பாடல்
எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
கடுவெளிச் சித்தர்
பதவுரை
தமிழில், ‘அ’ என்றும் சிவம் என்றும் குறிக்கப்படும் எட்டும், ‘உ’ என்றும் சக்தி என்றும் குறிக்கப்படும் இரண்டும் பற்றி சிவசக்தி ரூபமாய் ஆராய்ந்து, சாத்திரங்கள் அனைத்தையும் தன்னுள்ளே ஆராய்ந்து முடிவான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கடுவெளி என்றும் வெட்டவெளி எனவும் அழைக்கப்படும் ப்ரம்மம் சார்ந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி பொங்க ஆனந்த களிப்பு கொள்.
விளக்க உரை
- எட்டு மிரண்டையும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருளாகிய ஆன்மா இயல்பை அறிந்து எனவும் கொள்ளலாம்
- ‘கட்ட றுத்தெனை … எட்டி னோடிரண்டும்அறி யேனையே’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உருவத்திருமேனிகளில் மூன்று வகை யாவை?
போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம்