பாடல்
மூலம்
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே
பதப்பிரிப்பு
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கை வைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் பெருமைகளைச் சொல்லி உடல் அழிவதற்கும் முன்னமே தன்னைக் காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.
பதவுரை
தெய்வீகம் பொருத்தியதும் அழகானதும் ஆன மலையாகிய திருச்செங்கோட்டில் வாழக்கூடியவரான செழுமையான சுடர் போன்றவரே, கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்டு வானில் வாழ்பவர்களுக்கு தலைவனாகவும் தெய்வமாகவும் இருப்பவனே! உன்னை மறவாமல் இருக்கும் பொருட்டு ஐவர் எனப்படுபவர்களாகிய பஞ்ச இந்திரியங்கள் கொண்டும் அதனுடன் இரண்டு காலகளையும், இரண்டு கைகளையும் ஒட்டியதான இந்த உடம்பு எனும் வீடு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக.
விளக்க உரை
- வை – கூர்மை