அமுதமொழி – சோபகிருது – வைகாசி – 11 (2023)


பாடல் 2

உரிப்பொருள் : பிரபஞ்ச மாய சேற்றினை விலக்கி அருளிய திறம்

மூலம்

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே

சொற் பிரிப்பு

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே

பதவுரை

குமரப் பெருமானே! அடர்ந்ததும்,  செம்மை நிறம் உடையதுமான சடையின்மீது கங்கை நதியையும்,நாகத்தையும், கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவராகிய திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குபவரே! முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேனை, பிரபஞ்சம் என்னும் மாயச் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்!

விளக்க உரை

  • பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை ஆகிய சஞ்சீதம் கர்மாவின் தொடர்ச்சியாகிய நற்பேறு. தவம் என்பது இந்தப் பிறவியில் செய்வது.
  • அடவி – காடு
  • ஆறு – கங்கை
  • பணி – பாம்பு
  • இதழி – கொன்றைப் பூ
  • தும்பை – தும்பைப் பூ
  • அம்புலியின் கீற்று – சந்திரனின் பிறை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – வைகாசி – 9 (2023)


பாடல் 1

உரிப்பொருள் : கணபதி தம்பியான முருகனின் தரிசனம் கண்டது

மூலம்

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

சொற் பிரிப்பு

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே

பதவுரை

திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில்  குட்டிக் கொண்டும், அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும்  ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.

விளக்க உரை

  • அடல்-வீரம்.
  • திரு-திருமகள் விலாசம்
  • கடம்-மதம்.
  • தடம்-மதம் பிறக்கும் இடம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 2 (2020)


பாடல்

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே

கந்தர் அலங்காரம் – அருணகிரி நாதர்

கருத்து – முருகப் பெருமானிடத்தில் ஐம்பொறிகள் வழி செல்லும் அவாவினை அறுத்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அமரர்கள் ஆகிய தேவர்களின் துன்பம் நீங்குதல் பொருட்டு, வஞ்சனையும் கொடூரமும் பொருந்திய சூரனை,அவனுடைய  கார் மேகம் போன்ற கரிய நிறமுடைய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான கூலாயுததை செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அவனை அழித்தவரே! ஐம்புலன்களாகிய ஐவரும், தேவரீரின் திருவடிப் பெருமைகளை ஆராய விடமாட்டாதவர்களாகவும், உலகின் ஒரே பரம் பொருளாகிய தேவரீரை நினைக்க விடமாட்டாமலும், பூசிக்க தக்க மலர்களால் தங்களை அர்ச்சித்து, தேவரீரின் மலர் போன்ற திருவடிகளைச் சென்று அடைய விடமாட்டாமலும் செய்கின்றனர்; அடியேன் என்ன செய்வது?

விளக்கஉரை

  • உய்தல் – உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல், தப்புதல்
  • கட்டாரி – குத்துவாள், வாள், சூலம், எழுத்தாணிப்பூண்டு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 8 (2020)


பாடல்

பத்தியால் யானுனைப் …… பலகாலும்
     பற்றியே மாதிருப் …… புகழ்பாடி
முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் …… கருள்வாயே
உத்தமா தானசற் …… குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் …… கிரிவாசா
வித்தகா ஞானசத் …… திநிபாதா
     வெற்றிவே லாயுதப் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.

பதவுரை

உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால்  யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி  அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.

விளக்க உரை

  • முத்தன் – முத்திபெற்றவன், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்[சிவபிரான்], திருமால், வைரவன், அருகன், புத்தன்
  • ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன ரத்தினகிரியின் பிற பெயர்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 18 (2020)


பாடல்

அந்தோமன மேநம தாக்கையை
   நம்பாதெயி தாகித சூத்திர
      மம்போருக னாடிய பூட்டிது …… இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
   பஞ்சாடிய வேலவ னார்க்கிய
      லங்காகுவம் வாஇனி தாக்கையை …… ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
   மிந்தாமயில் வாகனர் சீட்டிது
      வந்தாளுவம் நாமென வீக்கிய …… சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
   வந்தார்மத மேதினி மேற்கொள
      மைந்தாகும ராவெனு மார்ப்புய …… மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
   தந்தாதன னாதன தாத்தன
      செம்பூரிகை பேரிகை யார்த்தெழ …… மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
   சங்காரசி காமணி வேற்கொடு
      செண்டாடிம காமயில் மேற்கொளு …… முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
   கங்காளமி னார்சடை சூட்டிய
      என்தாதைச தாசிவ கோத்திர …… னருள்பாலா
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
   நன்பூமண மேவிசி ராப்பளி
      யென்பார்மன மேதினி நோக்கிய …… பெருமாளே.

திருப்புகழ் (சிராப்பள்ளி) – அருணகிரிநாதர்

கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று  உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.

பதவுரை

திந்தோதிமி தீதத என்று பெரிய  ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த  இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும்  துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து  இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?

விளக்க உரை

  • சிராப்பளி – திருசிராப்பள்ளி திருத்தலம்
  • போருகன் – பிரம்மன்
  • ஆர்ப்பு – பேரொலி, சிரிப்பு, மகிழ்ச்சி, போர், மாத்திரை கடந்த சுருதி, கட்டு, தைத்த முள்ளின் ஒடிந்த கூர்
  • கங்காளம் = ஒரு பெரிய பாத்திர வகை, முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 4 (2020)


பாடல்

மூலம்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே

பதப்பிரிப்பு

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்
உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்
உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்
உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து – அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது பற்றியும், பார்வதியின் புத்திரன் என்பது பற்றியும் விளித்து அடைக்கலம் புகுந்தேன் என்று குறிப்பிடும் பாடல்.

பதவுரை

கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்றதும், பசு இனங்கள் வாழ்கின்ற இடமானதும், முல்லை நிலத்திற்கு தலைவனாகிய திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும் உவர்ப்புமுடைய கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கி அழித்த தெய்வமே,  ஆட்டு வாகனத்தில் ஏறும் உஷ்ணத்தை உடைய அக்கினியின் சொரூபமாகவும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் அழகியதும் அஞ்சனம் தீட்டி செவிகளை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு ஆன விழிகளின் கிருபைக்கும் ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்கிற பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

விளக்க உரை

  • ஆசு – குற்றம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 13 (2020)


பாடல்

மூலம்

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே

பதப்பிரிப்பு

வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் திருவடிபற்றி சும்மா இருத்தல் எனும் அநுபூதி நிலையினை வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

காலத்தால் முற்பட்டதாகிய வேதங்களாலும், சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமங்களாலும் துதிக்கப்படுகின்றவனும், அழகிய வேலை ஆயுதமாக கொண்டவனும், மலர்ந்த வெட்சிப் பூக்கள் போன்ற தண்டையை அணிந்த செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய முருகப் பெருமானை  காவலாகக் கொண்டு, தந்திரங்கள் அற்று இரகசியமாகவும் உபாயங்களாலும் அறியக்கூடியதும், இரவும் பகலும் இல்லாது ஆன பரவெளியில் கரைந்து சும்மா இருத்தல் எனும் அநுபூதி நிலையில் நிலைத்து நிற்கும் பொருட்டு இனியாவது வருவாயாக மனமே.

விளக்க உரை

  • வேதங்களாலும், ஆகமங்களாலும் துதிக்கப்படுபவன் என்பவை முருகப்பெருமான காலத்தால் முற்பட்டவன் என்பதை விளக்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 28 (2020)


பாடல்

மூலம்

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே

பதப்பிரிப்பு

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் அருள் தானாகவே வெளிப்பட்டு அருளும் திறத்தைக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னிச்சையாக செல்லும் மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்யுங்கள்; கோபத்தையும், வெறுப்பையும் அறவே விட்டு விடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்;  புறத்தில் அசைவற்று இருப்பது போலே அகத்தில் அசைவற்று இருங்கள்; இவ்வாறு செய்தால் மிகக் கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடைய தம்பியாகிய தாருகன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து அது துகளாகி பட்டு அழியும் படி கூர்மையான வேலினை விடுத்து ஏழு உலகங்களும் பிழைக்குமாறு அருளிய தனிப் பெருந்தலைவனாகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.

விளக்க உரை

  • வெகுளி – கோபம், வெறுப்பு, கள்ளங்கபடம்/விகல்பம் அற்றவர்; அப்பாவி
  • எழு பாரும் உய்ய – ஏழ் உலகும் உய்ய
  • கொடும் கோபச் சூருடன் – கோபம் கொண்ட சூரனையும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 25 (2020)


பாடல்

மூலம்

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே

பதப்பிரிப்பு

வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – தனது சாயல் தனக்கு உதவாது போல் செல்வம் உதவாது என்பதை உரைத்து முருகப்பெருமானை துதிக்கச் சொல்லும் பாடல்.

பதவுரை

இந்த உலகில் வெய்யில் காலத்தில் ஒதுங்கி நிற்கக் கூட உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல தனது இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருள் எனப்படுவதாகிய செல்வமும் துணை செய்ய மாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே செல்வத்தின் நிலையாமைக் கண்டு கொண்டும் உணர்ந்து கொண்டும் கூர்மையானதும் ஒளி வீசும் படியாகவும் அழகானதுமான வேலையுடைய திருமுருகப் பெருமானைத் துதித்து வினையின் காரணமாக தரித்திரனாக இருப்பவனுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள்.

விளக்கஉரை

  • வை – வைக்கோல், வைக்கவும், கூர்மை
  • வறிஞன் – தரித்திரன்
  • வடி – அழகு
  • வெறு நிழல் – பயன்படாத நிழல்
  • அரிசில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டதான நொய்யுணவாக உண்பவராக இருந்தாலும் பகிர்ந்து உண்ணுங்கள். வறுமை இருப்பினும் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்துகிறது.
  • தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்‘ எனும் திருமந்திரப் பாடல் வரிகளுடனும் (செல்வம் நிலையாமை), ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே‘ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 7 (2020)


பாடல்

மூலம்

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே?

பதப்பிரிப்பு

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – முருகப் பெருமானின் வடிவ அழகினையும், அவனின் ஆயுதங்களையும் பற்றி பேசாமல் பெண்ணாசையில் வீழ்ந்து இருப்பின் முக்தி அடைய இயலாது என்பதை கூறும் பாடல்.

பதவுரை

ஏ மனமே! திருச்செந்தூர் திருமுருகப் பெருமானின் திருக்கையில் விளங்குவதும் எப்பொழுதும் வெற்றியைத் தருவதுமான வேலாயும்  என்று சொல்லாமலும்; வெற்றியைத் தருவதாகிய மயில் என்று சொல்லாமலும்; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்று சொல்லாமலும் அவைகளைப் பற்றி புகழாமலும் பெண்களில் சொற்கள் பால் போன்று இருக்கிறது என்றும், அவர்கள் பாதங்கள் பஞ்சைப் போன்று மென்மையாக இருக்கிறது என்றும், அவர்களின் கண்கள் மீனைப் போன்று இருக்கின்றன எனவும் சொல்லித் திரிகின்றாய்; ஆதலால் நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனம்?

விளக்க உரை

  • கொற்றம் – வெற்றி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 29 (2020)


பாடல்

மூலம்

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே

பதப்பிரிப்பு

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

எல்லா காலங்களிலும் வெற்றியை தரும் வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம்முடைய திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு எப்பொழுதும் நன்மையைத் தருகின்ற பெருமாளும், அசுரர் கூட்டம் அழியும்படி அக்கூட்டத்தை தூளாகச் செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள்,  தாண்டமுடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்க கூடியதான வறுமைப் பிணியால் வேதனைப்பட மாட்டார்கள்.

விளக்க உரை

  • சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகப் பெருமான். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை ஆனதால் மாயைக்கு குக மாயை என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான காரணம் மாயையே என்பதாலும் படைப்புத் தொழிலை செய்தவன் என்பதாலும் முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள்.
  • அவுணர் – அசுரர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 22 (2020)


பாடல்

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
     சிவவழி யுடனுற் றேக …… பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுர மெரியத் தீயி …… னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
     யிருள்கதி ரிலிபொற் பூமி …… தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
     ரிளையவ னெனவித் தார …… மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
     பழமறை பணியச் சூல …… மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர்விட் டாடி …… அடியார்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
     மருள்செயு முமையிற் பாக …… ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
     டடியவர் கயிலைக் கான …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்துவினை நீக்கம் செய்து முருகப் பெருமானும் ஒன்று சேர்தலை விரும்பி தெரிவிக்கும் பாடல்.

பதவுரை

சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடு ஆகுமாறு ஒலிக்கும்படியாக, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும் மற்றும் பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்தி உள்ள சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருக்காமல் நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றியும் ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகத்தினை உடையவராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், திருமகள் போன்றவளுமான வள்ளியுடன் கூடுதலை விரும்பியும் அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் உரித்தான பெருமாளே! பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை ஆகிய மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை செலுத்தி, சிவ நெறியில் நின்று, தனித்து  மேலிடத்தே நிற்கும் சிவ ஜோதியை திருமணம் செய்து ஒன்று கூடுதல் போலக் கூடி, பிறவி தோறும் தொடர்ந்து விளங்கி நிற்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மலங்களும் உனது புன்னகையால் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபாடு கொண்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அத்தகையக் கலப்பால் இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் புதுமையானவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக.

விளக்க உரை

  • இலி – இல்லாதவன், இல்லாதவள், இல்லாதது, இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
  • திரு ஒளி – ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்
  • காலின் இருவழி அடைபட்டு ஓடி – (கால்-பிராணவாயு) இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே செல்லும் பிராணவாயுவினை அடைத்து சுழுமுனை வழி மேலேற்றுதல்
  • சிவ வழியுடன் உற்று – சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்து கும்பித்து நிறுத்திச் செய்வதாகிய ஹடயோகம்
  • ஏகபர மீதே – கருவி கரணங்கள் யாவும் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அதற்கு அப்பாலாக இருக்கக் கூடியதான  ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.

தன்னம் தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே (கந்தர்அநுபூதி)

எனும் பாடலும் ஒப்பு நோக்கி அறிக.

  • பாவை மணம் என மருவி – சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வது போல்  இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லை எனினும்,  சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 19 (2019)


பாடல்

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளைக் கூறி அவரின் வேலும் மயிலும் இருப்பதால் அடியார்களான தங்களுக்கு மரணம் இல்லை என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

கிண் கிணிகள் ஒலிக்கும் படியான திருவடிகளை உடையவரும், இந்திரனின் துணைவியான சசி தேவி எனும் இந்திராணிக்கு மங்கல நாணினைக் காப்பாற்றி அருளியவரும் கருணைக்கு உறைவிடமானவரும், அறிவு வடிவமானவரும் ஆன தேவ சூரியனே! எந்நாளும் எங்களுக்கு துணையாக ஒளி படைத்த மயிலும் வேலும் இருப்பதால் துயரம் தரதக்கதான இறப்பு என்னும் அபாயம் தேவரீரின் அடியார்களாகிய எங்களுக்கு என்றும் இல்லை.

விளக்க உரை

  • ப்ரமாதம் – துயர நிகழ்வு
  • சசிதேவி – இந்திராணி
  • ரஷாபரணம் – ரஷையைத் தாங்கியவன்
  • கிருபாகரன் – கருணை உடையவன்
  • சுரபாஸ்கரனே – தேவர்களுக்கு ஒளி அளிப்பவன்
  • மரணப்ர மாதம் – மரண மயக்கம்
  • கிரணம் – ஓளியுள்ள
  • கலாபி – மயில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 16 (2019)


பாடல்

மூலம்

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே

சொற்பிரிப்பு

சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல்மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – முருகப் பெருமானின் வேலாயுதம், திருக்கரமும் துணையாக இருப்பதால் சூலாயுதத்தையும், பாசக் கயிற்றை கொண்டு வரும் காலனுக்கு அஞ்சமாட்டேன் எனும் பாடல்.

பதவுரை

பாற்கடலை கடையும் போது  தோன்றிய ஆலகால விடத்தை உண்டு உயிர்களை காத்து அருளிய சிவபெருமானின் திருக்குமாரனாகிய ஆறுமுகப் பெருமானுடைய வேலாயுதமும், அபயம் அளிப்பதான திருக்கரமும் நமக்கு ஒப்பற்ற  உண்மைத் துணையாக உளதால் சூலாயுதத்தைக் கையில் பிடித்துக் கொண்டும், பாசக் கயிற்றைச் சுழற்றிக் கொண்டும்  உயிர்களைப் பின்தொடர்ந்து வந்து அவர்களின் உயிர்களை எடுக்க வருகின்ற காலனுக்கு  அடியேன் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 28 (2019)


பாடல்

மூலம்

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

பதப்பிரிப்பு

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கை வைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளைச் சொல்லி உடல் அழிவதற்கும் முன்னமே தன்னைக் காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

தெய்வீகம் பொருத்தியதும் அழகானதும் ஆன மலையாகிய திருச்செங்கோட்டில் வாழக்கூடியவரான செழுமையான சுடர் போன்றவரே,  கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்டு வானில் வாழ்பவர்களுக்கு தலைவனாகவும் தெய்வமாகவும் இருப்பவனே! உன்னை மறவாமல் இருக்கும் பொருட்டு ஐவர் எனப்படுபவர்களாகிய பஞ்ச இந்திரியங்கள் கொண்டும் அதனுடன் இரண்டு காலகளையும், இரண்டு கைகளையும் ஒட்டியதான இந்த உடம்பு எனும் வீடு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக.

விளக்க உரை

  • வை – கூர்மை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 22 (2019)


பாடல்

மூலம்

சேயுரு வமைந்த கள்வன் செருவினை இழைக்க லாற்றான்
மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்
காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ

பதப்பிரிப்பு

சேய் உரு அமைந்த கள்வன் செருவினை இழக்கல் ஆற்றான்
மாயையின் ஒன்று காட்டி எனை இவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆர் எனக்கு ஒப்பு உண்டு என்றும்
காயம் அது அழிவு இலாதேன் கருத்து அழிகின்றது உண்டோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துமாயை நீக்கம் பெற்ற சூரபன்மன் ஈசனும்  முருகப்பெருமானும்  வேறு வேறு அல்ல ஒன்றே  என்பதை உணர்ந்தியும் தன்னிடத்தில் பற்றுக் கொள்ள வைத்ததையும் கூறும் பாடல்.

பதவுரை

சேய் ஆகிய முருகப் பெருமான் எனும் வடிவாக இருக்கக் கூடிய கள்வன் இவன்; சினத்தையும் வருத்தத்தையும் தருவதான வினைகளை நீக்க வல்லவன்; இவன் காயம் ஆகிய உடலால் அழிவில்லாதவன் எனும் கருந்து அழிக்கப்படும் போது யார் எனக்கு சரி நிகர் சமானமாக இயலும் எனும் காயம் பற்றி மாயக் கருத்து ஒருங்கே தோன்றுகின்றது; தானே மாயையின் வடிவமாக*  இருக்கும் அவன் வெளிப்படுத்த கூடியதான மாயையினால் ஒரு மாய வடிவம் காட்டி அவனிடத்தில் மையல் கொள்ள வைத்தான்.

விளக்க உரை

  • யுத்த காண்டம், சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
  • * மறைத்தல் (திரோபவம்) – கன்மம் கொண்டு பற்றுக் கொண்ட உயிர்கள் உலக அனுபவங்களில் உழன்று பக்குவம் பெறுவதற்காக சிவன் தன்னை மறைத்து தானே உலகம் என்று தோன்றும்படி காட்டுவதான தொழில் மறைத்தல் எனப்படும். சேய் ஆனதால் இது முருகப் பெருமானுக்கும் பொருந்தும்
  • செறுதல் – அடக்குதல், தடுத்தல், சினத்தல், வெறுத்தல், வருத்துதல், வெல்லுதல், அழித்தல், வேறுபடுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 28 (2019)


பாடல்

மூலம்

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

சொற் பிரிப்பு

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?

