கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.
விளக்கஉரை
பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன் துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.
பதவுரை
கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.
ஈசனாரின் நிவேதனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியத்தை வெள்ளம் அடித்துப்போகாமல் வேலிகட்டி காத்த தலம்
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம்
மண்டபங்கள் கொண்ட கோயில் – ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம்
வேதங்கள் மூங்கில் மரங்களாக இருக்க, ஈசனார் அவற்றின் அடியில் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கும் தலம்
ஈசன், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி திருக்காட்சி
காந்திமதியம்மைக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு மறுநாள் காலை பூஜை வரை அதே கோலத்தில் திருக்காட்சி
வழிபாட்டு முறைகள் – காந்திமதி அம்மைக்கு காரண ஆகமம், நெல்லையப்பருக்கு காமீகஆகமம்
சிவன் சந்நிதிக்கு செல்லும் வழியில் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அற்புதமான இசை தரவல்ல இசைத்தூண்கள்
மூலவர்கள் – மகாவிஷ்ணு வழிபட்ட சிவலிங்கத்திருமேனி, நெல்லையப்பர் சந்நிதி அருகில் சற்று தாழ்வான சந்நிதியில் அமைந்துள்ள ஆதி மூல சிவலிங்கத்திருமேனி
சிவனின் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி தனித்துவமாக மேற்கு நோக்கி
பஞ்ச தட்சிணாமூர்த்திகள்
சிவனாரின் சந்நிதி வலப்புறம் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை. பெருமாளின் வலது கை சிவலிங்க வழிபாடு செய்யும் அமைப்பு. மார்பில் சிவலிங்கம் அடையாளம் உள்ள உற்சவ பெருமாளின் கையில் தாரைப் பாத்திரத்துடன் காட்சி
கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன
அனவரத லிங்கம் – இஸ்லாமியர் அன்வர்கான் என்பவரால் வழிபடப்பட்டது.
உச்சிகால பூஜையின் போது காந்திமதியம்மையே நேரில் வந்து சிவனாருக்கு அமுது பரிமாறி உபசரிப்பதும், பின் அந்த அமுதே அம்மைக்கும் நிவேதனமாக படைக்கப்படுவதும் இத்தலத்தில் தினமும் நடக்கும் சிறப்பான உற்சவம்..
அகத்தியர் சிவனாரின் திருமணக்கோல திருக்காட்சி தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
அகத்தியர் பிரதிஷ்டை செய்தது சால்வடீஸ்வரர் சிவனாரின் சந்நிதி
இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகரின் வலது கையில் மோதகம்; இடது கையில் தந்தம் என மாற்றி வைத்து அருள்பாலிப்பு
வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரத்தகடுகளால் வேயப்பட்டுள்ள தாமிரச்சபையின் மேற்கூரை
தலமரமான மூங்கில் தாமிரச்சபைக்கு அருகில்
அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த, கீழே மரத்தாலும், மேலே தாமிரத்தாலும் செய்யப்பட்டு ஏழு அடுக்குகளுடன் திகழும் தாமிர சபை.
நடராஜர் தாமிர சபாபதி. சபையின் பின்னால் உள்ள நடராஜர் திருவடிவம் சந்தன சபாபதி. சபையின் உள்ளே ருத்ரவிஷ்ணு , பேதங்கள் , ரிஷிகளின் வடிவங்கள்.
