ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பாந்தள்
வார்த்தை : பாந்தள்
பொருள்
- பாம்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
9ம் திருமுறை – திருவிசைபா – கருவூர்த் தேவர் – திருச்சாட்டியக்குடி
கருத்து உரை
சாட்டியக்குடி, அடியாருடைய அன்பின் மிக்க எழுச்சியை உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிலில் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.
விளக்க உரை
பரிகலம் – உண்கலம்.
கபாலம் – பிரமனது தலைஓடு.
பட்டவர்த்தனம் – அரச விருது; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு.