அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)


அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)

பாடல்

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – சித்தர்கள் செய்யக்கூடிய சில அரும் செயல்களைக் கூறும் பாடல்

பதவுரை

நாகமே! உரைக்கக் கூடியதாகிய மூன்று உலகங்களையும் சிறப்புடைய பொன்னால் உடையதாக ஆக்குவோம்; வெப்பம் தரும் சூரிய கதிர்களை குளிர்ச்சி தரக்கூடியதாகிய சந்திர ஒளியாக மாற்றிச் செய்வோம்; பரந்து பட்டதான இந்த உலகத்தினை இல்லாமல் மறைப்புச் செய்வோம்; இப்படிப்பட்ட செய்யக்கூடிய சித்தர்களாகிய எங்களில் வல்லமையையக் கண்டு நீ ஆடுவாயாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 9 (2021)


பாடல்

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற
ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – ஈசன் அனைத்தும் ஆகியும் அதில் இருந்து தனித்து இருக்கும் முறையை உரைக்கும் பாடல்.

பதவுரை

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்கள் ஆகியும் (84 லட்சம் வகை யோனி பிறப்புகள்), நாம் வாழும் பூலோகம் விடுத்து புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம்,   தபோலோகம், சத்யலோகம் ஆகிய மேல் உலகங்கள், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம்,  தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் ஆகிய கீழ் உலகங்கள் அனைத்தையும்  படைப்பவனாகவும் அதனில் இருந்து  தனித்து  நிற்பவனாகியும், அனைத்துக்கும் வெளியில் தனித்து நிற்பவனாகி திருவிளையாட்டினை நிகழ்த்துபவனாகவும், பின்னர் அவ்வாறான அந்த உயிர்களாகவும், அந்த உலகங்களாகவும் ஆதியாகவும் இருக்கும் பேரானந்தத்தைக் கண்டு பாம்பே ஆடுவாயாக

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 28 (2021)


பாடல்

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ?

அருளிய சித்தர் : அழுகணி சித்தர்

கருத்து – ஞானத்தின் உயர் நிலையில் உலகப் பற்றுக்கள் நீங்கும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

கற்றவர்களும், உடன் இருப்பவர்களும், 96 தத்துவங்களும் உற்றாரும் சுற்றமும் குடும்பமும் நித்யம் என்றிருந்தேன். உற்றாரும் சுற்றமும் குடும்பமும் இந்த ஊரை விட்டுச் செல்கையில் எந்த விதமான சுற்றமும் இல்லாமல் துணை இழந்து நின்றேன்.

விளக்க உரை

  • கற்ற மெய்ஞானம், உடல் மனம் சார்ந்து அடையும் 96 தத்துவங்கள், தான் உடல் பெறுவதற்கு முன் செய்த வினைகள், உடல் எடுத்தப்பின் செய்யும் வினைகள் ஆகிய அனைத்தும் ஞானம் அடையிலே பற்றுக்கள் அனைத்தும் எனை விட்டு  சென்றதென்ன என்று பொருள் உரைப்பாருல் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஆன்ம தத்துவங்கள் – 24, உடலின் வாசல்கள் – 9, தாதுக்கள் – 7, மண்டலங்கள் – 3, குணங்கள் – 3, மலங்கள் – 3, நோய்கள் – 3, விகாரங்கள் – 8, ஆதாரங்கள் – 6, வாயுக்கள் – 10, நாடிகள் – 10, அவத்தைகள் – 5, ஐவுடம்புகள் – 5

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 25 (2021)


பாடல்

ஈயாமல் இருந்துவிட்டால் வுகமுங் காரு
ஏற்றபடி பணிவிடைகள் எல்லாம் செய்து
செய்யாதே அணுவளவும் பொய் பேசாதே
தினந்தொறும் கால் கடுக்க நின்று காரு
ஆயாவே முகம்பார்த்துச் செபமே பண்ணு
அன்றாடம் உண்கிறதில் மூன்றில் ஒன்று
மேயாக ஐயருக்குப் பங்கிட்டீவாய்
வேண்டினது நீ கொடுத்தும் இன்னங்கேளே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – ஆஸ்ரமத்தில் வாழும் சீடருக்கான விதி இது என்றும், தனது குரு கேட்பவை அனைத்தையும் வழங்கி இந்த அறிவைப் பெறவேண்டும் அகத்தியர் உரைக்கும் அகத்தியர் மெய்ஞானப் பாடல்.

பதவுரை

குருவுக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்தும், கால் கடுக்க நின்றும், அவரிடத்தில் எந்த விதத்திலும்(மனம், மொழி, வாக்கு) பொய்யினை பேசாமல் மெய்ஞானத்தில் கூறியுள்ளவற்றை குரு உரைக்க அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை எனில் அவன் ஒரு யுகமளவு காத்திருக்கவேண்டும்; அந்த சீடன் எப்பொழுதும் மெய் தேடலில் விருப்பம் கொண்டு தனது குருவின் முகக் குறிப்பை அறிந்து இந்த மெய்யறிவைத் தொடர்ந்து வேண்ட வேண்டும்; யாசித்து பெற்ற பிக்ஷையின் மூலம் உணவைச் சேகரிக்கும் சீடன் அதில் மூன்றில் ஒரு பங்கை குருவுக்கு அளிக்கவேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 21 (2021)


பாடல்

தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச்  சித்தர் எனும் மதங்க நாதர்

கருத்து – தவநிலையை அறிந்தவர்கள் நவசித்தர்கள் என்பதை உரைக்கும் பாடல்

பதவுரை

மனமாகிய ஆனந்தப் பெண்ணே! எது தவம் என்பதையும், அதன் நிலை என்ன என்பதையும் அறிந்தவர்களுக்கு மெய்ஞானம் தன்னால் தெரியும். இவ்வாறு நவசித்தர்கள் கண்டு தெளிந்தார்கள் என்பதை நன்றாக அறிவாயாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 18 (2021)


பாடல்

ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல்
வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்
ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே
பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – யோக முறையில் ஆறு ஆதாரங்களைக் கடந்து செல்கையில் பிரம்மத்தினை உணரலாம் என உரைக்கும் பாடல்.

பதவுரை

மிகச்சிறியதான ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளானது ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இந்த உலக வடிவம் கொள்கிறது; இவ்வாறு ஒரேழுத்து கொண்டு பிரமமாகி நமக்குள் இருக்கும்  மெய்ப்பொருளை அறிந்து கொண்டு,   யோக முறையில், வாசியை ஏற்றி இறக்கி  அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிரம்மத்தினை காணுமாறு செய்தால்  நீங்களே அந்த பரப்பிரம்மம் ஆவீர்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 14 (2021)


பாடல்

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
   கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
   பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
   மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
   விளையாட்டைப் பாரேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

கருத்து – குண்டலினி சிரசை அடையும் மார்க்கத்தைக் உரைக்கும் பாடல்

பதவுரை

உபதேசம் செய்யப்பட்ட முறைகளை அனுசரித்து தீட்சை முறைகளால் மலங்களை எரித்து, பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாதாரத்தில் இருந்து எழும் அக்கினியானது  மற்ற ஆதாரங்களாகிய  சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆகியவற்றை கடந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்று அழைக்கப்படும்  சுழிமுனையினை நாடி வழியே மேலேறி, ஆக்ஞையைக் கடந்து  புருவ மத்தியில்  ஆத்ம சொரூபத்தை காண  சூழ்ந்துள்ள திரைகளை விலக்கி ஆத்மாவை விளக்கி மேலப்பதி எனும்  சகஸ்காரத்தில் அதன் அசைகின்ற விளையாட்டினை என் கண்ணால் பார்ப்பேனோ?

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 28 (2021)


பாடல்

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்

நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றதொன்றும் கண்டிலேன்

குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்

நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

நெட்டெழுத்துக்கள் யாவும் முதலும் முடிவும் இல்லா வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு தோன்றி வருகின்றது; குற்றெழுத்துக்களாகிய ‘க முதல் ‘ன வரையில் அகார ஒலியில் ஒன்றி இருக்கும்; அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் அந்த வட்ட எழுத்துக்களின் ஒலி மாறும்.. இவ்வாறு எழுத்துக்கள் யாவும் வட்ட வடிவ ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து அவனை துதியுங்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 24 (2021)


பாடல்

அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே – என் ஆத்தாளே
சச்சுபலங் கொண்டான்டி

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

திருநீற்றையும், வெண்மதி எனும் சந்திரனையும் சூடி ஆனந்த பேரொளி வடிவமாக இருப்பதே சக்தி சிவன் எனும் நிலையே. இவ்வாறான பூரண நிலையை முழுமையா அறியாவிட்டாலும்  சிறுமைகண்டும் எனக்கு அன்னை அருள் செய்தாள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 07-Oct-2021


பாடல்

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே

கொங்கணச் சித்தர்

பதவுரை

சிவபெருமானின் அடியார்களையும், வேதங்களைப் பின்பற்றி நடப்பவர்களையும், சிறப்புக்குரிய ஞானம் கொண்டு புலமை பெற்ற பெரியோர்களையும் மனதளவிலும் கூட (அகத்தளவில்) வையாதே; அவர்களின் மனம் புண்படும்படியாக எதையும் செய்யாதே(புறத்தளவில்).

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 20 (2021)


பாடல்

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

மூதுரை – ஔவையார்

கருத்து – முன் ஜென்ம வினைவழியே அனைத்தும் நிகழும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

தான் எண்ணியவாறு  நடக்கவில்லையே என்று வருந்தும்  மட நெஞ்சமே! விரும்பியதை எல்லாவற்றையும் தரும்  கற்பக மரத்திடம் சென்று வேண்டி நின்றாலும் அது   எட்டிக் காயைக் கொடுக்கிறது எனில் அது அவர்கள் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.

விளக்க உரை

காஞ்சிரங்காய் – எட்டிக் காய்

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 03-Oct-2021


பாடல்

மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காப் பால்ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காப் பால் ஏதுக்கடி?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து எழும் குண்டலினி சக்தியை மேலெழுப்பி, சஹஸ்ராரத்தை அடையுமாறு செய்யும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது. அவ்வாறு இணைவதன் காரணமாக நிலைத்ததும்  என்றும் பொலிவானதுமான அமிர்தத் தேன் உடல் எங்கும் பரவுகிறது. இதுவே மாங்காதப் பால். இதனை உணர்ந்தவர்கள் தேங்காப்பால் போன்றதாகிய சிற்றின்பத்தை விரும்ப மாட்டார்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 2 (2021)


பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்

மூதுரை – ஔவையார்

கருத்து – தீங்குகளை மனதில் கொள்ளாமல்  அவர்களைக் காக்கும் சான்றோர்கள் குணம் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

மாந்தர்களால் வெட்டுப்பட்டு தன்னுடைய அவயங்கள் ஆகிய கிளைகள் குறையும் போதும் தன்னை வெட்டுபவனுக்கு நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடைய சான்றோர்கள் தங்கள் உயிருக்கே தீங்கு நேரினும் அந்த தீங்குகளை மனதில் கொள்லாமல் அவ்வாறு தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 9 (2021)


பாடல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

நல்வழி -ஔவையார்

கருத்து – மனிதர்கள் பெறும் செல்வங்கள் முன் பிறவியில் செய்தவைகளின் விளைவு எனக் கூறும் பாடல்.

பதவுரை

இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் அவர்கள் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டு மட்டுமே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் அறுதியிட்டு உண்மையை உணர்ந்து  சொல்லுகின்றன. ஆதலினால் இந்த உண்மைய உணர்ந்து தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 16 (2021)


பாடல்

பாரப்பா இங்கென்று குறியிற்சாதி
     பராசக்தி மூலமிது பாரு பாரு
ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார்
     அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன்
நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று
     நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு
வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல்
     வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே

யோக ஞானம்

கருத்து – முருகப்பெருமான், அகத்திய மாமுனிக்கு பராசக்தியின் மூலத்தை காட்டி அருளி நிர்விகல்ப சமாதியில் நின்று ஆச்சரியத்தை காணும்படி செய்தது பற்றி விளக்கும் பாடல்.

பதவுரை

பராசக்தியின் மூலத்தை உனக்காக உரைத்து வைத்தேன் பார்ப்பாயாக, அகத்திய மாமுனியே, என்னைவிடுத்து உனக்கு யார் அந்த மூலத்தின் மகிமையை சொல்லமுடியும். கனவு நிலையில் (நிலையற்றது) இல்லாமல் மனதை ஒருநிலைபடுத்தி நிர்விகல்ப சமாதி எனும் காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலையினை தாண்டி மேலே செல்வாயாக. இதனை வெறும் பேச்சாக பேசிடாமல் உச்ச நிலைஆகிய வெட்ட வெளியினை நாடி அங்கு கிடைக்கப் பெறும் விந்தையான அனுபங்களைக் காண்பாயாக.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 26-Apr-2021


பாடல்

எங்கும் நிறைத்துநின்ற ஏகபர வத்துவினை

அங்கைநெல் லிக்கனிபோல் யானறிந்தேன் மாங்குயிலே

அருவாய் உருவாகி அண்டர் அண்டந்தானாய்க்

கருவாகி வந்த கணக்கறிவாய் மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர்

பதவுரை

ஒரே பொருளாகி, இங்கு, அங்கு என்று இல்லாதவாறு எங்கும் நிறைந்து நின்றவனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன்; அருவம் உடையதாகவும், உருவம் உடையாதாகவும் அண்டர் அண்டங்கள் எல்லாவற்றுக்கும் மூலக்காரண கருவாகி வந்த கணக்கினை அறிவாய்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Apr-2021


பாடல்

கூட வருவதொன் றில்லை – புழுக்
     கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை – அதைத்
     தேடும் வழியைத் தெளிவோரு மில்லை

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

மனித வாழ்வு முடிவுக்கு வரும்போது நல்வினைகள், தீவினைகள் தவிர்த்து வேறு எதுவும் வருவதில்லை; புழுக்கூடு என்ற இந்த உடல் எடுத்தப்பின் மனம் என்ற  திங்கள் உலவுவதே துன்பம் தரத் தக்கதாகும்; மோட்சம் என்பது எது என்றும் அதன் எல்லை எனவும் அறிய இயலாது; அதனை அடையும் வழியைக் கண்டு அந்த வழியில் நின்று அது குறித்து தெளிவோரும் இல்லை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 2 (2021)


பாடல்

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

நல்வழி – ஔவையார்

கருத்துமனிதர்கள் வினைபற்றி இருக்கும் போது அது குறித்து துயரப்பட்டு இறத்தலே தொழிலாக இருப்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வருத்தப்பட்டு எத்தனை முயன்று அழைத்தாலும் நமக்குச் சேராதவைகள் நம்மிடத்தில் வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்தி நிற்பவைகள் நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் அது எக்காலத்திலும் போவதும் இல்லை. இவ்வாறு வினைகள் பற்றி மனிதர்களின் வாழ்வு இருக்கும் போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கம் கொண்டு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி வருந்தி நெடுந்தூரம் திட்டமிட்டுக் கொண்டிருந்து மரணிப்பதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 23-Mar-2021


பாடல்

செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
     முத்திதான் இல்லையடி குதம்பாய்
     முத்திதான் இல்லையடி
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
     அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
     அங்கத்துள் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

காதுகளில் குதம்பையினை அணிந்த பெண்ணே, உயிர்வாழவும், நிலை இல்லா இன்பம் தருவதுமான இகலோக வாழ்வின் தேவை குறித்து நினைவு கொண்டு இருப்பவர்களுக்கு நிலைத்த இன்பம் தருவதும், பேரின்பமும் ஆன முக்தி இல்லை. அணுமுதல் அண்டம் வரை எங்கும் எவ்விடத்தும் எக்காலத்திலும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் எனப்படும் ப்ரமத்தினை சோதி வடிவாக அங்கத்துள் (உபதேசித்தப்படி) சூட்சமமாக பார்ப்பாயாக

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Feb-2021


பாடல்

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
   குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
   குற்றங்கள் இல்லையடி
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
   சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
   சூட்சியாய்ப் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

எண் குணங்களில் ஒன்றான இயல்பாகவே பாசங்களினின்று நீங்கப் பெற்ற வஸ்துவை காரண காரியம் இல்லாமல் பற்றுதல் இல்லாமல் அந்த வஸ்துவைக் காண்போர்க்கு ஆணவம், மாயை, கண்மம் எனும் குற்றங்கள் இல்லாமல் நீங்கிவிடும்.

ஸ்தூலம், சூட்சுமம் ஆகியவற்றால் காணக்கூடிய காட்சிகளைக் கடந்து காட்சியாக (சாட்சி பாவம்) நிற்கக்கூடிய பிரம்மத்தினை சூட்சமமாக பார்ப்பாயாக.

சமூக ஊடகங்கள்