கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.
பதவுரை
திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் !!!! மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும் ஆதாலல் அவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே
சிவஞானசித்தியார் – அருணந்திசிவம்
கருத்து – எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வ வடிவில் வந்து அருளுபவன் சிவனே என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
மனத்தின் கண் நிறுத்தி எந்தத் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும் அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க அந்த தெய்வங்களால் இயலாது என்பதால் மாதொரு பாகனாகிய சிவனே வந்து அந்த தெய்வமாகி அருள்செய்வான். பிறதெய்வங்கள் யாவும் சிவனுக்கு உட்பட்டு தொழில் செய்வதால் அவைகள் வினைகள் கொண்டு வேதனைப்படும்; இன்ப துன்பம் அனுபவிக்கும்; இறக்கும்; பிறக்கும்; ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்க வல்லவன் அவனே ஆவான்.
கருத்து – சிவபோகம் இன்னதன்மை உடையது என உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
குரு உணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை எவ்வாறு எனில் இது இரண்டானது எனவும், ஒன்றுமல்ல எனவும், பிரிந்து இருப்பதால் இரண்டும் அல்ல எனவும், எக்காலத்திலும் உள்ளதும் அல்ல எனவும், ஆன்மா சிவப் பற்றினை நுகரும் நுகர்ச்சி உண்மையால் இல்லதும் அன்று எனவும், பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டதால் நன்றும் அன்று தீதும் அன்று எனவும், தன்மை முன்னிலே படர்க்கை எனச் சுட்டி உணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற் பட்டு இருப்பதால் நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று எனவும், இதுவே ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையும் அல்ல எனவும், இது சிவனும் அல்ல எனவும், இது சிவஞானமும் அல்ல எனவும், உலகின் தோற்றத்திற்கு முதன்மையாக இருப்பதால் ஆதியுமல்ல எனவும், எல்லாவற்றுக்கும் முடிவாக இருப்பதால் அந்தமுமல்ல எனவும் எந்த வகையினிலும் உரைக்கப்பட முடியாது. சிவபோகம் இன்னதன்மை உடையது என உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது என்பதை விளக்கும்.
விளக்கஉரை
நன்றன்று தீதன்று – வினைகள் அறுபட்ட நிலை
தலையன் றடியன்று – தோற்ற ஒடுக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை
கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும், பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.
விளக்கஉரை
எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
சுடர் – ஒளி – ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது
கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து திருவோணகாந்தன்தளி என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும் ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?
விளக்கஉரை
உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – உயிர் நிலையாமை – திருமூலர்
கருத்து – ஈசனை அறியாமையால் உணர்வினை தரும் உயிர் நிலையாமையையும் அறியார்கள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
உடல் வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுளானவரும், வேதத்தின் முடிவாகிய வேதாந்த வடிவமாக இருந்து கூத்து நிகழ்த்துபவனாகவும் இருப்பவனை, வெந்து ஒழிவது இந்த உடல் என்று அறியாமலும், வெந்து ஒழிவதாகிய நம் உடம்பினுள்ளே உறைந்து விளையாடும் நந்தியாகவும் இருப்பதை உபாயத்தால் அறியாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே ஆவர்.
விளக்கஉரை
வேம் கட நாதன் – வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள்.
வேம் கடத்துள்ளே – வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்
வேம் கடம் என்று – வெந்தொழியும் உடம்பு
விரகு – உபாயம்
தாங்க வல்லதாகிய ஆருயிர் – உயிரை அதற்கு உயிராய் நின்று எப்பொழுதும் காக்கும் இறைவன்; சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது
கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.
பதவுரை
படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.
விளக்க உரை
படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
கருத்து – நலம் புரியும் உலகில் உண்மையை அறியாது ஏன் பிறந்தேன் என்று எண்ணுதலைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
உண்மையில் தவம் செய்யாத யான், தவம் செய்யும் அறிஞர் போல நடித்துக் கொண்டிருக்கின்றேன்; உணர்வில்லாத சடப் பொருள் போல இதுநாள் வரையில் இருந்து ஒழிந்தேன்; பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்து நல்ல பாத்திரத்தில் ஊற்றுவதற்கு உரிய பாலை நிலத்தில் ஊற்றும் கடையவனாக ஆயினேன்; பயன்படாததும், வஞ்சம் உரையதும், கற்பாறை போன்றதுமான மனமாகிய சுமந்து திரிகின்றேன்; இவ்வாறு செய்தல் அவமானத்தைத் தரும் என்றுகூட யான் அறியத் தகுவதறிதல் இல்லேன்; ஞானத்தினை தரும் அன்பு செலுத்துதலையும் அறியேன்; மெய்யான அன்பு கொண்டு, திருநடம் புரியும் இறைவனாகிய உன்னுடைய திருவடித் தொண்டர்களுக்கு அணுவளவும் உதவாதவன்; இத்தகைய யான் நாளும் புதுமையான இந்த உலகில் பிறந்த காரணம் அறிகிலேன்; பிறப்பித்த உன்னுடைய திருவுள்ளக் குறிப்பு யாதோ என்று தெரியேன்.
