ரகசியமாய்..

நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘சிறந்த உடைகள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
‘என்னதான் வேண்டும்’ என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
‘நீ வேண்டும்’ என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஸ்ர்வ மோகினி

ஒரு நாளில்
முடிவினில் நீயும் நானும்.
சிறு பயணத்தில்
என் விரல் பிடித்து
நீ நடக்கிறாய்.
‘பார்த்து வருகிறாயா இல்லை
நான் நடை பழக சொல்லித்தரவா’
என்று கூறி
புன்னகைக்கிறாய்.
மயிலிறுகளில் தீண்டல்
வாய்த்திடுமோ மறுமையிலும்.

ஸ்ர்வ மோகினி -லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் ஒரு பெயர்

Loading

சமூக ஊடகங்கள்

மரணத்தின் நிழல்

எல்லா மறுதலித்தலும்
உருவாக்கிச் செல்கின்றன்
ஒவ்வொரு முறையும்
ஒரு மரணத்தை.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம விசாரம்

காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
‘வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.

Loading

சமூக ஊடகங்கள்

உலகம் தனித்திருந்தது

ஆதியில் மரங்களும் மனிதர்களும்
நேசம் கொண்டவர்களாக இருந்தனர்.
ஒருமித்த மொழியில்
பகிர்ந்து கொண்டனர் தங்கள் உணர்வுகளை.
தன்னை கொடுக்க தயங்கவில்லை மரங்கள்
அதனை விலக்க தயங்கவில்லை மனிதர்கள்.
நாளின் ஒரு பொழுதுகளில்
மனக்கசப்புகள்.
பெருங் காற்றின் வழி இலைகளை உதிர்ப்பதாக
மனிதனின் குரல்கள்.
நித்தமுமான கவனிப்புகள்
அநித்தியமானது என்று மரங்களின் குரல்கள்.
பிறிதொரு சந்ததியில்
மனிதனில் மொழியறிவு குறைந்து, குலைந்து
தான் மட்டும் அனைத்தும் அறிந்தவனாக
கர்வம் கொண்டிருந்தான்.
உலகில் அனைத்து மரங்களையும் அழித்து
கடைசி மரம் அழித்தலில் மரம் சொன்னது;
‘என்னை அழித்தால், நீயும் அழிவாய்’ என்று.
கோடாலியின் கடைசி வெட்டிதலில்
உலகம் தனித்திருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

பொருளற்றவனை
எளிதில் புரிந்து கொண்டு
குரைக்க துவங்கி விடுகின்றன
மிருகங்களும்.

*இல்லானை இல்லாளும் வேண்டாள் – ஔவை

Loading

சமூக ஊடகங்கள்

தனித்த எச்சங்கள்

நீண்ட நெடும் பயணத்தில்
பாதங்களைப் பதித்து
நம் இருவரின் பயணமும்
தொடர்கிறது.
என் பாத சுவடுகள் மட்டும்
தனித்திருக்கிறது.
காரணம் கேட்கிறேன்.
எச்சங்களை விட்டுச் செல்வதால்
நீ பிம்பம்,
தனித்திருப்பதால் நான் மூலம் என்று கூறி
விழி வழியே வரும்
வினாக்களைப் பரிசளிக்கிறாய்.
அங்கீகாரமாக கண்ணீர் முத்துக்கள் என்னில்.

Loading

சமூக ஊடகங்கள்

ஜன்னல் வெளிச்சங்கள்

காற்றின் தடமன்றி
வேறு என்ன அறிந்திருக்கும்
ஜன்னல்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சுடலை

பட்ட மரத்தில்
குருவிக் கூடு
எதைச் சொல்ல முற்படுகிறது?

*சுடலை – மயானம்

Loading

சமூக ஊடகங்கள்

சொல் பிறந்த கதை

சொற்களின் வேர் தேடி புறப்பட்டன
சிந்தனைகள்.
உன்னிடம் இருந்தா பிறக்கிறது என்று
ஆகாயத்திடம் வினவினேன்.
காற்று என்னுள் இருப்பதால் காற்றினை
கேட்கச் சொன்னது.
பற்றி எரிவதாலும், படர்ந்து எரிவதாகும்
நெருப்பு பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது காற்று.
கடந்து செல்ல துணைசெய்வது நீராவதால்
நீர் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நெருப்பு.
இயக்கம் அனைத்தும் பூமியில் என்பதால்
நிலம் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நீர்.
பிரபஞ்சங்களின் சேர்க்கையால் ஆனது
மனிதக் கூடு என்பதால்
மனிதனிடம் கேட்கச்சொன்னது நிலம்.
நாபிச் சுழியில் இருந்து சூல் கொள் வார்தைகள்
தொண்டைதாண்டி,
வாயினின் வழி வரத்துவங்குகையில்
சொற்களின் முடிவுகள் பூரணத்துவத்துடன்.

