‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தண்ணம்
பொருள்
- பறை
- மழு
- குளிர்ச்சி
- காடு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ்இளஞ்செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்—ஆரூர் அமர்ந்த அம்மானே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருவாரூர் அமர்ந்த கடவுளானவன், ஊழிக்காலங்களைத் தன்னால் அளக்கவல்லவன்; தன்னை விரும்பும் அடியவர்கள் தலை உச்சியின்மேல் உள்ளவன்; தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினை உடையவன்; ளிர்ச்சிபொருந்திய வலிமையும், உறுதியும் உடைய கொடியை உடையவன்; தோழிகள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலால் வணங்கத்தக்கப்படுபவன்.
விளக்க உரை
- சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலின் கையில் காட்சியளிப்பவன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. முன் வரிகளில் அடியார்கள் வணங்க என்பதாலும், பின் வரும் தொடர்களில் ‘கையினாலும்’ என உம்மைத் தொகை இருப்பதாலும் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
- ஆழிவளைக்கையினான்: தியாகேசரை விடாத கையைக் குறித்தது; திருமாலாகி, அம்மாலுக்குரிய புவனத்தில் உலகுயிர்களைக் காப்பவன்.
- “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன்” , “ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே’, ‘ஊழி வண்ணமும் ஆவர்’. ‘ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர்’,எனும் பாடல் வரிகளால் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.