ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – அவத்தை
பொருள்
- நிலை பொருள்
- வேதனை
வாக்கிய பயன்பாடு
தூக்கம் வரலேன்னாலே ரொம்ப அவஸ்த்த தான்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.
திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – சதாசிவ லிங்கம் – திருமூலர்
கருத்து உரை
சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கு தவிர ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டும். சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு என்று சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன*. இறைவனுக்குத் திருமேனிகள் அத்துவாக்கள் முன்வைத்து ஆறு` என்றும், அட்ட மூர்த்தங்கள் முன்வைத்து `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.
விளக்க உரை
- * – திருவாடுதுறை போன்ற ஆதின அனுட்டானங்களில் 12 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம்; மற்ற மடங்களில் 16 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம் – ஆதீன முறைப்படி.
- காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ இல்லாமவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு ஆகிய உயிரின் நிலைகள்
- காரண அவத்தை – 1. கேவல அவத்தை ,2. சகல அவத்தை , 3. சுத்த அவத்தை
- கேவல அவத்தை: ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை
- சகல அவத்தை: மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது
- சுத்த அவத்தை: பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை
- காரிய அவத்தை – உயிர் செயல்படும் நிலையைக் கூறுவது. மேற்கூறிய இம்மூன்று நிலைகளில் உயிரானது கூடி நிற்பது காரண அவத்தை. வகைகள் – 5
- நனவு – இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
- கனவு – இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
- உறக்கம் – இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
- பேருறக்கம் – இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
- உயிர்ப்படக்கம் – இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
- கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை
- சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை
- சுத்த நிலையில் செயல்படும் பொழுது மலோலவத்தை
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
கைலாயத்துக்குள் வளர்ந்த மரபு எது?
அகச்சந்தானம்