Loading

சமூக ஊடகங்கள்

நடைவண்டி நாட்கள்

வாழ்வினில் என்ன இருக்கிறது
கனவுகளைத் தாங்கி
நடத்தல் தவிர.

Loading

சமூக ஊடகங்கள்

ஜகத்பதி

அன்று ஒரு நாள்
ஏரியில் நீராவி மண்டபத்தின் அருகில்
கால்களை அலைத்தபடி நான்.
நினைவுகளில்
தும்பைப் பூவின் தேன் துளி,
வட்டங்கள் பெரிதாகவும்
மிகப் பெரிதாகவும் மாறி மாறி.
கரையினில் சலனமற்று நீ.
கைகளில் இருந்து வீசிய
கற்களும் நீருக்குள் மூழ்கி அலைகளுடன்.
சைகைகளைக் காட்டி
காரணம் கேட்கிறேன்.
முற்றுப் பெறா புன்னகையை உதிர்க்கிறாய்.
அப்போது
கற்கள் மூழ்கி இருந்தன
அலைகள் அற்றதாய் ஏரி.
அப்போதும் சலனமற்று நீ.

ஜகத்பதி* – கால பைரவர் அஷ்டத்தில் வரும் பெயர்.

Loading

சமூக ஊடகங்கள்

நினைவிருத்தல்

நகரப் பேருந்தில் இருந்து
கைகாட்டிச் சென்ற
குழந்தைகளை
நினைவு வைத்திருக்குமா
நெடுஞ்சாலை மரங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

தடயங்கள் அற்ற தடம்

காற்றில் கரைந்து செல்லும்
வண்ணத்துப் பூச்சிக்கு
தடம் அமைத்து யார்?

Loading

சமூக ஊடகங்கள்

முடிவற்ற தேடல்கள்

பெருங்கூட்டமொன்று
கூடிக் கலந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒருவன் தான் தொலைத்த பணத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த புகழைத்
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த குடும்பத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த சந்தோஷங்களை
தேடுவதாகச் சொன்னான்.
கிடைத்த காலவெளியில்
அவரவர் தொலைந்தது கிடைத்ததாக உரைத்தார்கள்.
ஊழி ஓட்டத்தில் ஒருவன் வந்து
உரை பகன்றான் எதைத் தேடுகிறாய் என்று.
என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
‘அவன் கிறுக்கு பயல் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

மண் வாசனை

எல்லா மழைக் காலமும்
எழுப்பி விடுகிறது
உறங்கி இருக்கும் நினைவுகளை

Loading

சமூக ஊடகங்கள்

நான் தொலைதல்

நீ, கிளி பொம்மையை வாங்கி
அதை பறக்க விட முற்பட்ட தருணங்களில்
தொலைந்திருந்தது
எனது இளமைக் காலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

நித்ய கன்னி

ஒரு ஒளிநாளில்
எனக்கான காதலைச் சொல்கிறேன்.
மோனப் புன்னகைக் கொண்டு
புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறாய்.
வயோதிகனாக நானும்
நித்திய கன்னியாக நீயும்.
எப்படி என்கிறேன்.
ஒளிவேக சுழற்சி*
உண்மையை உணர்தியது என்கிறாய்.
கரைகிறது கனவுகள்.

*As per the Einstein’s relativity theory, when you travel with the speed of light, your age will be reduced. 

Loading

சமூக ஊடகங்கள்

மனதின் வலிகள்

எல்லா வெற்றிகளுக்குப்
பின்னும் இருக்கின்றன
மறுக்க முடியா
மனதின் வலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மரங்கள் ஊமையான கதை

ஆதியில் அவன் பெயர்                                     ‘அவன்’ என்று இருந்தது.
அவனுக்கு மரங்களின் மொழிகளும்,
செடிகளின் மொழிகளும் தெரிந்திருந்தன.
நேசித்த இயற்கையை அவன் நேசித்தான்.
சில மரங்கள் அவனிடம்                             அன்பைச் செலுத்தின.
சில செடிகள் அவனிடம்                         துன்பங்களைப் பகிர்ந்தன.
சில மரங்கள் அவனிடம் கதை கேட்டன.
சில செடிகள் அவனிடம் தூங்கின.
சில குறுங் கொடிகளும் அவனிடம்                  நட்பு கொண்டன.
மரங்களின் நட்பு மற்றவர்களுக்கு               புதிராக இருந்தது.
மிகுந்த விலை கொடுத்து
மரங்களையும் செடிகளையும் வாங்குவதாக ஒருவன் தெரிவித்தான்.
செய்தியின் அடுத்த நாளில்
அவன் சென்ற போது மரங்கள் ஊமையாக இருந்தன.

Loading

சமூக ஊடகங்கள்