அமுதமொழி – விகாரி – ஆனி – 25 (2019)


பாடல்

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
   களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
   தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
   பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே

ஒன்பதாம் திருமுறை  – திருவிசைபா – திருப்பல்லாண்டு – கருவூர்த் தேவர் 

கருத்து – அன்பர்களின் அக அனுபவங்களையும் பெரும்பற்றப் புலியூரின் பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

மேலான அன்பினால் கண்களில் பனித்துளிர்ப்பது போல் கண்ணீர் அரும்ப, கைகள் குவித்து, ‘எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்’ என்று கதறி, எல்லா எலும்புகளும் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளும் எனும்படியான ஈசனுடைய திருக்கோயில் எதுவெனில் தேன் உண்டு தெளிந்த வண்டுகள் பலப்பல பண்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பதானதும் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடையதும் ஆன பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.

விளக்க உரை

  • மொட்டித்து – குவித்து
  • களைகணே – பற்றுக் கோடானவனே
  • சூழ் மொழுப்பு – பரவிய மேலிடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 23 (2019)


பாடல்

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே

ஒன்பதாம் திருமுறை –  திருவிசைப்பா – கருவூர்த் தேவர்

கருத்துஉன் திருவடி அடைந்த பிறகும் அருள் செய்யாது இருப்பாயா என்று வினவும் பாடல்.

பதவுரை

நீண்டதும், உயரமானதும் ஆன அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரவு நேரங்களில் இருளைப்போக்குவதற்காக இருப்பதும், அணையாதும்  ஆன விளக்குகள் சாளரங்களுக்கு வெளியே வந்து ஒளியை வீசுகின்றதும் ஆன கடைத் தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து, ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி, உன் திருவடிகள் இரண்டனையும் குருவால் சொல்லப்பட்ட நெறியில் நிற்கும் முறையை அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

விளக்க உரை

  • அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் – அருள் செய்வாய், அருள் செய்யாது ஒழிவாயா(நிச்சயம் மாட்டாய் என்பது மற்றொரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • அடையுமாறு அடைதல் – நூலில் சொல்லப்பட்ட நெறி வழி நின்று அந்த  முறையில் அடைதல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது. குரு காட்டிய வழியில் அடைதல் என்பது பொருத்தமான பொருளாக இருக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்ட விளக்கம் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஐவர் கள்ளர் – ஐம்பொறிகள்
  • மெள்ள – இனிமையாக விதித்த வழியில் சென்று நீக்கினமை பற்றி; சிறிது சிறிதாக நீக்கி என்று பொருள் பகர்வாரும் உளர்
  • துரந்து – ஓட்டி.
  • நிலை விளக்கு – அணையாது உள்ள விளக்கு.
  • சாலேகப் புடை – சாளரங்களுக்கு வெளியே
  • இலங்கும் – ஒளியை வீசுகின்ற

Loading

சமூக ஊடகங்கள்