மிகுந்த பசியோடு அறைக்குள் நான். பசிக்கிறதா என்கிறாய். ஆம் என தலை அசைக்கிறேன். கைகளில் இருக்கும் உணவினை கிள்ளித் தந்துப் புன்னைக்கிறாய். உலகத்தில் உள்ள உணவை எல்லாம் உண்டு அறியப்படாத சொர்க்கத்தின் அருகினில் நான்.
நீண்ட இரவுப் பொழுதுகளில் மகளுடன் கூடிய நெடும் பயணத்தில் தலையை திருப்பி நிலாவினை காண்பித்த பொழுதுகளில் உணர ஆரம்பித்தேன் நான் தொலைத்துவிட்ட குழந்தைப் பருவங்களை.
நீண்ட நெடும் பயணத்தில் மகளின் கதை துவங்கியது. தலையினை மேலும் கீழும் ஆட்டி எச்சில் விழுங்கி தொடங்கியது கதை. ஒரு ஊர்ல ஒரு தேவதையாம். துவக்கத்திலே உணர்ந்தேன் அந்த தேவதையின் அருகாமையை.
நாத்திகம் பேசி இருமையை மறுத்து வந்த காலங்களில் எங்கிருந்தோ ஓடி வந்து கழுத்தினைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு சொர்க்கம் என்றால் என்ன அப்பா என்ற எனது மகளின் கேள்விக்கு பதில் அறிந்து புன்னகைத்தேன்.
மீண்டும் ஒரு முறை எனக்கும் கடவுளுக்குமான எண்ண பரிமாற்றம் உன் வலியை உள் வலியை உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார். வலி உண்டாக்கி தருணத்தை விவரிக்க சொன்னார். தெருவில் நடந்து செல்பவனை அப்பா என்று எனது மகள் முதல் முறையாய் அழைத்ததை செவிலித் தாய் சொன்ன போது என்றேன். பதில் அளித்த தருணதில் உண்ர்ந்தேன் கடவுளை.
கோபம் கொண்ட தருணங்களில் கண்களை உருட்டி கைகளை காட்டி மிகப் பெரிய மிருகமொன்று உன்னைக் கவ்விச்செல்லும் எனும் தருணங்களில் உங்களை விடவா அப்பா எனும் மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது
என்ன வாங்கி வந்திருக்கிறாய் மகள் கேட்கையில் மறுதலித்து கைகளை ஆட்டுகிறேன் யேய் பொய் சொல்ற என்று கைகளை ஆட்டி எதிர்ப்படும் வார்தையில் தென்படுகின்றன என்றைக்குமான கடவுளின் பரிச்சயம்