உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன்னிடத்தில் இருந்து உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவனாகிய நானோ அழிவில்லா துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று வெறுப்பினால் வீணே மூப்படைகின்றேன். அவ்வாறு இருந்தும் இளகாத மனம் உடையவனாகிய என்னுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.
விளக்கஉரை
பிணத்தின் – வெறுப்புக் காரணமாக உடம்பை பற்றிய சொல் ‘பிணம்
ஒளி குறையாத மணியுடன் கூடிய திருநீற்றைப் மார்பினில் பூசியவரும், அழகியதான திருவீழி மிழலையில் திருமணக் கோலத்தினை கொண்டவரும், குவளை மலர் மாலையை அணிந்த உமை அம்மைக்குத் தலைவர் ஆனவரும், கொடு கொட்டி ஆடும் ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவரும். செழுமை உடைய கயிலாயத்தில் உள்ள எம் செல்வரும், தென் திசையில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து அவ்விடம் சேர்ந்தவரும், (துன்பத்தினால்) ஒளி குறைந்து வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் அனைத்தும் தீர்த்து அவர்களை ஆட்கொள்ளுபவராகிய எமது ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.
ஐயுறவு தீர்ப்பார் – `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலின் இறுதியில் ` ஐயுறவு தீர்ப்பார்` என்றதால், நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது உரை பொருள். மேலும், அடியவர்களை மாயையில் ஆழ்த்தும் ஐம்புலன்களது உறவை அறுப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்
வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப் பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு, தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழ, பூதங்கள் எனப்படும் உயிர்வர்க்கங்கள் பாட, கூத்தாடுதலை உடைய தூயவனாகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன்நின்று துதித்த அடியார்களுடைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதூர் எனும் திருவிடைமருதூர் திருத்தலத்தை இடமாக கொண்டுள்ளார்.
எவரிடத்து இருந்தும் ஏற்றல் செய்யாத வினைகள் இல்லாதவனை, எல்லா இடங்களிலும் உள்ளவன் தன்னை, இனியவற்றை நினையாதவர்களுக்குத் துன்பமானவனை, வலிமையுடைவனை, தன்னை விரைந்து சரண் அடைந்தவர்களுக்கு அருளுவதில் வல்லவன் ஆனவனை, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான் தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன் ஆகிய திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகனை, நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்ந்து அருளியிருப்பவனாகிய அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!
விளக்க உரை
இல்லான் என்பது குறித்து ‘எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன்’ எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. புலனாகாதவன் எனினும் இல்லாதவன் ஆகுதல் இல்லை. எனவே இது விலக்கப்பட்டுள்ளது. குரு உரை வண்ணம் பொருள் உணர்க.
திருவாரூர் அமர்ந்த கடவுளானவன், ஊழிக்காலங்களைத் தன்னால் அளக்கவல்லவன்; தன்னை விரும்பும் அடியவர்கள் தலை உச்சியின்மேல் உள்ளவன்; தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினை உடையவன்; ளிர்ச்சிபொருந்திய வலிமையும், உறுதியும் உடைய கொடியை உடையவன்; தோழிகள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலால் வணங்கத்தக்கப்படுபவன்.
விளக்கஉரை
சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலின் கையில் காட்சியளிப்பவன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. முன் வரிகளில் அடியார்கள் வணங்க என்பதாலும், பின் வரும் தொடர்களில் ‘கையினாலும்’ என உம்மைத் தொகை இருப்பதாலும் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காணும் வல்லமை இல்லாதவர்கள் ஆயினர்; பொங்குவரும் கங்கை ஆற்றினை செஞ்சடையில் உடையவனும், நல் வினைப் பயன்களின் திரண்ட வடிவான தலைவனாகிய இறைவன் `இங்கு இருக்கிறேன்` என்று இலிங்க வடிவில் தோன்றினான்.
விளக்கஉரை
புண்ணிய மூர்த்தியே – உயிர்களிடத்தில் வினைகளை விலக்கி உயிர்களுக்கு அருளும் திரண்ட வடிவான தலைவன் எனும் பொருளில் எடுத்தாளப் பட்டுள்ளது. இரு வினைகள் விலக்கியவன் என்பதால் இப்பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தலின் நோக்கம் என்ன? உயிர்களிடத்தில் மலப்பரிபாகம் உண்டாக்கல்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – இருந்தவம்
பொருள்
பெரியதவம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
என்றும் எப்பொழுதும் ஈசன் என்பவர்களாக இல்லாமல், நன்கு பொறுமை உடையவர்களாக இருப்பினும், உண்ணாவிரதம் இருப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், விரும்பிச் சென்று நீரில் நீராடித் திரிந்தாலும் ஈசனை விலக்கிய மற்றவர்களுக்கு இவற்றால் பயன் இல்லை.
