ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – இரத்தல்
பொருள்
- பிச்சைகேட்டல்
- வேண்டுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
திரிபுரங்கள் எரியுமாறு செய்தவனும், வளைந்த வில்லை உடையவனும், மரவுரியையும் புலித்தோலையும் இடையில் அணிந்தவனும், வேண்டுகோளுக்கு இணங்க பாம்பினை அணிந்தவனும், யாசித்து உண்ண விரும்புபவனும், இரவில் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் `திருவலம்புரம்` என்னும் தலமே.
விளக்க உரை
- ‘அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்’ என்று பாடலிலும் ‘பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும்’ பல இணையபதிப்புகளில் காணப்படுகிறது. ‘அரவுரி யிரந்தவன்’ என்றே மூலத்தில் காணப்படுவதால் விளக்கம் மூலத்தின் பொருட்டே தரப்பட்டுள்ளது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சைவ சித்தாந்தத்தின் மூன்று உட்பொருள்கள்
பதி, பசு, பாசம்