உபாதி

நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

மரம் அழிந்த கதை

ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில்
ஒரு மரம் இருந்தது.
வளரத்துவங்குகையில்
அது பேசத்தொடங்கியது.
அதன் பாஷைகள்
புரியாதனவாக இருந்தன.
ஒரு குழந்தையை அழைத்து
தன் மேல் கல் எறியச் சொன்னது.
புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது.
‘அங்க ஒரு மரம் இருக்குடா,
கல் எறிந்தால் பேசும்டா’ என்றது தனது நண்பர்களிடம்.
குழந்தைகளின் வருகையினால்
தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில்.
கால மாற்றத்தில்
பயணத்திற்கு இடையூராக இருப்பதாக
பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான்.
விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன.
பல காலம் கடந்த பிறகு
சில குழந்தைகள் பேசிக்கொண்டன.
‘எங்க முப்பாட்டன் காலத்துல
அங்க ஒரு மரம் இருந்தது.
எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா ‘

Loading

சமூக ஊடகங்கள்

துறவு

உணவு பரிமாற்றத்தில்
தனக்கான பங்கு குறைகையில்,
ஒற்றை வார்த்தைகள்
உயிர் பெறுகின்றன
எல்லா அம்மாக்களிடமும்
“பசிக்கலடா”.

Loading

சமூக ஊடகங்கள்

சொரூப ஞானம்

விருந்து ஒன்றில்
உன்னை விலகி நின்று
சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.
நீண்ட நெடும் கூந்தல்.
வில்லினை ஒத்த புருவம்.
தெறிக்கும் கண்ணின் பார்வைகள்.
மோனப் புன்னகைக்கு
முத்தாய்ப்பாய் மூக்குத்தி
பரவசம் ஏற்படுத்தும் பச்சை ஆடை.
என்னடா இப்படி பார்க்கிறாய்
என்றான் நண்பன்.
வாவி எல்லாம் தீர்த்தம்,
பூசுவது வெண்ணீரு எனும்
அவனுக்கான காலமும் வரும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம பிண்டம்

முக்கியமானவர்கள்
முக்கிய மற்றவைகளுடன்
முக்கியமற்றவர்கள்
முக்தியினைத் தேடி.
தேவைகளின் பொருட்டு
தேடுபவர்களும் தேடப்படுபவைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஞானம் பிறந்த கதை

அனுதினமும் செல்லும்
ஆலயமும்
அருகினில் காவலாளியின் குரலும்
காசு அற்ற பயலுகளுக்கு          
கடவுள் என்ன,
வெளியில இருந்து
வேடிக்கை பார்க்க                  
வேண்டியது தானே
என்றான்.
தேடிய ஞானம் தெளிவாக.

Loading

சமூக ஊடகங்கள்

நித்யவாசினி

உடல் நீங்கிய உயிர்.
வேடிக்கைகள் எளிதாக்கி
காட்சிகள் என்னுள்ளே.
பகுப்பாய்வுகள் பலவிதமாய்.
பாத அழுக்குகள்
பலதூரம் நடந்திருபதை காட்டுகின்றன
என்றான் ஒரு மாணவன்.
கைகள் அழுக்கானவைகள்.
அதனால் அவன் உழைப்பாளி
என்றான் மற்றொருவன்.
குடித்திருப்பதை குடல் காட்டுகிறது
என்றான் மற்றொருவன்.
இதயத்திலிருந்து வரும் வேர்கள்
கவிஞனாய் காட்டுகின்றன
என்றான் மற்றொருவன்.
எனக்கு உறவானவன் அவன் என்கிறாய் நீ.
உதிர்த்துவிட்ட சொல்லின் முடிவில்
உயிர் பெறுகிறது
உறைந்துவிட்ட ஒரு இதயம்.

Loading

சமூக ஊடகங்கள்

அவித்யா

தூரத்தில் நிலவொளி.
வீசிக் செல்லும் பனிக்காற்று.
குளிர் தவிர்த்தலுக்கான உடைகள்
மெல்லிய விரும்பிய இசை.
காவியம் முதல் காப்பியம் வரை
பேசும் உன் திறமைகள்.
விரும்பிய உணவினை
உண்ணத் தொடங்கி
பேச முற்படுகையில்
ஒலிக்கிறது ஒரு குரல்.
நாஷ்டா துன்ன கூட வராம
தூங்குற உங்கப்பனை
எழுந்திருக்க சொல்லுடா.

Loading

சமூக ஊடகங்கள்

ஆர்ப்பரிக்கும் அலைகள்.

அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
விஷம் தடவி
வாளினால் தாக்கும்
பெரும் போரளியியை விட
வார்த்தைகளில் லாவகம் உனக்கு.
இரவினில் பாதி உறக்கத்திலிக்கும்
புல்லினமாய் நான்.
போரின் முடிவினில்,
மரணத்திற்குப் பின்வரும்
மற்றொரு வாழ்வினைப் பற்றி
பேசுகிறாய்.
நான் அற்ற இடத்தில்
எனக்கான எச்சங்கள்
இருந்தால் என்ன, இறந்தாலென்ன என்றேன்.
அப்பொழுதும்
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

நித்யம்

இருப்பது
என்றைக்குமாய் இருக்கின்றது.
இருக்க முயற்சிப்பது
இருக்க துவங்கியது.
இல்லாதவைகள்
என்றைக்கும் இல்லாமல்.

Loading

சமூக ஊடகங்கள்

திசைகளும் நோக்கமும்

கிளைத்தலும் பரவுதலும்
பல திசைக்கள் நோக்கி
உதிர்தல் மட்டும்
ஒரு திசை நோக்கி.

Loading

சமூக ஊடகங்கள்

நித்திய நிகழ்வுகள்

தானியங்கியில் பணம்
எடுத்து வெளியே வரும் போது
காவலாளி கேட்கும் டீக்கான காசில்
கனத்துப் போகிறது இதயம்.

Loading

சமூக ஊடகங்கள்

பொம்மலாட்டம்

ஆடுவதற்கு ஆட்கள் இன்றி
தனித்திருக்கின்றன பொம்மைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்க்கைக் கனவுகள்

எவர் அறியக்கூடும்,
கண்ணுக்கு தெரியும்
உடைந்த பொம்மைகளின்
பின்னால் இருக்கும்
பெற்றவர்களின்
நிறைவேறாமல்
உடைந்த கனவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணனின் பசி

கர்ணனாய் வேஷமிட்டாலும்
காயந்து கிடக்கிறது
பசி அறுக்க முடியா
பாழும் வயிறு.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஒலிகள்

என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா
விலை உயர்ந்த காரினில்
செல்பவர்களின் சந்தோஷ ஒலி தாண்டி
ஓலிக்கும்
ஏழைகளின் கண்ணீரின்
அழுகை ஒலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

சந்தோஷ ஆலாபனைகள்

என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா
கோரஸாக பாடுபவர்களின்
சந்தோஷ குரல் தாண்டி
கண்ணுக்குள் அடைபட்டுக்கிடக்கும்
கண்ணீரின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

உடையும் கவிதைகள்

நிச்சயிக்கப்பட்ட பாதையில்
பயணம் என்றாலும்
நித்தமும் உடைகின்றன
கனவுகளும் கவிதைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

விடியல் தேடி

வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஓவியனின் கனவுகள்

வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.

Loading

சமூக ஊடகங்கள்