விளக்கஉரை
அகவழிபாடு சிறப்பினை விளக்கும் மற்றொரு பாடல்.
நோற்றல் – பொறுத்தல், தவம் செய்தல் எனும் பொருள் விளக்கம் இருப்பினும் இரண்டாவது வரியில் ‘குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்’ எனும் வரிகளால் பொறுமை உடையவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தில் செய்யப்படுகின்றன. மாயை ஆகிய சடப்பொருளிடத்தில்
வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்து மிகப் பெரிய குற்றம் இழைத்தான். அவனின் இந்த செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நல்ல மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்ட. ` நம்மிடத்தில் நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்` என்றும், இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மை செய்யவேண்டும் என்றும் அந்த நல்ல மனம் கொண்ட அரக்கர்களை விருப்பத்துடன் நோக்கி, இராமபிரான் தனது அம்புகளால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமான் ஆவார்.
விளக்கஉரை
இந்த தலத்துப் பதிகங்கள் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுவதால் இதிலும் அவ்வாறே கொள்ளப்பட்டது .
இராமன் வாயிலாக அவனுக்கு உயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்து அருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு இது சான்று.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காத்தல் என்பது என்ன? தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறச் செய்தல்
பசுவினடத்திலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் ஜோதியாக நின்றவனே! நீரை ஏந்திய மேகங்கள் அசைகின்ற உச்சியை உடைய அளவு வளர்ந்த பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணாமலையில் உள்ளவனே! வெண்மை நிற காளைவாகனனே! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன்.
முன்னம்அடி யேன்அறி யாமையினால் முனிந்துஎன்னை நலிந்து முடக்கியிடப் பின்னைஅடி யேன்உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னை அடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்தம் கடன் ஆவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
அன்னம் போன்ற நடையுடையவர்கள் பயிலும் திருவதிகை நகரில் கெடிலக் கரையில் வீரட்டானத்தில் உறைகின்ற தாயானவனே! அடியேனாகிய யான் முன்னர் அறியாமையால் இருந்தேன். அதன் பொருட்டு கோபம் கொண்டு எனக்குச் சூலை நோய் தந்து வருந்தி இருக்குமாறு செய்தபின் அடியேன் ஆகிய யான் உன்னால் ஆளப்பட்டவன் ஆனேன். அறியாமையில் இருந்து விலகிய பின் இப்பொழுதும் சூலை நோய் என்னைச் சுடுகின்றது. தலைவராகிய தேவரீர் அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பததே செய்யத் தகுத்த செயலாகும். அதனைப் புரிந்து அருளும் வகையில் சூலை நோயைத் தீர்த்தருள்க.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தேசவிளக்கு
பொருள்
உலகில் உள்ள ஞாயிறு , திங்கள் , தீ போன்று ஒளிரும் பொருள்கள்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே; வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே; பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
திருவையாறு எனும் இத்தலம் விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! நீ, பொருள் தராத வெற்று ஓசையாகவும், பொருளைத் தரும் ஒலியாகவும் உள்ளாய்; இந்த உலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய்; வாசனை தரும் மலரில் எங்கும் பரவியுள்ளாய். மலைமான் எனும் இமவானுக்கு மருமகனாய் உள்ளாய்; உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய்; எனக்குத் தலைவனாய் இருந்து உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய்; உலகில் ஒளிர்தலைச் செய்யும் ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகி உள்ளாய்.
விளக்க உரை
‘ஒசை, ஒலி’ என்பன, ‘சத்தம், நாதம்’ என்னும் பொருளில் முறையே வெற்றோசையும் பொருளோசையும் குறிக்கும். ‘சொல்லை வாக்கு’ என்றும், அகத்தெழு வளி இசையை, ‘மத்திமை வாக்கு’ எனவும், புறத்திசைக்கும் வளி இசையை, ‘வைகரி வாக்கு’ எனவும் மெய் நூல் கூறும். அகத்தெழு வளியொடு உடன்படாது நினைவில் நிற்கும் நிலையை ‘பைசந்தி வாக்கு’ எனவும், சொல்லானது இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ‘சூக்கும வாக்கு’ எனவும் கூறப்படும். இவற்றுள் சூக்கும வாக்கே ‘நாதம்’ எனப்படுவது.
