்கண்களை உடையவனுமாகியவன் தந்த யானை முகம் கொண்ட திருவாளனது திருவடிகளையே புகலிடமாக அடைந்தேன்’. அதனால், யான் பிணியும் கவலையும் இல்லாதவன் ஆயினேன். (ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடையுங்கள்’ – என்பது குறிப்பு).
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை? பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை
மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.
கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்
கருத்துஉரை
மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.
விளக்கஉரை
முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.
மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.
விளக்க உரை
ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.
செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
விளக்க உரை
சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த கன்னிப் பெண்கள் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள திரு மாமயிலையில், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் கபாலிச்சரர் எனும் பெருமானை பூச்சுக்களை உடைய இளமகளிர் கொண்டாடும் திருவிழாவாகிய கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை விளக்கீடு விழாக்களின்போது திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால் சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சிவக்கொழுந்தே! வண்டுகள் விரும்பிச் செல்லும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! பகைவருடைய மூன்று மதில்கள் கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அதுபோல் அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக!
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
ஒரு பிரபஞ்ச பொருள்களை உணர்வதற்கு கருவியாகிய இருக்கும் உணர்வும், அந்த உணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் ஆகியவன் சிவன். அனைத்துப் பிரபஞ்சப் பொருள்களையும் ஒன்றாக்கி இணைத்து செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் பிரபஞ்சத்தில் இருந்து தனியே வேறுபடுத்தி நினைக்க வரமாட்டான். ஆயினும் கொத்தாய் உள்ள வாசனை மிக்க மலர்களிடம் இருந்து மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயல் பாட்டிலும் அவன் விளங்குகிறான்.
விளக்க உரை
எல்லாப் பொருள்களிலும் அவன் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியும், அனைத்துப் பொருள்களின் செயல் பாட்டையும் அவனது செயலாக உணர்தல் பற்றியதும் குறித்தது இப்பாடல்.
ஒரு காரிய நிகழ்ச்சிக்கு முதல் காரணம், துணை காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் தேவைப்படும். இவைகளில் முதல் காரணமும், துணை காரணமும் தனியே தனித்து இயங்காது. காட்சிக்கு புலப்படும் குடம் முதலிய காரியத்திற்கு பஞ்ச பூதத்தில் ஒன்றான மண் முதல் காரணமாகவும், குலாச் சக்கரம் எனும் திரிகை துணைக் காரணமாகவும் இருக்கும். குயவன் நிமித்த காரணமாக இருப்பான். ஆராய்ந்து பார்ப்பின் மண் மாயையாகவும், திரிகை அருட்சக்தியாகவும், குயவனை சிவனாகவும் எடுத்து உலகம் தோற்றுவிக்கப்படும்.
விளக்க உரை
உலக படைப்பிற்கு சிவனே நிமித்த காரணம் என்பதை விளக்கும் பாடல்
மாயையில் இருந்து சிவன் தனது அருள் தன்மையினால் உலகங்களை தோற்றுவிக்கிறான் என்பது விளங்கும்.
புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் கொள்கைகள் மறுதலிக்கப்பட்டு அகச்சமய கருத்துக்கள் நிலை நிறுத்தப் பெறும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அளவை எனும் பிரமாணத்திற்கு அடிப்படை எவை? அளவை, அளக்கும் கருவி
எந்த விதமான பற்றும் இல்லாமல் விட்டு ஒழிப்பதற்கு அரிதான இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். அவ்வாறு இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் சென்று வந்து மீண்டும் பூமியில் இறங்கி மீண்டும் பிறப்பேன். அவ்வாறு பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகிறது.
விளக்க உரை
துறக்கப்படாத உடல் – மும்மலங்களின் காரணமாக பற்று இல்லாமல் விட்டொழிக்க எளியதாக இல்லாத உடம்பு..
கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.