பாடல்
உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
பதவுரை
காட்சிப் பொருளாகிய உருவத் திருமேனி, உருவம் இல்லாத நுட்பத்தினை குறிக்கும் அருவத் திருமேனி ஆகியவற்றையும் கண்டோம். இவை இரண்டும் கண்டதால் அரு உருவத் திருமேனி என்பது பெறப்படும். இவ்வாறாக சொல்லப்பட்ட மூன்று வடிவங்கள் ஆகிய மூன்று நிலைகளும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலை என்று காண்பாயாக.
விளக்க உரை
- இறைவன் ஒன்பது பேதங்களில் கலந்து நின்று, ஆன்மாக்கள் உய்ய, நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் உருவத் திருமேனி வடிவமாகவும், விந்து, நாதம், சத்தி, சிவம் எனும் அருவத் திருமேனி வடிவமாகவும், சதாசிவம் எனும் அருவுருவ வடிவமாகவும் இருந்து ஐந்தொழில் நடத்தி தன்னை உணர்த்துவான்.
- கருமேனி – கரியவுடல், பருவுடல், தூலஉடம்பு. (வினைத்தொகை முன்வைத்து அழியும் உடல்)