அமுதமொழி – விகாரி – ஆவணி – 20 (2019)


பாடல்

ஒட்டாது சுழற்காற்றுத் தீயுங்கூடி
ஒளிகோடி மதிகோடி ரவிதான்கோடி
கொட்டேது யிடிமுழக்க மேகநாதங்
கூறுவலம் புரிநாத மணியினோசை
விட்டேது காதடைக்குங் கண்ணும்புக்கும்
மேலேற்றத் தெரியாது விழியுங்காணோம்
மட்டேது நடனவொலி சிலம்பினோசை
மாட்டியே வாங்குமப்போ மயக்கந்தானே

அகத்தியர் தீட்சாவிதி 200

கருத்து –  தச தீட்சையில் பெறப்படும் தச நாதங்களின் தன்மைகளில் சிலவற்றை கூறியது.

பதவுரை

எதிலும் ஒட்டாமல் செல்லும் சுழற்காற்றும் தீயும் கூடியது போல் கோடி சூரியனும், கோடி சந்திரனும் கூடியது போல் கோடி இடி முழக்கங்கள் சேர்ந்து ஒலிப்பது போன்று வலம்புரி சங்கில் இருந்து மணியின் ஓசை போன்று காதில் ஒலிக்கும்; இருகண்களுக்கும் இடையில் புருவ மத்தியில் வாசி வழி மேல் ஏற்றத் தெரியாமல் விழிகளை காணாமல் இருப்பது போன்று விழி மூடிய நிலையில் நடனத்தில் ஒலிக்கக்கூடியதும் மயக்கம் தருவதும் ஆன  சிலம்பின் ஓசை கேட்கும்.

விளக்க உரை

  • வாசி மேலேறும் போது, சாதகன் , சாதனத்தில் அடங்கி இருக்கும் போது சுழிமுனை நாடியில் மேலேற மேலேற பத்து வித நாதங்கள் சாதகனுக்கு கேட்கும்.

தச நாதம் – 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே

எனும் திருமந்திரப்பாடலுடன் ஒப்பு நோக்கி உணர்க,

இது சித்தர் பாடல் என்பதாலும், தச தீட்சை என்பது ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே பெறக்கூடிய அனுபவம் என்பதால் பொருள் உணர்ந்து எழுத முயற்சித்து இருக்கிறேன். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 10 (2018)

 

பாடல்

மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால்
மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றேன் முதலா
தவத்தாலே யொரு சட்டை யுரியும் பாரு
தன்மையுடன் யிரண்டாண்டில் ஒன்று போகும்
அவையடக்க மூன்றி லொன்று கழன்று போனால்
அப்பனே மூன்று சட்டை கழன்று போனால்
இவனுக்கு வயது சொல்ல முடியா தென்று
என் குருவும் எந்தனுக்கு உரைத்தார் தானே

அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

பதவுரை

எதுபற்றியும் உரைக்காமலும் மௌனமாக இருந்து, முன்னர் குறிப்பிட்ட முறைகளில் தச தீட்சை கொண்டு, உணவு கட்டுப்பாடும் கொண்டு வந்தால் நிகழுபவற்றை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். செய்யப்படும் அவ்வாறான தவத்தாலே ஒரு சட்டை உரிந்து விடும். அத்தன்மை பற்றி இரண்டாவது ஆண்டில் இன்னொரு சட்டை போய்விடும். மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டையும் கழன்று போகும் போது மூன்றாவது சட்டையும் கழன்று போகும். அவ்வாறு மூன்று சட்சையும் கழன்று விட்டால் இவன் வயது சொல்லமுடியாதவாறு இருப்பான் என்று என் குருநாதர் எனக்கு உரைத்தார்.

விளக்க உரை

  • கற்பம் – முன் பாடல்களில் தச தீட்சை முறை, உணவு முறைகள், விலக்கவேண்டியவை, அக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அதில் இருந்து விலகும் வழிமுறைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இப்பாடல்களை விளக்கவே பல்வேறு நியமங்களை அகத்தியர் விதித்துள்ளார். இதன் விபரங்களை தெரியாதவர்களுக்கு உரைத்தால், அவர் தலை வெடித்து சிதறும் என்றும், பல பிறவிகளில் வினைகள் தொடரும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே ஆன்றோர்கள் தகுந்த குரு கொண்டு பாடல்கள், விளக்கங்கள் பெறுக.

Loading

சமூக ஊடகங்கள்