ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – கோணுதல்
பொருள்
- வளைதல்
- கோணலாயிருத்தல்
- நெறிபிறழ்தல்
- மாறுபடுதல்
- வெறுப்புக் கொள்ளுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;.
அகஸ்தியர் ஞானம்
கருத்து உரை
அறியப்பட வேண்டிய ரகசியமான விடையை அறியாமல் அலைந்தவர்கள் கோடான கோடி பேர்கள். அறியப்பட வேண்டிய ரகசியமான விடையை அறிந்து காரணத்தை அறிந்தவர்கள் கோடான கோடி. வீணாக அதைப்பற்றி புலம்புவதால் அது பற்றி அறிய இயலுமோ? ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்களாகிய விஞ்ஞானகலர் பேசுவது எவ்வகையினில் உதவும்? (உதவாது என்பது முடிவு). எந்த விதமான தடுமாற்ற சிந்தனையும் இல்லாமல் ஒரு நினைவாய் சூரிய, சந்திரக் கலைகளைக் கூட்டி இடைவிடாமல் சுழுமுனை நாடியில் மனதை வைத்து காக்கும் பொழுது சூரியக் கலையாகிய பன்னிரண்டு உதிக்கும். இதை உபதேசமாகக் கொண்டு நிலைத்து நில்.
விளக்க உரை
- நாலைச் சேர்த்து – வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை
- எட்டு – சிவ நிலையான யோகாக்கினி
- யோகாக்கினி மூலம் கர்மாவை எரியச் செய்து, ஞானத்தை அடைதல்
- இதுவே சக்தி நிலை. இந்த நிலைக்கு பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமான சந்திர கலையை அடையலாம். இதுவே ஆனந்தமயம்.
- குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து – பாதம் இரண்டு, நான்கு, மற்றொரு நான்கு என மொத்தம் பத்து. பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற பத்து வாயுக்கள் தச வாயுக்களைக் குறிக்கும் அவைகளை அடக்கி நெறிப்படுத்தி சுழுமுனை நாடியில் மனதை வைத்து காக்கும் பொழுது அறியப்பட வேண்டியவைகளின் விடைகள் தெரியவரும் என்பதும் மற்றொரு பேதம்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவப்பிரகாசத்தை அருளியவர் யார்?
உமாபதிசிவம்
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)