‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – திவா
பொருள்
- பகல்
- நாள்
- நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து உரை
‘நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலத்திலும் தானம் கொடுக்கும் கைகளை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே’ என்று அவ்வாறு தகுதி இல்லாத பலரிடமும் பேசி என்னை உழல வைக்கும் வறுமையாகிய இருளை பிளக்கக்கூடிய ஞான சூரியனே, ‘கர்ணபூரம்’ என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும் வள்ளி நாயகியை பெருமிதத்துடன் தழுவும் மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய சிவபெருமானின் காதில் இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, எமன் என் உயிரை கொள்ளை கொள்ளாதபடி காப்பாற்றுவதற்காக வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்தும் என்னுடைய இருதயத்தில் நீ வீற்றிருந்தும் அருள வேண்டும்.
விளக்க உரை
- ‘பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே’ என பல இடங்களில் விளக்கப்பட்டாலும் பொருள் பொருந்தாமையால் அவ்விளக்கம் இங்கு பயன்படுத்தப்படவில்லை.