ஊற்றிச் சென்ற அமில வார்த்தைகள் உலராமல். உணவிற்கான வசைவில் உறைந்து கிடக்கிறது உள் நெஞ்சில் நெருப்பின் கங்குகள். காலத்தினால் மருந்திடப்படா காயங்கள் எங்கினும் உண்டா? தேகங்கள் தேயும் பொழுதுகளில் தேவதைகளின் தோற்றம் கூடலாம். அக்கணத்திலாவது உன் மெளனத்தைப் பரிசாக அளி.
எவர் அறியக் கூடும் தான் கதா நாயகனாகவும் கால மாற்றத்தில் தானே தந்தையாகவும் நடித்த படங்களை மற்றொருவரின் வரவேற்பறையில் காண நேர்கையில் ஏற்படுத்தும் மன வலிகளை.
தலை சிறந்த பத்திரிக்கையின் முதல் பக்கங்களில் பணக்காரர்களின் வரிசைப் பட்டியல். கடைசிப் பக்கங்களில் கண்டு உணர முடியா எழுத்துகளில் பட்டினியின் சாவு குறித்த விபரங்கள்.
ஒரு முறை எனக்கும் கடவுளுக்குமான போட்டி சந்தோஷங்களை பட்டியலிடுவதில் நிகழ்ந்தது. தீர்ப்பு வழங்க சரசவாணி. முதியவர்கள் உணவகங்களில் ரசித்து உண்ணும் உணவானது, தனது மகளின் முதல் மூக்குத்தி அனுபவத்தை அனுபவிக்கும் தாய். இசையை அனுபவிக்கும் வாலிபனின் மனம். பட்டியல் தொடரவா என்று கூறி வாய்பினை எனக்கு தந்தார். இரவின் கடைப் பொழுதுகளில் வீடு திரும்புகையில் விழித்திருந்து கன்னத்தில் கொடுக்கப்படும் கடையவளின் முத்தமும் காயத நினைவுகளும் என்றேன். சரசவாணியின் சிரிப்பு யாரை நோக்கி?
எல்லா திருமணங்களிலும் எங்கோ தெரிகிறார்கள் மணமகளுடன் மனம் விட்டுபேசியும் இதய ஈரங்களுடனும் இமைப் புன்னகைகளுடன் ராஜ குமாரனை எதிர்பார்த்து காலத்தின் கட்டாயத்தினால் ஆன முதிர் கன்னிகள்.
இளமையின் இறுமாப்பில் இறைவனிடம் கேட்டேன் திருமண வாழ்வு எதற்கு என்றேன். விடையை கற்றுக் கொடுத்தல் தான் வாழ்வு விடையை தேடுதல் அல்ல வாழ்வு என்று கூறி இடம் அகன்றார்.
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா வாழ்க்கை வசந்தமாய். உன் மடியினில் படுத்து உறங்கி கதை பேசி கருத்து பரிமாறி கன்னத்தில் முத்தமிட்டு வாழ்க்கை வசந்தமாய். இரண்டாம் கட்டிலிருந்து ஓங்கி ஒலித்தது ஒரு குரல். கண்ண மூடிகிட்டு தாடிய தடவிகிட்டு தூங்கிற நாய கண்டாலே பத்திகிட்டு வருதுன்னு சொல்லுடா உங்கப்பன்ட.
எனக்கான குருவினை மீண்டும் சந்திக்கையில் எழுந்தது கேள்வி எப்பொழுது துறவு வாய்க்கும். தன்னை இழத்தல் துறவு. உற்று என் வார்த்தைகளை கவனி தாரம் அமைத்துக் கொள். தானாய் வாய்க்கும் துறவு என கூறி இடம் அகன்றார்.
படர்ந்து ஓடும் ஆறு, மனதை வருடும் காற்று, இரைச்சலைத் தாண்டி குருவிகளின் ஒலிகள், உயரமான இடத்தில் நட்சத்திர ஓட்டலில் மனைவியான உன்னுடன் உணவு. அனைத்தும் தாண்டி ஒர் குரல். நாடார் கடையில போய் நாலு ரூவாயிக்கு கடன் சொல்லி சக்கரை வாங்கி வாடா உங்கப்பனுக்கு காப்பி தண்ணி ஊத்தணும்.
கவிஞனான பொழுதுகளில் தொடங்கியது தொடர் கேள்விகள். எல்லா பிம்பம்களும் மற்றொரு பிம்பம் உண்டாக்கி. நிழல் பதித்து செல்கின்றன எல்லா பிம்பம்களும் நிஜங்களின் தடையங்களை மூடி. பிம்பம் மறையும் பொழுதுகளில் ப்ரம்மம்.
பல தேசம் சென்றும் பொருள் பெருக்கியும் பல அனுபவம் பெற்றவன் எனும் கர்வத்தோடு கவிஞன் ஒருவனை கர்வத்தோடு சந்தித்தேன். கவிஞனுக்கான வினாக்கள் கொட்டும் அருவியாய். பொருளற்ற தருணங்களில் நீரை உண்டு பசியாறி இருக்கிறாயா, தவிக்கும் பொழுதுகளில் தட்டுப்பட்ட ஒற்றை நாணயம் வைத்து புகைத்திருக்கிறாயா, கண்ணிரை கரைக்க நீண்ட நேரம் குளியலரையில் கழித்திருக்கிறாயா, சந்தித்தலை மறுதலித்து நெடு நேரம் கழித்து வீடு திரும்பி இருக்கிறாயா, அந்த தருணத்திலும் விழித்திருந்து என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்ற மகளின் கேள்விக்கு இமை வழி கண்ணிரையும் இதழ் வழி புன்னகையும் இதய வலிகளுடன் பரிசளித்திருக்கிறாயா இன்னும் தொடரவா என்றான். விஷ்ணு முன்னான மகாபலி சக்ரவர்த்தியாய் நான்.