
பாடல்
பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன?
அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்
பதவுரை
கண்ணம்மா! பட்டணம் எனப்படும் இந்த உடலினை ஆளக்கூடியவர்கள் பஞ்ச இந்திரியங்களாகிய பஞ்சவர்கள் எனப்படும் அரசர்கள்; இவர்கள் உடலினை விட்டு நீங்காமல் இருக்கும் வரையில் பெருமை கொண்டு ஆற்றலும் வல்லமையும் கொண்டு பேசி இருப்பார்கள்; அவ்வாறு பெருமை பேசும் போது ஆளுமை செய்யக்கூடிய பஞ்சவர்கள் வேற்றுமை கொண்டு உடலினை விட்டு பிரியும் போது பட்டணம் என்று சொல்லக்கூடிய இந்த உடலானது போய்விடும்; படைமன்னர் எனப்படும் பஞ்சவர்களும் மாண்டு விடுவார்கள்.