சித்த(ர்)த் துளிப்பு – 16-Feb-2021


பாடல்

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

அருளிய சித்தர் : ஔவையார்

பதவுரை

சிவாயநம என்னும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து இருப்போர்க்கு துன்பம் தரத்தக்கதான அபாயம் எந்த நாளும் இல்லை. இதை அன்றி துன்பத்தை நீக்குவதற்கு வேறு வழி இல்லை; இது நமது பெறப்பட்ட அறிவின் கண்ட சிந்தனையாக இருக்கவேண்டும்; இவை அல்லாதது மற்றவை எல்லாம் விதியின் வழியே பெறப்பட்ட சிந்தனையே ஆகும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 11-Feb-2021


பாடல்

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க் கொஞ்சப்
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

உரைத்து குருவருளால் அருளப்படும் ஐந்தெழுத்தாகவும், எட்டு எழுத்தாகவும், ஐம்பத்தி ஒர் எழுத்தாகவும், பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும்எழுத்தாகிய பிஞ்செழுத்தாகவும், அழைக்கப்படும் பொருளாகவும், மாயையாகி மாயை வடிவமாகவும், பழமை, பெருமை, உயர்வு ஆகியவனாகவும், சொல்லப்படும் சொற்களுக்கு பொருள் தருபவனாகவும், அனைத்தையும் அருளுபவனாகவும், தனியனாகவும் இருந்து அருளக்கூடிய ஆனந்த நிலையில் இருப்பவன் சிவன்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 09-Feb-2021


பாடல்

வீணாட் கழிவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே

அருளிய சித்தர் : கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர்

பதவுரை

இறை பற்றியும், மெய் ஞானம் பற்றிய ஞானம் சிறிதும் கொள்ளாமல் நாட்கள் கழிவது விளையாட்டே; இருப்பவர் இறந்து அதன்பின் சுடலை  வரை சேர்க்கும் வரை அந்த உயிர் குறித்து அழுவது விளையாட்டே; மெய்ஞானம் பற்றி அறியாது இருந்த போதும் அதை முழுவது அறிந்தது போல் பேசுவதும் விளையாட்டே;  அவரை எரித்தப்பின் வீடு வந்த உடன் அந்த நினைப்பை மறப்பதுவும் விளையாட்டே.

‘நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே’ எனும் திருமந்திரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 07-Feb-2021


பாடல்

தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே
வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்
ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

தானாக தன்னில் மூழ்கி, மூழ்கி  மூலாதாரத்தில் இருந்து யோக மார்கத்தில் இருந்து கனல் எழுப்பி தித்திப்பினை தருவதான தேன் ஒத்தது போன்ற அறைக்கதவினை திறந்து(குரு மூலமாக அறிக), சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று மண்டலங்களின் வழியே வாசியினை செலுத்தி, துவாத சாந்தத்தினை அடைந்தவர்கள் நல்ல யோகிகளாக இருப்பார்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Jan-2021


பாடல்

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

சிவசக்தி ரூபத்தில் காலசம்ஹார மூர்த்தி ஆகி இடது காலை உயர்த்தி காலன் எனும் எமனை உதைத்தவளும், நீல கண்ட வடிவத்தில் இருந்து ஈசன் அருந்திய விஷத்தினை தாங்கியவளும், எண்ணில்லாத இந்த புவனங்களை எல்லாம் படைத்தவளும், மானிட வாழ்வு நீக்கம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு முக்தி அளிப்பவளுமாய் இருப்பவள் வாலை.

வாலைப் பூசை கொண்டோர் பிறவி அறுப்பர் என்பதால், காலனை உதைத்தவள் என்றும், யோக முறையில் கண்டத்திற்கு மேல் பூசை செய்து அன்னையை அடைபவர்களுக்கு விஷம் தீண்டாது என்றும் பொருள் உரைப்பாரும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Jan-2021


பாடல்

பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து
பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே

அருளிய சித்தர் : அகத்தியர்

பதவுரை

பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, எண்ணங்களைச் சிதற விடாமல் செய்து சுழுமுனையில் மனத்தை இருக்கும்படி செய்து, சூரிய கலை எனப்படும் வலது நாசி வழியாகவும், சந்திர கலை எனப்படும் இடது நாசி வழியாகவும் செல்லும் வாசியினை அண்ணாக்குள்  நிலை நிறுத்தும் போது அது இயக்கம் கொள்ளாமல் சுழுமுனையில் அடங்கிவிடும், வாசிபற்றி நின்று பூரகம், ரேசகம், கும்பகம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்யும் போது அவைகள் சுழுமுனையில் ஒன்றாக சேர்ந்து இருக்கும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Jan-2021


பாடல்

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

தாயை நிரந்தரமான உறவு என்றும், தந்தையை ஒப்பு செய்ய இயலாதவர் என்று பொய்யான தோற்றத்தினை ஏற்படுத்தி மாயையானது வந்து சேர்ந்ததால் எனது மதி மயக்கம் கொண்டது; இது மாயையின் காரியம் என்று உண்மையினை உணர்ந்து மதியின் மயக்கம் தீர்ந்தவுடன் தாய் நிரந்தரமான உறவாகவும், தந்தை ஒப்பில்லாதவராகவும் ஆகிவிடுவார்களா?

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Jan-2021


பாடல்

சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே
செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே
சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்
சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்
சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்

அருளிய சித்தர் : காரைச் சித்தர்

பதவுரை

சித்தர்கள் தான் கண்ட உண்மையினை பிறருக்கு உரையாமல் மறைத்து வைத்தார் என்று கூறி எண்ண வேண்டாம்; சித்தர்களில் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதே அதன் பொருளை விளக்க அனைத்து சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து வந்து அதன் பொருளை அருளுவார்கள்; சித்தர்களின் பால் வைத்த எண்ணங்களுக்காக அவர்கள் நாட்டம் கொண்டு அருளுவார்கள்; சித்தர் வழியில் அதன் பொருளைக் கண்டு நடக்கையில் அதன் உட்பொருளில் இருந்து மாறுபட்டு நடந்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வார்கள்; சித்தம் நிறைவு உள்ளவர்களுக்கே சித்திகள் எனப்படும் அட்டமா சித்திகள் தோன்றும்; அவ்வாறு சித்தம் நிலைபெறாமல் சித்தி கண்டவர்கள் என்று கூறி அவர்களால் செய்யப்படும் வித்தைகள் எல்லாம் சிரிப்பினைத் தான் தோற்றுவிக்கும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Jan-2021


பாடல்

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம்

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

ஊனில் ஏற்படுவதாகிய உறக்கம் விடுத்து அதை நீக்கி யோக நிட்டை புரிந்தோம், உற்றவர்கள் என்று சொல்லப்படும் மனைவி, மக்கள், உறவுகள் அனைவரையும் விலகி அவர்கள் இடத்தில் பற்று கொள்ளாமல் இருந்து மலைக் குகைகளில் இருந்து (தவம் செய்து) வந்தோம்; புறக்கண்களால் காண இயலாததும், அகக் கண்களால் யோகம் பற்றி காணக்கூடியதான பரவெளியினைக் கண்டோம்; பசி, தாகம் மற்றும் இயற்கை உபாதைகள் தாக்காதிருக்க கற்ப மூலிகளைக் உட்கொண்டு உடலை வளர்த்துக் கொண்டோம்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 14-Jan-2021


பாடல்

அட்ட கரு மம்தெரிய வேணும் அதற்
காதார மானஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசிநிலை வேணும் இத
தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும்

அருளிய சித்தர் : கல்லுளிச் சித்தர்

பதவுரை

மனப்பயிற்சியால் தன் வயப்படுத்தலாகிய  வசியம், இயக்கச் செயல்களைக் கட்டுவதுவதாகிய  தம்பனம், தீய சக்திகளை தன்னிடம் இட்டு விரட்டுதலாகிய  உச்சாடனம், பிறறை தன் மீது  மோகம் கொள்ளச் செய்தலாகிய மோகனம், பகை உண்டாக்கிப் பிரித்தலாகிய  வித்வேடணம், துர்தேவதைகளை பணிய வைத்தலாகிய ஆகர்ஷணம், சுய நினைவற்று போகச் செய்தலாகிய பேதனம், உயிர்களுக்கு கேடு விளைப்பதுவாகிய மாரணம் ஆகிய அட்ட கருமங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த அட்ட கருமங்கள் எவ்வாறு தோற்றமும் ஒடுக்கமும் கொள்கின்றன என்பதன் மூலத்தினை அறிய வேண்டும்; எண்ணத்தில் மன உறுதி கொண்டு வாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு அனைத்தையும் அறிந்து கொண்டு சித்தன் என்று ஆக வேண்டும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 13-Jan-2021


பாடல்

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே

அருளிய சித்தர் : வால்மீகர்

பதவுரை

மூச்சை உள்ளிழுத்தல் ஆகிய பூரகம் என்பதே சரியை மார்க்கமாகும்; மூச்சை அடக்கி செய்தல் ஆகிய கும்பகம்  என்பதே கிரியை மார்க்கமாகும்; மூச்சினை இடம் வலம் எனப்பிரித்து மேலேற்றும் ரேசகமே யோக மார்க்கமாகும்; அவ்வாறு காற்றினை உள்ளும் புறமும் செலுத்தாமல் நிறுத்தி வைத்தலே ஞான மார்க்கமாகும்; மகத்தான சிவசக்தி அடங்கும் வீடு ஆகிய  இந்த உடலில் மரணிக்கச் செய்யாமல் இருக்க பிராண வாயு உடலில் புகுந்து செல்லும். சிவசிவா  என்று அவனைப் பற்றி உரைக்கலாம்; இதனை மனத்துள் உள்வாங்கி தெளிவடைந்து சேர்ந்தவன் சித்தன் ஆவான்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 11-Jan-2021


பாடல்

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

குதம்பாய்! அண்டம் அனைத்திலும் தன் நிலை மாறாது நீக்கமற நிறைந்து சோதி வடிவாக இருப்பதை அங்கம் எனப்படும் உடலுக்குள் பார்ப்பாயாக. (குறிப்பாக ஆறு ஆதாரங்களிலும்)
கால எல்லைக்களைக் கடந்து அண்டங்களுக்கு அப்பாலும் இருக்கும் சுடர்வடிவினை பிண்டம் எனப்படும் உடலுக்குள் பார்ப்பாயாக (உடல் முழுவதும் சுடராகவே)

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 8-Jan-2021


பாடல்

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்
தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்

அருளிய சித்தர் : பத்ரகிரியார்

பதவுரை

உலக வாழ்வில் ஆறாத புண் போன்று அழுந்திக் கிடப்பது போல் அல்லாமல்,  நன்மையும் வளமையும் தராத சிந்தனைக் கொண்டு அதில் இருந்து விலகி தேற்றிவருவது எக்காலம்?

பெற்றோர்களாகிய தந்தை, தாயார், தான் பெற்ற மக்கள், தன்னுடன் உடன் பிறந்த சகோதரர்கள் ஆகிய உறவுகள் அனைத்தும் பொய்யான வாழ்வு எனக் கண்டு, அதனால் சிந்தையினில் தெளிவு பெற்று  இருப்பது எக்காலம்?

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 23 (2021)


பாடல்

பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.

பதவுரை

மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக. 

விளக்கஉரை

  • மௌன நிலையின் சிறப்புகள்
  • பேரண்டம் – 1008 அண்டங்கள்
  • பரஞானம் – இறையறிவு

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 7-Jan-2021


பாடல்

சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநாரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சும் தாம்இறந்து போனதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

கூட்டில் அடைக்கப்பட்டதான நான்கு சேவல்களும், ஐந்து கோழிக் குஞ்சுகளும் ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அவைகள் மடிந்து விடும். அந்தக்கூட்டத்தில் ஒரு கிழ நரியானது புகுந்துவிட்டால் சண்டை செய்யாமல் அவைகள் இறந்துவிடும். அதுபோல் இந்த உடலில் எமன் புகுந்துவிட்டால் அந்தக்கரணங்கள் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும், அது பற்றி அதோடு இருப்பதான மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் பஞ்ச இந்திரியங்கள் அனைத்தும் இறப்பினை எய்தி அனைத்தும் ஆன்மாவில் அடங்கிவிடும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 6-Jan-2021


பாடல்

ஓதும் சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன்
துரியத்தில் தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுதலாகிய சரியை, ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலாலும் அகத்தொழிலாலும் வழிபடுதலாகிய கிரியை, தவம், யோகம், ஞானம் ஆகியவற்றை  தெரிந்து அதை அமைத்துத் தந்தவன் அந்த சித்தனாகிய சிவன்.

நான்காம் அவத்தையும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரிய நிலையில் அவனை போற்றினால் அணுஅளவு துகளாயும், சுடரொளியாகவும் உருவாகவும் வந்து ஜனனம் செய்யக்கூடியவன்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 5-Jan-2021


பாடல்

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே
ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர்

பதவுரை

மாங்குயிலே! ஓங்கார வடிவத்தில் இருக்கும் வட்டத்தின் உட்பொருளை கண் கொண்டு பார்த்தப்பின் மாயை கொண்டு அழியும் பொருள்களின் மீது இருக்கும் நீங்காத ஆசை நிலைத்திருக்குமோ? உயிர்களில் உறையும் ஆன்மாவானது, நிலைத்ததான பரமான்மாவோடு கூடி அமர்ந்திருக்கும் திருக்கூத்தை என்னுடைய வாயினால் சொல்ல இயலுமோ?

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 4-Jan-2021


பாடல்

வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர்

பதவுரை

ஆனந்த வடிவில் இருக்கும் மனோன்மணித்தாயே! தொந்த வினையின் காரணமான கொடுமை கொண்டதான பிறப்பும், இறப்பும் வாசனையின் காரணமாக நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு எவ்விதமான மன மாறுபாடும் இல்லாமல் பிராணாயாமம் செய்தால் எல்லாவற்றிலும் மேம்பட்டதான பரம்பொருள் ஆகலாம். (என்பதை உணர்த்துவாயாக)

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 3-Jan-2021


பாடல்

குருவாகித் தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே
சாத்தரிய மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

மாபெரும் தவயோகியாகவும், இடபத்தில் வருபவரும், அருளினை அருளக்கூடிய பேரானனந்த வடிவமாக இருப்பவனும் தன்னுடைய உருவத்தினை நீக்கி, மானிட வடிவத்தில் குருவடிவம் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாடி தன்னைத் துதிப்பவராகிய பழைய அடியார்களை சூழ்ந்து வரும் வினைகளை நீக்கி தன் வசன் ஆக்குபவன்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 2-Jan-2021


பாடல்

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு – ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் – ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே

அருளிய சித்தர் : புண்ணாக்குச் சித்தர்

பதவுரை

நிறைவினை அடையச் செய்வதாகிய முக்தியினை பெறுவதற்கும், முக்தியினை அளிக்க நினைத்த குருவிற்கும், இறையினையும் கனவு போன்ற இந்த வாழ்வினில் இருந்து விலகி, மெய்யறிவு பெற்று அதில் நிறைந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு குரு இடத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த உலக வாழ்வினை நித்தியம் என்று எண்ணாமல் அநித்தியம் என்று கொண்டு அதுபற்றி அறிந்து வாழ்வினை கொள்ளும் போது கோபம் கொண்டு உயிரினை பறிக்க வரும் எமனும் தன்னுடைய தண்டத்தினை விட்டுச் செல்வான்

சமூக ஊடகங்கள்