‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – கராம்
பொருள்
- ஒருவகை முதலை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட – பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்
கருத்து உரை
பாலை நிலம் நெய்தல் நிலமாகப் ஆகும்படி பாடிய திருஞானசம்பந்தர் தன்மையையும், பாம்பு விடந்தீரும்படிக்குப் பாடிய திருநாவுக்கரசர் தன்மையையும், முன்பு முதலை விழுங்கின சிறுபிள்ளையுடைய மரணத்தைப் பின்பு காலனையே வருவித்து தீர்த்த சுந்தரர் தன்மையையும் அறிந்து, அவர்கள் மானிட உருவத்தை உடையவர்களாக இருந்தாலும், அவர்களின் செயல்கள் யாவும் இறைவனின் திருவருள் பெற்றதால் இறை செயலால் நிகழ்ந்தவை ஆகும் என்பதைக் காண்.
விளக்க உரை
- இப்பாடலின் மூலம் மூவர் முதலிகள் பாடல்கள் பசுகரணப் பாடல்கள் அல்ல, அவை பதிகரண நிலையில் இருந்து பாடப்பட்டவை என்பதை உணர முடியும். எனவே அப்பாடல்கள் வேதம் என்பது பெறப்படும்.
- திருநனிபள்ளி – பாலை நிலம் நெய்தல் நிலமானது (திருஞானசம்பந்தர் பதிகம்), திங்களூர் – அப்பூதியடிகளின் மகன் அரவ நஞ்சு நீங்கியழிந்து பிழைத்தது (திருநாவுக்கரசர் பதிகம்), திருப்புக்கொளியூர் (அவினாசி) – முதலைவாய்ப்பட்ட சிறுவன் பல்லாண்டுகள் தாண்டி மீண்டது (சுந்தரர் பதிகம்) . அருளாலர்களின் செயல்கள் பல இருக்க இந்த வரலாற்றை எடுத்துக் கொள்ளக் காரணம் இயற்கைக்கு மாறானவைகள் இறை அருளால் நிகழ்த்தப்படும் என்பதை வெளிப்படுத்தவே.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்