
பாடல்
கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே
மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – திருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே சாரூப பதவி பெறச் செய்பவர்.
விளக்க உரை
- கலை – மான்
- இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
- கட்டங்கம் – யோகதண்டம்
- கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
- தலை தாழ்வடம்
- தமருகம் – உடுக்கை
- அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
- ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
- நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்