ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வேதா
பொருள்
- பிரமன்
- கடவுள்
- சூரியன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ்
சாதா ரணமாஞ் சதாசிவந் தானே.
திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
சதாசிவம் தானே ஆதாரமாக நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.
விளக்க உரை
- சிவபேதம் ஒன்பது. இவை நவந்தரு பேதம் எனப்படும்.
- விந்து – பரவிந்து, நாதம் – பரநாதம் என தனித்தனியே இரண்டாகும். சிவாமங்களின் வேறுபாட்டுக்கு ஏற்ப சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை சக்தி, சிவம் என்றும், விந்து நாதங்களை சக்தி, சிவம் என்றும் கூறுவர்.
- சதாசிவத்துக்கு மேல் உள்ள நான்கும் அருவம், கீழ் உள்ள நான்கும் உருவம். சதாசிவம் மட்டும் அருவம், உருவம் மற்றும் அருவுருவம். எனவே சதாசிவ மூர்த்தமே அனைத்து லிங்கமும் ஆகும். ஆகவே சதாசிவ மூர்த்தத்தை வழிபட சிவபேதம் அனைத்தையும் வழிபட்டது ஆகும்.
- சாதாரணமாம் – பொதுவாக.
- மீதான ஐம்முகன் – மகேசனுக்கு மேற்பட்ட சதாசிவன்