அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 15 (2021)


பாடல்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
     நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
     உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
     பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
     இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும்  என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும்,   கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை  ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில்  எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?

விளக்க உரை

  • தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
  • நச்சு – விருப்பம்
  • இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 26 (2021)


பாடல்

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
     மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
     பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
     திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
     கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருக்கோடிகா திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனானவன் வண்டுகள் மொய்க்கும் பூக்கள் அணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாயும், திருமறைக் காட்டில் வாழும் அழகு கொண்டவனாகவும் ,  பன் நெடுங்காலமாய்  செய்த வினையான் வரும் பழைய வினையாகிய பிறவித் துன்பத்தைத் தீர்ப்பவனாயும், வீட்டுலக வழியை உணர்த்தும் பரமனாகவும், கூர்மை கொண்டு ஆடும் ஆட்டம் போல இயல்பாக எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாகவும், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குபனாகவும் ஆவான்.

விளக்க உரை

  • மணாளன் – அழகன்
  • பண்டு ஆடு – முற்பிறப்பில் செய்த பழவினை
  • பரலோகம் – எல்லா உலகங்களினும் மேலாய உலகம், வீட்டுலகம்; இறைவனது திருவருள்
  • பரமன் – யாவர்க்கும் மேலானவன்
  • பரலோக நெறி காட்டும் பரமன்  – பரலோகத்தை அடையும் பொழுது உடம்பும் இல்லாது அருளே வடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே கொண்டவனாகவும் , அவ்வுணர்வும் அவன் தந்தால் மட்டுமெ பெற முடியும் என்பதும் பெறப்படும்
  • செண்டாடி – செண்டாடுதல்போல உழற்றி
  • கொண்டாடும் – பாராட்டுகின்ற

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 25 (2021)


பாடல்

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமீயச்சூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகியும்,  பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டு வேறு வேறு  வேடத்தராகியும் அன்னையை தன்னுடை உடலின் பாகத்தில் கொண்டவனும் ஆனவன் அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலில் பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 23 (2021)



பாடல்

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
     படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
     இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
     பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில்  உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும்  அழகி கோலம் கொண்டவராகவும்  காட்சி வழங்குகின்றார்.

விளக்க உரை

  • பசைந்த – விரும்பிய
  • பிசைந்த – வடித்த
  • அசைந்த – தங்கிய

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 22 (2021)


பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.

விளக்க உரை

  • அயில் – கூர்மை
  • குயில் வாய்மொழியம்மை – அம்பிகை திருநாமம்
  • பயில்வான் – கோயில்கொண்டு இருப்பவன்
  • பற்றி நிற்றல் – பற்று விடுமாறு பற்றி வழிபடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 16 (2021)


பாடல்

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவபெருமான் திருவடி அடைப்பெறுவதால் மனிதர்கள் பெறும் இயல்புகளைக் கூறும் பாடல்.

பதவுரை

இறந்த பிரமனுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய சிறந்த புண்ணியனை உள்ளத்தில் கொண்டு இருப்பதால் எவரிடத்தில் இருந்தும் யாம் என்றும் பின்வாங்க மாட்டோம்;  சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றதால் (அனைத்து உயிர்களும் சமமானதால்) இந்த பரந்துபட்ட  பூமியிலும் விண்ணுலகத்திலும் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழ மாட்டோம்; யாம் எந்த ஒன்றினாலும் குறை உடையவர்களாக ஆகமாட்டோம். பிறவியின் காரணமாக வருவதாகிய உறுபிணிகள் எம்மைத் துன்புறுத்தாமல் விட்டு ஓடிப் போயின.

விளக்க உரை

  • இடைதல் – பின்வாங்குதல்
  • எதிராவார் – இணையாவார்
  • உம்மை , ` உயர்வாவாரும் இல்லை
  • அன்றே – அமணரை விட்டு நீங்கிய அன்றே
  • உறுபிணி – மிக்கநோய்
  • செறல் – வருத்துதல்
  • பொன்றினார் – இறந்தவர்
  • நண்ணிய புண்ணியம் – அடைந்த புண்ணியப் பயன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 10 (2021)


பாடல்

மூலம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

பதப்பிரிப்பு

தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே
நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து  அருளினான்;  தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து  அவனது பொன்போன்ற  திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்;  படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம்  உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!

விளக்க உரை

  • அறிந்து – தோற்றுவித்தது என்பது  பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
  • நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 22 (2021)


பாடல்

உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • உரம் – வலிமை.
  • உலறு கோட்டு – வற்றிய கிளை
  • கூகை – கோட்டான்
  • அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்; 
  • பரமன் – உயர்ந்தவற்றிற்கு எல்லாம் உயர்ந்தவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 21 (2021)


பாடல்

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு  விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில்  வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே  சாரூப பதவி பெறச் செய்பவர்.

விளக்க உரை

  • கலை – மான்
  • இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
  • கட்டங்கம் – யோகதண்டம்
  • கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
  • தலை தாழ்வடம்
  • தமருகம் – உடுக்கை
  • அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
  • ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
  • நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 9 (2021)


பாடல்

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.

