
பாடல்
ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்ற
என் மகனே புலத்தியனே யிசைந்து கேளு
மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு
மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம்
வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டு
வேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும்
தேறுமப்பா கற்பமது மவுனத் தாலே
ஜெகசால சித்தகறை மவுனந்தானே
அகஸ்தியர் தண்டக சூஸ்திரம் 25
கருத்து – அகத்தியர் புலத்தியருக்கு மௌனம் பற்றி விளக்கி அதில் நிலைபெறுதலைக் குறித்து விளக்கம் அளிக்கும் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கக் கூடியதான மூலாதாரத்தில் நின்ற எனது மகனாகிய புலத்தியனே உரைக்கக்கூடிய இந்த விஷயங்களை மனம் ஒன்றி கேட்பாயக. மாறி மாறி இருக்கக் கூடியதான பின்னல் போன்றதான இரு நாடிகள் ஆகிய சூரிய நாடி சந்திர நாடி ஆகியவற்றின் வழியே செல்வதாகியதும், ஊமை மூலமானதும், ஜீவாத்மாவை குறிப்பதானதும், ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை குறிப்பதான மகாரமானது அருவம், உருவம் அருவுருவம் ஆகிய முப்பொருளாய் நின்ற நிலையில் அல்லாமல் வேறு எவ்வகையிலும் இல்லாமல் இருப்பதை மௌனத்தினைக் கொண்டு அறுதியிட்டு கூறப்பட்டதான சுழிமுனையில் விருப்பமுடன் நிற்பாயாக. இவ்வாறான கற்கக்கூடியதான மௌனத்தால் சித்தத்தில் இருக்கும் அனைத்துவிதமான குற்றங்களும் நீங்க மௌனம் மட்டும் நிலைபெற்று இருக்கும்.
விளக்க உரை
- மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம் – மகாரத்தினை முதன்மையாகக் கொண்டு அதை நடுவில் வைத்து முன்னும் பின்னும் ஓங்கார எழுத்துக்களால் அடையப்படுபவளாகிய அன்னை எனவும் கொள்ளலாம். ஓங்காரத்தினை உணர்தல் என்றும் கூறலாம்.