அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 18 (2019)


பாடல்

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  இந்த நவாக்கிரி சக்கர வழிபாட்டினை முத்தியை விரும்பிச் செய்தல் சிறந்ததாகும் என்று கூறும் பாடல்.

பதவுரை

உலகின் வரையறை செய்யப்பட்ட சில பகுதிகளுக்கு மட்டும்  தலைவராக உள்ள தேவர்களது வாழ்வு வேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; இக்காரணம் பற்றி மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்கி பிறவி சங்கிலியில் இருந்து விடுதலை பெறுங்கள்; நவாக்கிரி சக்கரத்தில் உறையும் சத்தியானவள் எல்லா உலகங்களையும் உடையவள் என்பதை அறிந்து அவளை துதியுங்கள்; முடிவாக அந்த சத்தியின் திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • ஆறுதல் – தணிதல்; நீங்குதல்.
  • வாழ்வு எனல் – வாழ்வு வேண்டும் என விரும்புதல்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *