ஊழிப் பெருங்காற்றில்
அலைந்து, அலைத்து செல்லும்
காய்ந்த இலையின்
வலிகளை அறிந்திருக்குமா
அதனை நீத்த
அப்பெருமரத்தின் வேர்கள்
உருவேறத் திருவேறும்
ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
போட்டி சந்தோஷங்களை
பட்டியலிடுவதில் நிகழ்ந்தது.
தீர்ப்பு வழங்க சரசவாணி.
முதியவர்கள் உணவகங்களில்
ரசித்து உண்ணும் உணவானது,
தனது மகளின் முதல்
மூக்குத்தி அனுபவத்தை
அனுபவிக்கும் தாய்.
இசையை அனுபவிக்கும்
வாலிபனின் மனம்.
பட்டியல் தொடரவா என்று கூறி
வாய்பினை எனக்கு தந்தார்.
இரவின் கடைப் பொழுதுகளில்
வீடு திரும்புகையில்
விழித்திருந்து கன்னத்தில் கொடுக்கப்படும்
கடையவளின் முத்தமும்
காயத நினைவுகளும் என்றேன்.
சரசவாணியின் சிரிப்பு யாரை நோக்கி?
ஏதோ ஒரு தருணத்தில்
ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வாழ்க்கை வசந்தமாய்.
உன் மடியினில் படுத்து உறங்கி
கதை பேசி கருத்து பரிமாறி
கன்னத்தில் முத்தமிட்டு
வாழ்க்கை வசந்தமாய்.
இரண்டாம் கட்டிலிருந்து
ஓங்கி ஒலித்தது ஒரு குரல்.
கண்ண மூடிகிட்டு
தாடிய தடவிகிட்டு
தூங்கிற நாய கண்டாலே
பத்திகிட்டு வருதுன்னு சொல்லுடா
உங்கப்பன்ட.
படர்ந்து ஓடும் ஆறு,
மனதை வருடும் காற்று,
இரைச்சலைத் தாண்டி
குருவிகளின் ஒலிகள்,
உயரமான இடத்தில்
நட்சத்திர ஓட்டலில்
மனைவியான உன்னுடன் உணவு.
அனைத்தும் தாண்டி ஒர் குரல்.
நாடார் கடையில போய்
நாலு ரூவாயிக்கு கடன் சொல்லி
சக்கரை வாங்கி வாடா
உங்கப்பனுக்கு காப்பி தண்ணி
ஊத்தணும்.
பல தேசம் சென்றும்
பொருள் பெருக்கியும்
பல அனுபவம் பெற்றவன்
எனும் கர்வத்தோடு
கவிஞன் ஒருவனை
கர்வத்தோடு சந்தித்தேன்.
கவிஞனுக்கான வினாக்கள்
கொட்டும் அருவியாய்.
பொருளற்ற தருணங்களில்
நீரை உண்டு பசியாறி இருக்கிறாயா,
தவிக்கும் பொழுதுகளில்
தட்டுப்பட்ட ஒற்றை நாணயம் வைத்து
புகைத்திருக்கிறாயா,
கண்ணிரை கரைக்க
நீண்ட நேரம்
குளியலரையில் கழித்திருக்கிறாயா,
சந்தித்தலை மறுதலித்து
நெடு நேரம் கழித்து வீடு
திரும்பி இருக்கிறாயா,
அந்த தருணத்திலும் விழித்திருந்து
என்ன வாங்கி வந்திருக்கிறாய்
என்ற மகளின் கேள்விக்கு
இமை வழி கண்ணிரையும்
இதழ் வழி புன்னகையும்
இதய வலிகளுடன்
பரிசளித்திருக்கிறாயா
இன்னும் தொடரவா என்றான்.
விஷ்ணு முன்னான மகாபலி சக்ரவர்த்தியாய் நான்.
ஏதோ சில கணங்கள்
உணர்தின
எனக்கான மரணத்தினை.
மல ஜலம் கழிதலும்
மாறுபட்ட சுவாசமும்
மாற்றமின்றி நிகழ்ந்தன.
காயம் பட்ட மனிதர்கள்
பழி தீர்க்க கண நேரத்தில் வரிசையாய்.
காசினியில் கொண்ட கொள்கைகள்
காட்டைத் தாண்டுமோ!
எரியுட்டப் படுகையினில்
எல்லோரும் பிறிதொருநாளில்
அறியக் கூடும்
எல்லா மரணங்களும்
நிகழ்வுகளை இடம் மாற்றி
நிச்சய குறிப்பொன்றை எழுதிக் செல்வதை.
மரணத்தின் அனுபவங்களை
மனதோடு ஒன்றி கூறுமாறு
வழி பட்ட மனிதர்களை
வழியில் பட்ட மனிதர்களை வினவினேன்.
காய்ந்த கிளை ஒன்று
மரத்தினில் இருந்து
விழுவதைப் போன்றது என்றான் ஒருவன்.
நீண்ட நதியினில்
படகினில் பயணம் என்றான் ஒருவன்.
நண்டின் கால்களை ஒடித்து
உள்ளிருப்பதை உறிஞ்சுவதைப்
போன்றது என்றான் ஒருவன்.
நான்கு தினைகளின் திரிபில்
பயணம் என்றான் ஒருவன்.
அடங்காத மனைவியின் வார்த்தைகள் கேட்டும்
அமைதியை கொண்டாடும்
கணவனின் உணர்வு என்றான் ஒருவன்.
வாழ்வினை அனுபவித்தவனுக்கு
மரணம் சூட்சமாய் கொண்டாடப் படும்
என்றார் என்றைக்குமான கடவுள்.