இரு துர்க்கையம்மன் சந்நிதிகள். மான் , சிங்கம் மற்றும் தோழியுடன் கூடிய மகிஷாசுரமர்த்தினி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி மஞ்சன வடிவாம்பிகை என்ற பெயருடன் அம்பாள் சந்நிதியில் வடக்கு நோக்கியும் திருக்காட்சி
இருபத்தி ஐந்து மூர்த்தத்தில் ஒரு வடிவமான ஜ்வரஹரேஸ்வரருக்கு தனி சந்நிதி
பிள்ளைத்துண்ட விநாயகர் எனும் பொல்லாப்பிள்ளையாருக்கு தனி சந்நிதி
நாயன்மார்கள் சந்நிதி அருகில் தாமிரபரணி நதியின் பெண் வடிவம். சித்ரா பௌர்ணமி , ஆவணி மூலம் , தைப்பூசம் ஆகிய நாட்களில் திருமஞ்சனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது
சிவகாமியுடம் கூடிய அக்னி சபாபதி என்று போற்றப்படும் நடராஜர் சந்நிதி (மற்றொன்று)
நவக்கிரக சந்நிதியில் வடக்கு நோக்கி காட்சி தரும் புதன்.
வியாழன்தோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படும் காந்திமதியம்மை தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் திருக்காட்சி.
அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத்தூண்களான அமைப்பு.
அம்பாள் சந்நிதி முன்பு கங்கையும், யமுனையும் துவாரபாலகிகளான வடிவமைப்பு
வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின்(தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு விளக்கும் அளித்தவர்) மகனும் சீடரும் ஆனவரும், பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவரும் ஆன சுவேதகேது தனது எமபயம் நீங்கப்பெற்ற தலம்
ஆயர்குல ராமகோனாரும், முழுதும் கண்ட ராமபாண்டியனும் சிவனாரின் திருக்காட்சி பெற்ற தலம்
உலகமாந்தர் கடைபிடிக்கவேண்டிய 32 அறங்களை உலகுக்கு உணர்த்திய தலம்
சக்தி பீடங்களில் இத்தலம் காந்திசக்தி பீடம்
பிரதோஷத்தின் போது அபிஷேக ஆராதனைகள் ஈசன் மற்றும் அம்பாள் இருவரின் சந்நிதிகளின் முன்புள்ள நந்திகளுக்கும் செய்யப்படுவது தனி சிறப்பு
நல்லனவற்றை விரும்பும் நன்நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக; அந்த திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்;. மறுமையில் நற்கதி தரும்; மற்றும் உயிர்களின் துயர் கொடுமாறு அதன் பயன்கள் யாவும் தரும்; போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும்; அப்படிப்பட்ட அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்கக்கூடியதும், நெருங்கியுள்ளதும், பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்றதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்து அருள்கிற அருட்செல்வர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர் திருமுறை 3 பதிக எண் 92 திருமுறை எண் 8
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்றதும், பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடையதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமையையுடைய கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
*கருத்து – கைலாயத்தில் உறையும் ஈசன் திருவையாறு தலத்திலும் உறைவன் என்பதை குறித்து பாடிய பாடல்.*
பதவுரை
எல்லைகள் அற்றதானதும், மலைச்சிகரம் ஆனதும் ஆன கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதையுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம் மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு பாயும் புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விரை – மணம்
வரை – கோடு, எல்லை, வரம்பு, வரைப்பு, கரை (வரம்பு), அளவு, திருமணம், இரேகை, எழுத்து, மலை, மலைச்சிகரம்.
கருத்து – பல்வேறு விதமாக இறைவனின் பெருமைகளை கூறி அவன் புகழைப் பேசுவோர் பெரியோர் என்று விளம்பும் பாடல்.
பதவுரை
எவரின் மனத்தாலும் எண்ணி அறியப்படாதவனும், தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகளுக்கு மூன்று கண்கள் உடையவனாக விளங்குபவனும் உயிர்கள் வாழ உதவி செய்யும் மண் வடிவாவனாகவும், சிறந்ததும், பெரியதுமான வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமை அம்மையோடு கூடியவனாய் விளங்கும் இறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்.
விளக்கஉரை
பெண்ணான் – மங்கைபங்கன், கங்கைச்சடையன்
எண்ணானை – யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை (அஃதாவது மனதால் எண்ணாமல் இருப்பவனுக்கு மும்மலத்தின் காரணமாக அறியப்படாதவன்)
*கருத்து – திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் வீரச் செயல்கள் செய்த இறைவனின் வடிவமானவர் என்பதை கூறும் பாடல்.*
பதவுரை
திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் முன்பு திருமால் விரும்பியதன் பேரில் அவருக்கு சக்கராயுதம் அளித்தவர்; தாமரை மலர் மேல் உறையும் பிரமன் ஐந்து தலைகளை பெற்று அதன் காரணமாக அகந்தை கொண்டிருந்த போது ஒன்றைக் கொய்தவர்; பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக படைத்த சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர்; தீயில் நடனமாடும் திருவடிகளை உடையவர்; தங்கத்தால் செய்யப்பட்ட கழலினை அணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர்; காமனை கண்களால் நோக்கி அவனைப் பொடிபட செய்தவர்; உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள் பல செய்ததலைவர் ஆவார்.
விளக்கஉரை
திருப்பாம்புரம் – தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59 வது சிவத்தலமாகும்
வீரச் செயல் செய்த தலங்களான திருவீழிழலை(சக்கரம் ஈந்தது), தலை கொய்தது(திருக்கண்டியூர்), காலனை அழித்தது (திருக்கடையூர்), காமனை எரித்தது (திருக்குறுக்கை) ஆகியவை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
*கருத்து – சிவனின் வடிவத்தையும் தன்மைகளையும் உரை செய்து அவன் திருவையாறு தலத்தில் உறைகிறான் என உரைக்கும் பாடல்.*
பதவுரை
எண் குணங்களில் ஒன்றாகிய எங்கும் நிறைதல் ஆகி இருப்பவனும், பிறரால் அறிய இயலாத இயல்பு கொண்டவனும், உமையம்மையை ஒருபாகமாக தன் வலப்பக்கத்தில் கொண்டவனும், சந்திரனை மதியில் சூடிய சிறந்த வீர மிகு ஆண்மகனும், சிவபேத ஆகமங்கள் ஆகிய காமிக ஆகமம், யோகஜ ஆகமம், சிந்திய ஆகமம், காரண ஆகமம், அஜித ஆகமம், தீப்த ஆகமம், சூட்சும ஆகமம், சகஸ்ர ஆகமம், அஞ்சுமான் ஆகமம், சுப்ரபேத ஆகமம் (10) மற்றும் ருத்திரபேத ஆகமங்கள் ஆகிய விஜய ஆகமம், நிஸ்வாச ஆகமம், சுயம்பூத ஆகமம், ஆக்னேய ஆகமம், வீர ஆகமம், இரௌரவ ஆகமம், மகுட ஆகமம், விமல ஆகமம், சந்திரஞான ஆகமம்,முகவிம்ப ஆகமம், புரோற்கீத ஆகமம், லலித ஆகமம், சித்த ஆகமம், சந்தான ஆகமம், சர்வோத்த ஆகமம், பரமேசுவர ஆகமம், கிரண ஆகமம், வாதுள ஆகமம் (18) ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆன பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.
விளக்கஉரை
குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்கு உதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆனவன் என எண்ணிக்கை முன்வைத்து (28) சில இடங்களில் உரை செய்யப்பட்டுள்ளது. சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்பதால் சிவபேத மற்றும் ருத்ரபேத ஆகமங்கள் ஆகமங்கள் முன்வைத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
எங்கும் ஆகி நின்றானும் இயல்புஅறி யப்படா – எங்கும் நிறைந்து இருந்தாலும், எளிதில் அறிய இயலாதவனாக இருக்கிறான். எதிர்மறை செயல்களை தானே முன்னின்று இயல்பாக நடத்துபவன் என ஒரு பொருளும் இயல்பு அறியப்படா உமையம்மையை தன் பாகமாக கொண்டவன் என மற்றொரு பொருளுமாக விரியும்.
மைந்தன் – மகன், இளைஞன், விலங்கு ஊர்வனவற்றின் குட்டி, மாணாக்கன், ஆண்மகன், வீரன், கணவன்
பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான் கங்கை யார்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து – திருக்கருவூரானிலை திருத்தலத்து இறைவனின் வடிவழகை உரைக்கும் பாடல்.
பதவுரை
திருக்கருவூரானிலை எனும் திருத்தலத்தில் உறையும் தலைவனும் இறைவனும் ஆனவர் தாமரை போன்ற திருவடிகளை உடையர்; தம்முடைய திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர்; ஆலகால விடம் தாங்கியதால் நீல மணி போன்ற கண்டத்தினை உடையவர்; ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வரும் கங்கையைத் தாங்கியவர்; அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை கொண்டவர்.
விளக்கஉரை
• திருக்கருவூரானிலை எனும் கொங்கு நாட்டுத் திருத்தலம் • பங்கயம் – தாமரை • பாதி ஓர் மங்கையர் – அர்த்தநாரீச்சுரர் • வான் கங்கையர் – ஆகாச கங்கையை அணிந்தவர் • அம் – அழகு • ஆடு அரவம் – ஆடுகின்ற பாம்பு
கருத்து – சிவபெருமான் இருபத்து ஐந்து திருமேனிகளில் ஒன்றான லிங்கோத்பவர் வடிவம் கொண்டு நின்ற பெருமையை கூறியது இப்பாடல்.
பதவுரை
திருமால், நான்முகன் ஆகியோர் முறையே நீண்டதானதும், வெற்றி பெற்றவர்கள் அணியக் கூடியதுமான கழல் கொண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேடி நின்ற போது, அளவிட இயலாத அளவு நீண்டு எரிவது போன்றதான திருமேனியனாய் நீண்டவனும், பாலால் அபிடேகம் செய்யப்பெற்றவனும், அழகிய புகலி என்றும் திருப்புகலி அழைக்கப் பெறும் திருத்தலத்தில் ஆடி உறைபவனும் ஆகிய நல்ல பண்பினை உடையவன் நமக்கு நன்மைகள் செய்பவன்.
கருத்து – ஈசனின் பெருமைகளையும், அவன் வீற்றிருக்கும் திருப்புனவாயில் திருத்தல பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
ஊக்கம் மிகுந்தவனும் செருக்குடைய மனம் உடையவனும், வேல் வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு செய்தவனும், அழகும், பெருமையும் ஊடைய கயிலை மலையால் வீற்றிருந்து அருளும் சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடமாவதும், பழமையான அவனுடைய புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகு பெறுமாறு விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமானதுமான திருத்தலம் திருப்புனவாயில் ஆகும்.
விளக்கஉரை
புனம் – காடு
வேலன் – இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு எனவே வேலன்
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை தன் திருமேனி முழுதும் பூசியவனும், அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்றுமாறு இருப்பவனும், மான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கைகளைக் கொண்டவனாக, நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
விளக்கஉரை
ஆன் முறையால் – பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட,
அணியிழை – உமாதேவியார்
விபூதி தயாரிக்கும் முறை ஆகிய (சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி,2. அனுகற்ப விதி, 3. உப கற்ப விதி படி தயாரித்தல்.
கற்ப விதி – பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்டி, அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுதல்.
அனுகற்ப விதி – காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
உப கற்ப விதி – காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு -11-Feb-2019
மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.
விளக்கஉரை
திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
மயக்கம் கொண்டு நெஞ்சமே! பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.
விளக்கஉரை
உணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.
கொங்குநாட்டுத் திருத்தலங்களில் முதல் மூவராலும் பாடப்பெற்ற தலம்.
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் ஐந்து மணிகளில் வைரமணி இது (மற்றவை சிவப்புமணி திருவண்ணாமலை, மரகதமணி திருஈங்கோய்மலை, மாணிக்கமணி திருவாட்போக்கி, நீலமணி பொதிகைமலை)
மிகவும் குட்டையான திருமேனியும், சதுர வடிவும் ஆன ஆவுடையாரில் சிகர வடிவும், அகத்தியர் விரல் தழும்பும் கொண்ட திருக்காட்சியுடன் மூலவர்.
மூலவர், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கிய திருக்காட்சி
சுந்தரர் நமச்சிவாய திருப்பதிகம் பாடிய தலம்
பாண்டியமன்னனின் விரல்கள் வளர்ந்து அவனது குறைநீங்கிய தலம்
சித்திரை பௌர்ணமி தினத்தில் பரத்வாஜருக்கு சிவன் முயலகன் இல்லாமல் குஞ்சிதபாத நடராஜராக சதுர்முகதாண்டவக் கோலத்தில் காட்சியளித்த தலம்.
காவிரி கண்ட விநாயகர் சந்நிதி
திருவடியில் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு பதிலாக ஒரே ஒரு முனிவர் மட்டும் கொண்டு, ஜடாமுடி மற்றும் ரிஷபத்துடன் திருக்காட்சி கொண்ட தட்சிணாமூர்த்தி
திசை மாறியுள்ள மயிலுடன் கூடிய சுப்பிரமணியர் வடிவம்
தல விருட்சமான மிகப்பெரிய வன்னிமரத்தினடியில் பிரம்மா மூன்று முகங்கள் கொண்ட திருகாட்சி
பூக்கள் பூத்து, காய் காய்க்காது இருக்கும் வன்னி மரத்தின் பூக்கள், ஒருபக்கம் முள்ளுடனும் , மறுபக்கம் முள் இல்லாமலும் கொண்ட தோற்றம்; எத்தனை நாட்கள் நீரில் இட்டாலும் கெடாத தன்மையை தரும் வன்னிமர இலைகள்
கோரப்பற்களுடன் கூடியதும், வாலில் மணி கட்டப்பட்டுள்ளதும் ஆன ஆஞ்சநேயர்
காவிரியாற்றின் நடுவிலுள்ள அகத்தியர் பாறையில் விநாயகர் காக வடிவில் அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்து காவிரியை பெருகச் செய்த திருத்தலம்
பிரம்மன் வழிபட்ட தலமாதலால் பிரம்மபுரி
திருமால் வழிபட்டதால் அரிகரபுரம்
கருடன் வழிபட்டு தேவலோகம் சென்று அமுதம் கொண்டுவரும் வலிமைபெற்ற தலமாதலால் அமுதபுரி
காலை ௦6:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:3௦ வரைஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
கொடுமுடி, ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம்.
PIN – 638151. 04204-222375
பாண்டிக்கொடுமுடி இறைவனானவர், இந்திரன் மற்றும் ஏனைய தேவர்கள் பலரும் போற்றி துதிக்குமாறு நிற்பவர்; மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் வருந்துமாறு செய்து பின் அருள் செய்தவர்; கரிய நிறமுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினை உடையவர்; அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை காற்றில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 48
திருமுறை எண் 8
செம்மை நிறம் ஒத்த சடையை உடையவனே , திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தவனே, காவிரி ஆற்றின் கரையில் உள்ள சோலைகளில் கிளைகளின் மேல் அமர்ந்து குயில்கள் கூவவும், சிறந்த மயில்கள் ஆடுகின்றதும் ஆன ‘திருப்பாண்டிக்கொடுமுடி’ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனாகிய சிவனே, உன்னை நான் மறந்தாலும், என் நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால் காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.
விளக்கஉரை
காட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது
தண்ணுமை (மிருதங்கம்)
இது தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;
இதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்
‘மதங்கம்’ – பழந்தமிழ்ச் சொல் திரிந்து ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்
இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)
புகைப்படம் : விக்கிப்பீடியா
பாடல்
துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.
உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு நடனம் புரிபவராகவும், அடியவர்களின் துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.
விளக்கஉரை
உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.