அமுதமொழி – விளம்பி – ஆவணி – 7 (2018)

பாடல்

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சடையின்மேல் பிறை ஆகிய சந்திரனையும், சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவனாகவும், உடைந்த தலை ஓடு ஆகிய மண்டையோட்டில் உணவு ஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவனாகவும், தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவனாகவும் இருக்கும் அவனையன்றிப் பிறரை நினைக்காது எனது உள்ளம்.

விளக்க உரை

  • உள்காது – நினையாது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 23 (2018)

 

பாடல்

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் புகழ்ந்து போற்ற அவனுக்கு  விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், விலகாத செல்வத்தோடு கூடியவரும்,  பிறப்பு இறப்பும் அறியாதவரும், சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவரும், உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருள்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 22 (2018)

 

பாடல்

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்

கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்

அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை

சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 19 (2018)

பாடல்

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட விதியானது அவரது வாழ்நாள் வயது பதினாறு எனவும், அந்த விதியின் விளைவாக வந்த மரணத்தினை, அவர் இறை வழிபாடு செய்து, விதியின் விளைவாய்  வெளிப்பட்டுச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்தது புகலிநகர் எனும் திருத்தலமாகும்

விளக்க உரை

  • கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்பது பற்றிய பாடல்.
  • ‘கொதியாவருகூற்றை உதைத்தவர்’  –  விதியென்னும் நியதியைப்பற்றி வந்த கூற்றுவனின் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளவைத்த பெருங்கருணை எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 16 (2018)

பாடல்

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக்  கொண்டு வரும் கெடில நதியின்  மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 14 (2018)

 

பாடல்

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே

தேவாரம் – முதல் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில்  உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.

விளக்க உரை

  • தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள்  என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாக யோக மரபில் காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 12 (2018)

பாடல்

ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இலக்குத் தவறாது சென்று வினையாற்றும் ஆயுதம் ஆகிய கணைகளொடுகூடிய விற் படையை உடைய இராவணனை ‘ஆ’ என்று அலறுமாறு தாக்கி அருளிய சிவபிரானுக்குரிய இடமும், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

விளக்க உரை

  • மறிமான் – மான்கன்று; ஆடுகளும், மான்களும் எனவும் கூறலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 3 (2018)

பாடல்

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும்.

விளக்க உரை

  • அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்.
  • மையார்மேனி – கரியமேனி.
  • அரக்கன் – இராவணன்.
  • கொய் ஆர் மலர் – கொய்தலைப் பொருந்திய மலர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 24 (2018)

பாடல்

வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இமயமலையில் அவதரித்த மலையரசனின் மகளான உமாதேவிக்கு கயிலைமலையைப் பெயர்த்து  எடுத்து ஓர் அச்சத்தை உண்டாக்கிய, புத்தி இல்லாத, வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை இமய மலையின்கீழ் நொறுங்கும்படி தன் கால் பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறு உண்ர்ந்து இறைஞ்ச, ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமாவதும்சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்கதும் ஆனது திருச்சண்பைநகர் ஆகும்.

விளக்க உரை

  • அக்காலத்துத் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று வந்ததை இப்பதிகத்தால் அறியலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 20 (2018)

பாடல்

அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

குடவாயிலில் எனும் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவனானவன், அலைகள் ஏற்படுத்தும் கங்கையை அணிந்தவன்; அனலை ஏந்தியவன்; எண்குணத்துள் ஒன்றான மும்மலமில்லாதவன்; கபாலம் எனும் பிரமகபாலத்தில் யாசகம் பெறுபவன்; யகங்கள் கடந்தவன்; நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய திரிசூலத்தையும்,  மழுவாயுதம் முதலியவற்றையும் ஏந்தியவன்.

விளக்க உரை

  • சதுரன் – ‘மூவர்க்கும் முதல்வன்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன.  திறமையுடையவன்; நகரவாசி; பேராசைக்காரன் போன்ற பொருள்களும் இருக்கின்றன. பொருத்தமின்மை காரணமாக இவைகள் விலக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)

பாடல்

 

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்

ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்

நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்

பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 30 (2018)

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு  சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

விளக்க உரை

  • எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
  • மட்டு – தேன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 12 (2018)

பாடல்

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.