விளக்கஉரை
தவம் – உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், தீங்கு செய்வன செய்யாதன என்ற வேற்றுமையின்றி ஏனைய உயிர்கட்குத் தீமை செய்யாமை
தருக்குதல் – பெருமிதம் கொள்ளுதல்
சடம் – அறிவில்லாத பொருள்
பவம் – பிறப்பு
பவம் புரிவேன் – பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்வேன் என்பது பற்றியது
மனத்தைப் பாறை என்பதால் அதனைத் தாங்கும் தம்மை, “சுமந்து உழல்வேன்” என்று கூறுயது.
மனப்பாறை – வஞ்ச நினைவால் உறைவு கொண்டு இரக்கமின்றி இருப்பது பற்றியது
கருத்து – தன்னைப் போலவே உள்ளம் உருகி அன்பு செய்தால் சிவபெருமான் வெளிப்படுவான் என்பதைக் குறிப்பிடும் பாடல்.
பதவுரை
உலகில் இருப்போர்களே, நீங்களும் என்னைப் போலவே போற்றப்படுவதாகிய அன்பினைப் பெருகச் செய்து இறைவனை துதியுங்கள்; பழைய வினைகள் கெடுமாறு அன்பு கொண்டு முதல்வனாகிய சிவபெருமானை நாடுங்கள்; அவ்வாறு ஊழினை முன்வைத்து வருவதாகிய வினைகள் கெடுமாறு அன்பு செய்தால் வள்ளல் என்று போற்றப்படுபவனும், நந்தி என்று பெயர் பெற்றவனுமான சிவபெருமான் குருவாகி உங்கள் உள்ளத்தில் அன்பு பெருகுமாறு தானே வெளிப்பட்டு தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்களுக்கும் கிடைக்குமாறு செய்வான்.
விளக்கஉரை
அன்பு – சகல உயிர்களிலும் ஈசன் உறைகின்றான் என்பதை உணர்ந்து உலகத்திடமும், உலக உயிர்களிடத்திலும் அன்பு செய்தல்.
கருத்து – தற்போதங்கெட இறைவன்பால் அன்பு செய்வதற்கு உரிய நெறிகள் மூன்று என்பதும், இந்நெறிகளில் நிற்பவர்களுக்கு இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.
பதவுரை
சிவநெறி வழிகளாகிய நல்லனவற்றை அருளும் சிவ தன்மையான சரியையை உடையவன், கிரியையையுடையவன், நல்லனவற்றை அருளும் சிவ யோக தன்மை உடையவன், நல்ல சிவஞானத்தை உடையவன் ஆகிய இவர்களில் எவராக இருப்பினும் ‘நான்’ எனும் அகங்காரம் கெடும் தன்மை கெட்டு அன்பு செய்வார்கள் எனில் ஆன்ம போதம் உடைய அவர்கள் இடத்தில் எவராலும் காணுதலுக்கு அரிதான சிவன் அப்பொழுதே வந்து தோன்றுவான் என்று அறிவாயாக.
விளக்கஉரை
சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் மூவகை நெறிகளை மேற்கொண்டு அதன்படி நிற்பதால் வரும் வரும்பயன் நான் என்னும் தற்போதம் அழிதலே என்பது பெறப்படும்.
கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
உறவிலேன், உறவு யார் – தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
ஒரு பிழை – பிறப்பெடுத்தது
ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது
கருத்து – இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கும் ஆற்றலுடையவன் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
‘தோழியே! சுடுகாட்டை வழிபாட்டுக்கு உரிய இடமாகிய கோயிலாகவும், புலித்தோலை நல்ல ஆடையாக கொண்டவனாகவும், அவனுக்குத் தாய் தந்தை என்று யாரும் இல்லாதவனாக தனியனாகவும் இருக்கிறான், இந்தத் தன்மை உடையவனோ உங்கள் கடவுள்? இது பெருமை ஆகுமா?’ என்ற தோழியின் கேள்விக்கு ‘எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், தனித்தே அவன் இருந்தாலும் அவன் சினம் கொண்டால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும்’ என்று ஊமையாக இருந்து மாணிக்கவாசகரால் பேசும் திறமைப் பெற்றப் பெண் விடை சொன்னாள்.
