பாடல்
என்ன மயக்கம் இதுபுதுமை
இதையா ருடனே யான்உரைப்பேன்
எடுக்க முடியா வினைச் சுமையை
ஏழைத் தலைமீ தெடுத்தேற்றி
மன்னிப் பிறக்க இடமும் இன்றி
வாகாய் நடக்க வழியும் இன்றி
மயக்கக் கொடுவேல் முனைக்கானில்
வனவே டர்கள்செந் நாயுடனே
என்னை மறிக்கக் கொடுமையுடன்
எழுந்தே உழுவை பாய்ந்திடவும்
இதிலே மயங்கி அலைந்திடவிட்(டு)
எங்கே ஒளித்தாய் ஈஸ்வரியே
வண்ண மயிலே எனக்குரைத்த
வசன மதுபொய் யானதென்னோ
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அழகிய மயில் போன்றவளே! புதுமையானது இந்த மயக்கம்; எனக்கு ஏற்பட்ட இந்த மயக்க அனுபவித்தினை யாரிடம் பகிர்வேன்? எடுத்து சுமக்க இயலாததும், தாங்கிக் கொள்ள இயலாததும் ஆன வினைச் சுமையை என் தலை மேல் ஏற்றி, அந்த வினை பற்றி தொடர்வதால் இந்த மண்ணில் பிறக்க இடமும் இன்றி, விதிக்கப்பட்ட நெறி முறைகளுடன் வாகாய் நடக்க வழியும் இன்றி, புவியாகிய இந்தக் காட்டில் வன வேடர்கள் மயக்கத்தினைத் தரும் கொடிய வேலினைக் ஏந்தி, செந்நாய்கள் என்னை தடுக்கவும், கொடுமை உடைய புலி என் மீது பாய இருக்கின்ற நிலையில் மயக்கம் தந்து இதிலே என்னை அலையவிட்டு எங்கே ஒளிந்தாய் ஈஸ்வரியே, இந்த நிலை எனக்கு ஏற்படலாமா? எனக்கு நீ உரைத்த தேன் போன்ற இனிய சொல் பொய்யாகிவிட்டதா?
விளக்க உரை
- உழுவை – புலி, கடல்மீன் வகை, நன்னீர் மீன் வகை; தும்பிலி என்ற கடல்மீன், பெருமை