‘பிறரல்லர்; நீ ஒருவனே’ எனப் பிரிந்து நின்ற பிரிநிலை பற்றி அனைத்தும் நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன
சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம் கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில் அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
எல்லாவுலகிலும் சிவன் என்னும் சொல்லோசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செம்மையான சொல் வேறு எதுவும் இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன். அத்தகைய எம்பெருமான் யாசித்து உண்பவன்; தோலையே ஆடையாக உடையவன்; அத்தோல்மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன்; கவண் கல் அளவே ஆன மிக சிறிய அளவே உண்பவன்சு; சுடுகாடே அவன் இருப்பிடம் ஆகும்; அவனுடைய உண்ணும் பாத்திரம் மண்டையோடு ஆகும்; ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் இயல்பு தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர்.
நெஞ்சே! கொள்ளியில் இருந்து உண்டாகும் வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும், ஒளிரும் பூதகணங்கள் சூழ்பவரும், உமையை ஒரு பாகத்தில் கொண்டவரும், வெண்மையான திருவெண்ணீற்றினை அணிந்தவரும், அகோர முகத்தை உடையவரும், ஐயிராவதம் என்ற யானைக்குரியவரும், விடையேறியவரும் ஆன பெருமானுக்கு உரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
பார்வதியை ஒரு பாகம் உடையவராகவும், முருகனை மகனாகக் கொண்டவராகவும், மல்லிகை மற்றும் கொன்றை மாலையைச் சூடிவராகவும், கல்வியிலே கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சி மாநகரிலே சூரியன் ஒளிற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்கினார்.
கெடிலக் கரையில் உள்ள வீரட்டானத்துறை எனும் அதிகை அம்மானே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களை அழிக்க வல்லவரே, தலையைச் சுற்றிலும் மண்டை ஓட்டினை மாலையாக கொண்டு அணிந்தவரே, இறந்துபட்டவருடைய மண்டை ஒட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே, உலகப்பற்றுக் கொண்டு இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, உலகப்பற்றுக் கொண்டு பிணி முதலியவற்றால் இறந்தவர்களை எரித்த சாம்பலை திருமேனியில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை ஊர்தியாக் கொண்டு வலம்வர விரும்புகின்றவரே, உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால் எனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி எனக்கு அருளுவீராக.
திருநெய்த்தானம் எனும் தலத்தில் உறைபவனே! நீ மேம்பட்ட கயிலாயத்தில் உறைபவன் என்றும், ஆக்கூர் எனும் தலத்தில் தான்தோன்றி ஈசன் என்றும், புள்ளிருக்குவேளூர் எனும் வைத்திஸ்வரன் கோயில், தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய். தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும், எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் வாழும் ஏழு உலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோர்களகிய நாங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
இறைவன் உயிருக்கு உடனாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன? பேதா பேதம்
நிறைந்த புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் எம்பெருமானே! இராவணனை விரலால் நெறித்த நீர் எளியேன் பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராக உள்ளீர்! விரைந்து வந்து இக்கதவினைத் திறப்பித்து அருள்வீராக.
விளக்க உரை
பத்துத் திருப்பாடல்கள் பாடியும் கதவு திறவாமையைக் கண்ட திருநாவுகரசர் ‘இரக்கமில்லையோ’ எனக்கூறிய இப்பாடலின் உரை கேட்டு திருநாவரசரின் பாமாலை இன்னிசையில் ஈடுபட்டிருந்த இறைவன் விரைந்து கதவைத் திறந்தான்
திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை ஆக்கிக் கொண்டு இன்அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசைகளை எழுப்பும் வீணையை உடையவர்களும் யாழினை உடையவர்களும் ஒரு பக்கத்திலும், வேதங்களோடு தோத்திரம் கொண்டு துதிப்பவர்கள் ஒரு பக்கத்திலும், நெருக்கி தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்திலும், வணங்குதலை உடையவர்களும், அழுகை உடையவர்களும், துவளுதலை உடையவர்களும் சூழ்ந்து ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் வணங்குபவர்கள் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக்கு எல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.