விளக்க உரை

  • அக்கு – உருத்தி ராக்கம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 6 (2021)


பாடல்

எல்லா உலகமும் ஆனாய் நீயே
     ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
     ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
     புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
     திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும்,  பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.

விளக்க உரை

  • எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
  • ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
  • சுடர் – ஒளி –  ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
  • செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு  ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 3 (2021)


பாடல்

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
   வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
   எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
   பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
   ஓண காந்தன் தளியு ளீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து  திருவோணகாந்தன்தளி  என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும்  ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை  நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?

விளக்க உரை

  • உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
  • திரிந்தும்- இழிவு குறிப்பு
  • பகல் – நாள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 22 (2021)


பாடல்

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
   பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
   காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
   தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.

பதவுரை

படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.

விளக்க உரை

  • படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
  • பாவிக்கொள்ளுதல் – மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல்
  • தாழ்தல் – தங்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 26 (2021)


பாடல்

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
   கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
   ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
   செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
   ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

  • குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
  • உறவிலேன், உறவு யார் –  தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி  பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
  • ஒரு பிழை – பிறப்பெடுத்தது
  • ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 13 (2021)


பாடல்

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற  பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • செய்ய – சிவந்த; செம்மையான
  • கமல பாதம் – தாமரைப்பூப்போன்ற திருவடி
  • சேரும் ஆ – இடை விடாது நினையுமாறு
  • மை – நீலவிடம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 7 (2021)


பாடல்

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.

விளக்கஉரை

  • தொங்கல் – (மாலை) கொன்றை
  • மதி – பிறை
  • மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
  • விழுப்பம் – மேன்மை.
  • விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 5 (2021)


பாடல்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே

முதல் திருமுறை  – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – சிவனின் பெருமைகளை உரைத்து அவன் மாற்பேறு திருத்தலத்தில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.

பதவுரை

குருந்த மரத்தடியில் இருந்து குருவாக அருளுபவனும், குருகவன் எனும் வைர வகைகளில் ஒன்றாக இருப்பதைப் போன்றவனும், கூர்மை உடையவனாக இருப்பவனும், பண்புகளில் மேன்மை உடையதான பெண், ஆண் எனும் வடிவங்களாக விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமை அம்மையால் விரும்பப்படுபவனும், துன்பம் கொள்ளூம் உயிர்களுக்கு மருந்தாக இருப்பவனும் ஆன சிவபெருமானது தலம் வளமை பொருந்திய மாற்பேறு ஆகும்.

விளக்கஉரை

  • குருந்தவன் – குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவன் எனும் பொருளில் ஏறக்குறைய அனைத்து இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் உடன் இருப்பவன் எனும் பொருள்பற்றி விளக்கினாலும் குருவாக இருந்து அருளுபவன் என்பது பொருந்துவதால் இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • மருந்து – அமுதம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 4 (2021)


பாடல்

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே!  ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே!  கூர்மையான  மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே  என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி  நிற்கின்றேன்.

விளக்கஉரை

  • ஆரார் – பொருந்தார்; பகைவர்
  • குறள் – குறுகிய வடிவம்
  • ஆயிரம் –  அளவின்மை
  • அரற்றி – வாய்விட்டு அழைத்து
  • நைகின்றேன் – மனம் உருகி நிற்கின்றேன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 1 (2021)


பாடல்

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே,  காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே,  அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே,  உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக  இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • ‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’  என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 18 (2021)


பாடல்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
   கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
   படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
   அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
   இடைம ருதுறை எந்தைபி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – மெய்யறிவு இல்லாமல் உலகில் உழலும் தனக்கு மனம் இரங்கி உய்யும் வகையினை அருள வேண்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவிடைமருதூரில் எழுந்து அருளுகின்ற எம் குலதேவனேகழுதையானது குங்குமத்தினை பொதி போல் சுமந்து வருந்தினால் சிறப்பு எதுவும் இல்லை எனக் கருதி, அனைவரும் நகைப்பர்; அதுபோல  அடியேன் உனக்கான தொண்டினை மேற்கொண்டு, அதன் உண்மையானப் பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகும் சுழியிடை அகப்பட்டவன் போல  இந்த உலக வாழ்க்கையில் வருத்தம் கொண்டவன் ஆயினேன்; (அவ்வாறே மற்றவர்கள் எள்ளி நகைப்பர் என்பது மறை பொருள்) ‘மனமே, நீ நம் இறைவனுக்கு உண்மையானத் தொண்டினை செய்யாது (புறப்பொருள்கள் குறித்து) கவலை கொண்டிருந்து என்ன பெறப் போகின்றாய்என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும்,  ‘அழகிய கண்களை உடைய சிவனேஎங்களைக் காப்பவனேஎன்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லாதவனாகிய எனக்கு, நீ  மனம் இரங்கி, உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்.

விளக்கஉரை

  • நகைப்பர் -> கைப்பர்
  • அங்கணன் – கண்ணழகு உடையவன், கருணையான நோக்குடையவன், கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  • இழுதை – பேய், அறிவின்மை, அறிவிலி, பொய்

சமூக ஊடகங்கள்