கொண்டாடுதல்

வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *