பாடல்
முட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும்
எட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய்
வட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த
சட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
பூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.
விளக்க உரை
- எட்டுணை – எள்ளளவு
- சட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை