ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்
நல்வழி – ஔவையார்
கருத்து – முற்பிறவியில் செய்த வினைகளை ஒத்தே இந்தப் பிறவியில் செல்வம் சேரும் என்பதை விளக்கும்பாடல்.
பதவுரை
உலகில் இருப்பவர்களே கேளுங்கள்! பொருளை சம்பாதிப்பதற்காக கணக்கில் அடங்காத முயற்சிகள் செய்தாலும் செய்த வினையாகிய ஊழின் அளவே பொருள் ஈட்டுதல் கைகூடும்.அதற்கு மேல் நினைத்தாலும் செல்வம் சேராது. தேடிய செல்வத்தைக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்யும் உலக மக்களே! அந்தச் செல்வம் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில் அடுத்திடர் தொலைப்பம் என்றால் ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச மாட்டும் வகையல்லாமலே தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது தன் வழியிலே இழுத்துத் தள்ளுதே பாழான கோபமும் அடங்காது தன்னரசு நாடு செயுதே! இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ தெப்படி பிழைப்பதம்மா? இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து இணை மலர்ப்பதம் அருளுவாய் வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே விரிபொழிற் திருமயிலை வாழ் விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி விமலி கற்பகவல்லியே
ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம் – திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்
கருத்து – துன்பங்களில் உழலும் தன்னை அதனிடத்தில் இருந்து காத்து அருள வேண்டி விண்ணப்பம் செய்யும்பாடல்.
பதவுரை
திருமயிலையில் வீற்றிருந்து மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு துணையாக இருக்கும் கற்பகவல்லியே! சித்தமானது மாறுபாடு இல்லாமல் இருக்கும் பரிசுத்தர்களை அடைந்து அவர்கள் மூலமாக துயரத்தை தொலைக்க எண்ணும் போது ஆசை, மாயை, கன்மம் எனும் மூவகைப் பேய்கள் பிடித்து ஆவேசமாக ஆட்டுகின்றது; குதிரையினை ஒத்தமனமானது எத்தனை நல்விஷயங்களை உரைத்தாலும் அதனைக் கேளாமல் தன்னுடைய வழியிலே இழுத்து தள்ளுகிறது; அத்துடன் தீமை தரத் தக்கதான கோபமும் அடங்காது எவருடைய வார்த்தையும் கேளாமல் தானே ஆட்சி செய்கிறது; இவ்வாறு அனைத்தும் துன்பம் தருமாறு இருக்கும் நிலையில் எவ்வாறு வழிபாடு செய்து வினைகளைக் குறைத்து பிழைக்கமுடியும்? எனவே நீ இனியாவது உன்னுடைய கடைக்கண் பார்வை தந்து என்னுடைய வினைகளைத் தீர்த்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் மலர் போன்ற பாதங்களை அருளுவாய்.
இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – சுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.
பதவுரை
திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை ஊர்தியாக அளித்து அருளச் செய்தான். அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’ என்னும் பெயரினை உடையவன் என்றும் திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.
கருத்து – ஈசனின் வடிவத்தினையும், அவனின் செயற்கறிய செயல்களையும் கூறி அவனை நினைந்து வாழமுடியாது என உரைக்கும் பாடல்.
பதவுரை
படம் எடுத்து ஆடும் பாம்பினை கட்டியவனும், பிரம்ம தலையாகிய கபாலத்தினையும், மான் குட்டியினையும் கையின் கொண்டவனும், மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு ஆகிய சர்வசங்கார நிலையில் சுடுகாட்டினை விருப்பமுடன் உறையும் இடமாகக் கொண்டு அந்த இடுகாட்டில் ஆடுவானும், கல்வியினால் அறியப்பட வேண்டியவற்றை உணர்ந்தோராகிய பெரியோராகிய சிட்டர்கள் வாழும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?
அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம் ஆதிமணிச் சோதிநிற மான வாலை விரிவான ராஜலிங்க சுரூப மாகி வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச் சரியான நடுவணையிற் பருவ மாகி சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம் குறியான பதியறிந்து குறியைக் கண்டு கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே
அருளிய சித்தர் : அகத்தியர்
கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும் பாடல்
பதவுரை
மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து அம்பலத்தில் ஆடினேன்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.
செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம் செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம் இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம் எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே
அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்
கருத்து – சித்தர்கள் செய்யக்கூடிய சில அரும் செயல்களைக் கூறும் பாடல்
பதவுரை
நாகமே! உரைக்கக் கூடியதாகிய மூன்று உலகங்களையும் சிறப்புடைய பொன்னால் உடையதாக ஆக்குவோம்; வெப்பம் தரும் சூரிய கதிர்களை குளிர்ச்சி தரக்கூடியதாகிய சந்திர ஒளியாக மாற்றிச் செய்வோம்; பரந்து பட்டதான இந்த உலகத்தினை இல்லாமல் மறைப்புச் செய்வோம்; இப்படிப்பட்ட செய்யக்கூடிய சித்தர்களாகிய எங்களில் வல்லமையையக் கண்டு நீ ஆடுவாயாக.
கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை சிலேடையாக வினவும் பாடல்.
பதவுரை
வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?
விளக்கஉரை
சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும் அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும் எனும் பொருள் பற்றியது.
எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய் இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர் அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!
அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்
கருத்து – ஈசன் அனைத்தும் ஆகியும் அதில் இருந்து தனித்து இருக்கும் முறையை உரைக்கும் பாடல்.
பதவுரை
இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்கள் ஆகியும் (84 லட்சம் வகை யோனி பிறப்புகள்), நாம் வாழும் பூலோகம் விடுத்து புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்யலோகம் ஆகிய மேல் உலகங்கள், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் ஆகிய கீழ் உலகங்கள் அனைத்தையும் படைப்பவனாகவும் அதனில் இருந்து தனித்து நிற்பவனாகியும், அனைத்துக்கும் வெளியில் தனித்து நிற்பவனாகி திருவிளையாட்டினை நிகழ்த்துபவனாகவும், பின்னர் அவ்வாறான அந்த உயிர்களாகவும், அந்த உலகங்களாகவும் ஆதியாகவும் இருக்கும் பேரானந்தத்தைக் கண்டு பாம்பே ஆடுவாயாக
கருத்து – ஞானத்தின் உயர் நிலையில் உலகப் பற்றுக்கள் நீங்கும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
கற்றவர்களும், உடன் இருப்பவர்களும், 96 தத்துவங்களும் உற்றாரும் சுற்றமும் குடும்பமும் நித்யம் என்றிருந்தேன். உற்றாரும் சுற்றமும் குடும்பமும் இந்த ஊரை விட்டுச் செல்கையில் எந்த விதமான சுற்றமும் இல்லாமல் துணை இழந்து நின்றேன்.
விளக்கஉரை
கற்ற மெய்ஞானம், உடல் மனம் சார்ந்து அடையும் 96 தத்துவங்கள், தான் உடல் பெறுவதற்கு முன் செய்த வினைகள், உடல் எடுத்தப்பின் செய்யும் வினைகள் ஆகிய அனைத்தும் ஞானம் அடையிலே பற்றுக்கள் அனைத்தும் எனை விட்டு சென்றதென்ன என்று பொருள் உரைப்பாருல் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஈயாமல் இருந்துவிட்டால் வுகமுங் காரு ஏற்றபடி பணிவிடைகள் எல்லாம் செய்து செய்யாதே அணுவளவும் பொய் பேசாதே தினந்தொறும் கால் கடுக்க நின்று காரு ஆயாவே முகம்பார்த்துச் செபமே பண்ணு அன்றாடம் உண்கிறதில் மூன்றில் ஒன்று மேயாக ஐயருக்குப் பங்கிட்டீவாய் வேண்டினது நீ கொடுத்தும் இன்னங்கேளே
அருளிய சித்தர் : அகத்தியர்
கருத்து – ஆஸ்ரமத்தில் வாழும் சீடருக்கான விதி இது என்றும், தனது குரு கேட்பவை அனைத்தையும் வழங்கி இந்த அறிவைப் பெறவேண்டும் அகத்தியர் உரைக்கும் அகத்தியர் மெய்ஞானப் பாடல்.
பதவுரை
குருவுக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்தும், கால் கடுக்க நின்றும், அவரிடத்தில் எந்த விதத்திலும்(மனம், மொழி, வாக்கு) பொய்யினை பேசாமல் மெய்ஞானத்தில் கூறியுள்ளவற்றை குரு உரைக்க அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை எனில் அவன் ஒரு யுகமளவு காத்திருக்கவேண்டும்; அந்த சீடன் எப்பொழுதும் மெய் தேடலில் விருப்பம் கொண்டு தனது குருவின் முகக் குறிப்பை அறிந்து இந்த மெய்யறிவைத் தொடர்ந்து வேண்ட வேண்டும்; யாசித்து பெற்ற பிக்ஷையின் மூலம் உணவைச் சேகரிக்கும் சீடன் அதில் மூன்றில் ஒரு பங்கை குருவுக்கு அளிக்கவேண்டும்.
தருமை ஆதீன முதல் குருமூர்த்திகளாகிய ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் – சொக்கநாத வெண்பா
கருத்து – சொக்க நாதருக்கு பணி செய்யவும், நினைவு அகலாமல் இருக்கவும் அவரிடம் விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
மனக்கவலையையினை நீக்குவதான தென்மதுரையில் வீற்றிருந்து அருளுபவனும், இயல்பாகவே தூய்மை உடையவனும் ஆனவனே, படைக்கப்படும் உலகம் அனைத்தையும் தோற்றுவிக்கும் சொக்க நாதனே! உனக்கு பணி செய்யவும், உன்னுடைய நினைவு அகலாமல் எப்பொழுதும் உன்னுடைய நினைவு கொண்டிருக்கும் வரத்தினை நீ அருள்வாயாக.
கருத்து – இறைவனின் மகிமையை அறிந்தவரின் அக அனுபவங்களை விளக்கும் பாடல்
பதவுரை
பிள்ளை பெறுவது வலி தரும் காரியம் என்பது பெற்றவளுக்கு மட்டுமே தெரியும், பிள்ளை பெறாதவளுக்கு அந்த பிரசவ வலி எப்படித் தெரியும்; அது போல இறைவனின் பெருமையை உணர்ந்து பேரானந்தம் கண்டவர்களின் கண்களில் இருந்து எவ்வித முனைப்பும் இன்றி தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கும்; இறைவனின் பெருமையை உணராதவர் நெஞ்சம் கல்லினை ஒத்து இருக்கும்
கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்
பதவுரை
கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும், கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும் ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?
விளக்கஉரை
மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள், சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந் தன்னால் தெரியும் எனவேதான் நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே
அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்
கருத்து – தவநிலையை அறிந்தவர்கள் நவசித்தர்கள் என்பதை உரைக்கும் பாடல்
பதவுரை
மனமாகிய ஆனந்தப் பெண்ணே! எது தவம் என்பதையும், அதன் நிலை என்ன என்பதையும் அறிந்தவர்களுக்கு மெய்ஞானம் தன்னால் தெரியும். இவ்வாறு நவசித்தர்கள் கண்டு தெளிந்தார்கள் என்பதை நன்றாக அறிவாயாக.
கருத்து – பஞ்சாக்கர மந்திரத்தினை அதன் பொருள் பற்றி உரைப்போர் அதன் பொருளைக் காண்பார் என உரைக்கும் பாடல்
பதவுரை
தலையாகிய அண்டமாகிய சிவலோகத்திற்கு உரியவனும், ஆதிரை நட்சத்திற்கு உரியவனும், ஆலகால விஷத்தை உண்டதால் கரிய கண்டத்தை உடையவனும், செம்மை உடைய பொன் போன்ற திருவடிகளை உடையவனும் ஆன சிவபெருமானுக்கு உரித்தானதான தலையான மந்திரமாகிய பஞ்சாக்கர மந்திரத்தினை பற்றிக் கொண்டு அதன் பொருள் பற்றி தியானித்து தலை தாழ்த்தி வணங்குபவர் அந்த மந்திரத்தின் பொருளைக் காண்பர்.
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம் பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயி என்றே சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற் கேறவிலையோ? தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ தீனரக்ஷகி அல்லையோ? ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை ஆதரிப்பவர் சொல்லுவாய் ? அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல் அடியனை ரக்ஷி கண்டாய் மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரிபொழிற் திருமயிலை வாழ் விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி விமலி கற்பகவல்லியே
திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்
கருத்து – அன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே, விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ? வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ? மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக
கருத்து – யோக முறையில் ஆறு ஆதாரங்களைக் கடந்து செல்கையில் பிரம்மத்தினை உணரலாம் என உரைக்கும் பாடல்.
பதவுரை
மிகச்சிறியதான ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளானது ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இந்த உலக வடிவம் கொள்கிறது; இவ்வாறு ஒரேழுத்து கொண்டு பிரமமாகி நமக்குள் இருக்கும் மெய்ப்பொருளை அறிந்து கொண்டு, யோக முறையில், வாசியை ஏற்றி இறக்கி அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிரம்மத்தினை காணுமாறு செய்தால் நீங்களே அந்த பரப்பிரம்மம் ஆவீர்கள்.
கருத்து – சிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.