விளக்கஉரை
சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று; இரண்டு கட்சியாய்ப் பிரிந்து விளையாடுவது. இந்த விளையாட்டில் ஒருவரின் பாடலுக்கு மற்றொருவர் அவர்கள் அக்கேள்விக்கு விடை சொல்வதுமாய் அமையும்
கோயில் – அரண்மனை
நல்லாடை – உயர்ந்த உடை
தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன் – எவரும் இல்லாத துணையில்லாத தனிமையன் எனும் இகழ்ச்சி
காயில் – வெகுண்டால்
அவன் சினந்து எழுந்தால் அதற்கு முன் நிற்பது ஒன்றுமில்லை என்பதால், அவனுக்குத் துணை வேண்டுவது எதற்கு என்பது விடை
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே
பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்
கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.
பதவுரை
கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி, மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.
விளக்கஉரை
இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
மசித்தல் – மசிய அரைத்தல்.
விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
`வெடு, வெடு` – சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.
பதவுரை
நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.
விளக்கஉரை
தொங்கல் – (மாலை) கொன்றை
மதி – பிறை
மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
விழுப்பம் – மேன்மை.
விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது
தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – பிறப்பு வீடு என்னும் இருவகைப் பயன்களையும் முறையே தருவனவாகிய வினையையும், தவத்தையும் செய்து அப்பயன்களைப் பெறுவார் அவரவரே என்பதனைக் கூறும் பாடல்.
பதவுரை
ஒவ்வொருவருக்கும் அவர் அவர்களே உறவினர்கள்; தமக்கான வாழ்வின் நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவர் அவர்களே; ஆதலால் அடியவர்களே! நீங்கள் அனைவரும் ‘ நாம் யார்? எம்முடையது என்று கொண்டு எம்மோடு தொடர்பு உடையது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்?’ என்று உணர வேண்டும்; இத்தகைய குற்றங்கள் நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியார்களோடு சேர்ந்து அந்த இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய்யான இந்த வாழ்வை நீத்துப் பாம்பு அணிந்தவனும், எமை ஆள்பவனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.
விளக்கஉரை
தாமே – பொதுமையில் மக்களைச் சுட்டிக் காட்டியது
வினைக்கு உட்பட்ட உயிர்கள் தத்தம் வினைகளுக்கு உட்பட்டு செயல்களை நிகழ்த்துதலை கைப்பாவையை ஆட்டுவித்தலை செய்தலை போல இறைவன் ஒருவனே செய்கிறான் என்பதால் உயிர்களுக்கு தம்மைத் தவிர சுற்றம் என்று ஒருவர் இல்லை
என்ன மாயம் – எத்துணை மயக்கங்கள். உயிர், தன்னையே தலைமைப் பொருளாக நினைத்தல்
பண்டைத் தொண்டரொடும் போமாறு – பண்டைத் தொண்டர்கள் முன்பே சென்றதால், அவர் சென்ற வழியே போவோம்`
கருத்து – சிவனின் பெருமைகளை உரைத்து அவன் மாற்பேறு திருத்தலத்தில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.
பதவுரை
குருந்த மரத்தடியில் இருந்து குருவாக அருளுபவனும், குருகவன் எனும் வைர வகைகளில் ஒன்றாக இருப்பதைப் போன்றவனும், கூர்மை உடையவனாக இருப்பவனும், பண்புகளில் மேன்மை உடையதான பெண், ஆண் எனும் வடிவங்களாக விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமை அம்மையால் விரும்பப்படுபவனும், துன்பம் கொள்ளூம் உயிர்களுக்கு மருந்தாக இருப்பவனும் ஆன சிவபெருமானது தலம் வளமை பொருந்திய மாற்பேறு ஆகும்.
விளக்கஉரை
குருந்தவன் – குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவன் எனும் பொருளில் ஏறக்குறைய அனைத்து இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் உடன் இருப்பவன் எனும் பொருள்பற்றி விளக்கினாலும் குருவாக இருந்து அருளுபவன் என்பது பொருந்துவதால் இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே! ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே! கூர்மையான மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி நிற்கின்றேன்.
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சற்குரு அருளால் முடிவாகிய வீடுபேறு மட்டுமின்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் கிட்டும் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
சற்குருவானவர் தன்னுடைய அடியார்களின் வினை நீங்குமாறு செய்யவும், ஒன்பது கோள்களினால் ஏற்படும் தீமைகள் நீங்கவும், யம தூதர்களது கூட்டம் விலகி ஓடவும், பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்து அருளினான்.