விளக்க உரை

  • எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 14 (2019)


பாடல்

காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசிவனின் எண் குணங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி அவனின் குமாரரான நீ மயக்கம் செய்தல் ஆகாது என பழிப்பது போல் புகழும் பாடல்.

பதவுரை

இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பவனும், பிறர் தூண்டுதல் இன்றி தன்னுடைய கருணையால் அனைத்தையும் கொடுத்து, மிகவும் நேசத்துக்கு உரிய அனைத்து உயிர்கள் இடத்திலும் பொருந்தி நின்று அனைத்தையும் சிருட்டித்தலை செய்பவன் ஆனவனும், முழுமையானதாகிய பூரணத்துவத்துடன் இருப்பவனுமான சிவபெருமானின் குமாரன் ஆகிய முருகப் பெருமான அறிவுரை கூறி அசுர குணங்களை மாற்றி, சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சி மிகவும் அரிதானது.

விளக்க உரை

  • போதகம் – யானையின் இளங்கன்று, அறிவுரை கூறுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 11 (2019)


பாடல்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
   சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
   சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
   வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
   வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
   இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
   இடத்தினில் அடக்கம் ஐயா
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
   வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
   மருகச ரவண முருகனே

பேரின்பக் கீர்த்தனைகள் – ஸ்ரீ கவி குஞ்சரபாரதி

கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு  அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே!  இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன்  அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன்  அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.

விளக்க உரை

  • சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சாற்றுதல் – சொல்லுதல், விளம்பரப்படுத்தல், விற்றல், நிறைத்தல், அடித்தல், உணர்த்துதல்
  • பரிபாலனம் – பாதுகாப்பு, மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
  • குஞ்சரி – பெண் யானை, முருகக்கடவுளின் தேவியான தெய்வயானை
  • வனசமலர் – தாமரை
  • *
  1. ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள் – விஷ்ணு, தாதா, மித, ஆர்யமா, ஷக்ரா, வருண, அம்ஷ, பாக, விவாஸ்வான், பூஷ, ஸவிதா, தவாஸ்தா
  2. வசு நிலையில் 8 பிரிவுகள் – தர, த்ருவ, சோம, அனில,  அனல, ப்ரத்யுஷ, ப்ரபாஷ
  3. ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள் – ஹர, பஹூரூப, த்ரயம்பக, அபராஜிதா, ப்ருஷாகாபி, ஷம்பூ, கபார்தி, ரேவாத், ம்ருகவ்யாத, ஷர்வா, கபாலி
  4. மற்றும் அஷ்வினி குமாரர்கள் (2)
  5. ஆக மொத்தம் = 33 வகையான தெய்வங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 7 (2019)


பாடல்

போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து இது பல காலம் செய்த தவப்பயன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நான், எனது எனும் அகங்காரம் கொண்டிருந்த எனது அகந்தை போனது; அதன் காரணமாக என்னுள் பேரறிவாகிய ஞானம் புகுந்தது; வலப்பக்கத்தில் இருக்கக்கூடிய தூய்மையான தோளும், வலது கண்ணும் துடித்தன; புவனம் முழுமைக்கும் சஞ்சரிக்கும் பொருள்களின் மாயைத் தன்மை நீங்கி தேவர்களுக்கு எல்லாம் நாயகன் ஆன நாயகன் வடிவம் கண்டேன்; இது பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய நற்தவத்தின் பயன் அல்லவா இது? என்று சூரபத்மன் உரைத்தான்

விளக்க உரை

  • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
  • எம்பெருமான் தன்னுடைய பேரெழில் கொண்ட திருக்கோலத்தினைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் அவனுடைய பகைவனாகிய, மாபாவியாகிய எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியம் கொள்கிறான்.
  • போதம் – ஞானம், அறிவு
  • மேய்தல் – விலங்கு முதலியன உணவுகொள்ளுதல், பருகுதல், கெடுத்தல், அபகரித்தனுபவித்தல், மேற்போதல், சஞ்சரித்தல், விடனாய்த் திரிதல்

சமூக ஊடகங்கள்