பாடல்
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே
நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
பதவுரை
புவனத்தினை தோற்றுவிக்கும் போது அந்த உலகங்கள் எல்லாமாகியும், உலகில் இருந்து வேறுபட்டவனாகவும், உடலில் உயிர் சேரும் போது ஓங்கிய அறிவொளி எனப்படும் சக்திரூபமாக பிரகாசமாகவும், அவன் விளையாட்டை பற்றி அலகிலா உயிர்களானது, கன்மத்தினை பற்றி செலுத்தி, அந்த உயிர்களனது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழிலினை செய்யும் போது அவ்வைந்தொழிலை நடத்தும் பதிரூபமாகியும், ஐந்தொழிலின் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு தொழிலை செய்பவனாய், அதன் பலன்கள் தன்னை அடையாதவனாய், எவ்விடத்திலும் தானே மலம் அத்தன்மைகளின் வேறாய் அவற்றோடு அதன் தன்மையதாய், எவ்விடத்தும் தானே இயல்பான சுயம்பிரகாசரூபம் உடையவனாய் நிற்பன்.
விளக்க உரை
- எல்லாவற்றிலும் தோய்ந்த போதும் தானே சுயம் பிரகாசமாய் நிற்கும் தன்னுண்மையினை சிவமெனவும், ‘உலகெலாமாகி வேறாயுடனுமாய்’ இவ்வாறு உயிர்களின் வழி நிற்கும் தன்மையில் சத்தியெனவும் சிவாகம் நூல்கள் கூறும்.