விளக்க உரை

  • தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
  • #இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும்  இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 31 (2018)

பாடல்

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.

விளக்க உரை

  • காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 16 (2018)

பாடல்

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?

விளக்க உரை

  • தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
  • கண்ணார் – பகைவர்
  • தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
  • முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 25 (2018)

பாடல்

ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே.

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும் பொறி ஆகிய  ஐந்தனுள்  ஒன்றாகிய கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்றுபெருமை பொருந்திய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், காளை வடிவம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எம் தந்தையாகிய சிவபெருமான், இராமேச்சுரத்தில் வீற்றிருந்து அருளுகின்றான். வீடுபேற்றை அளிக்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மா

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மா

பொருள்

  • ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ)
  • 1/20 எனும் பின்ன எண் – ஒருமா
  • குதிரை, யானை , பன்றி ஆகியவற்றின் ஆண் இனம்
  • சிம்மராசி
  • வண்டு
  • அன்னம்
  • விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்
  • மாமரம்
  • அழைக்கை
  • சீலை
  • ஆணி
  • துன்பம் பொறுக்கை
  • ஓர் அசைச்சொல்
  • திருமகள்
  • செல்வம்
  • கலைமகள்
  • மாற்று
  • கீழ்வாயிலக்கத்துள் ஒன்று
  • நிலவளவைவகை
  • வயல்
  • நிலம்
  • வெறுப்பு
  • கானல்
  • ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல்
  • பெருமை
  • வலி
  • அழகு
  • மாமைநிறம்
  • அரிசி முதலியவற்றின் மாவு
  • துகள்
  • நஞ்சுக்கொடி
  • அளவை
  • இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்ததும், விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதிகளைக் கொண்டதுமான பெரியதும், பெருமைக்கு உரியதுமான மயிலையில் திருவருள் எழுச்சியை விளைக்கும் கபாலீச்சரம் என்னும் திருக்கோயில் திருவிழாக்களைக் கண்டு, திசைதோறும் இடும் பலியாகிய உருத்திரபலி எனும் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • பங்குனி உத்தர விழாச் சிறப்பினை உணர்த்தும் பாடல்
  • மலிவிழா வீதி – விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி
  • கலிவிழா – திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் விழாக்கள்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவம் தரு பேதங்கள் எவை?
சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேடு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேடு

பொருள்

  • அழகு
  • பெருமை
  • திரட்சி
  • நன்மை
  • இளமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

காந்தள் மலர் போன்றதும்,  இதழ்கள்  நிறைந்ததும் ஆன தோடார் மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும், செம்மையான அணிகலன்களையும் அணிந்து கொண்டுள்ள அம்மையோடும் உடனிருந்து, பெருமைக்கு உரிய இரும்பூளையில் உறையும் ஈசன், காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? இதனை எனக்குச் சொல்வீராக.

விளக்க உரை

  • அர்ச்சுனனோடு போர் செய்த வேடனாக வந்தது ஒப்புநோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தற்றுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தற்றுதல்

பொருள்

  • தறுதல் / உடுத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

செருக்கினை அடைந்த அரக்கனாகிய இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்கால் பெருவிரலை ஊன்றி அழித்தவன்; முழுவதும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன்;  புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன்; அப்படிப்பட்ட பெருமான் வீற்றிருந்து எழுந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காத்தலின் நோக்கம் என்ன?
உயிர்கள் தம் வினையைப் பற்றச் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அடல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அடல்

பொருள்

  • ஒளிவு
  • மறைவு
  • களவு
  • கபடம்
  • தீய எண்ணம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

மயிலாப்பூரில்,  மாசிமகநாளில், கடலாடுதலைக்  கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருப்பவனும், வலிமை பொருந்திய விடையின் மேல் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்வு குறித்தப் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்